Saturday, 13 August 2011

சினிமாவும் தொழில்நுட்பமும்



சென்ற மாதம் (ஜனவரி 2011) நடந்த இந்தியாவின் 98ஆவது அறிவியல் மாநாட்டைப் பற்றிய ஓர் ஆவணப்படம் எடுப்பதற்காக மாநாட்டு நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் கொண்டிருந்தேன். நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி வெங்கி (வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்) மாணவர்ச்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு கேள்வி: “எல்லா உயிரினங்களுமே பூமியைப் பொறுத்தவரை கார்பனை அடிப்படையாகக் கொண்டுதான் உள்ளன. கார்பன் அல்லாத வேறு எதைக் கொண்டாவது உயிரினங்கள் பூமியில் தோன்றமுடியுமா?’’ (இந்தக் கேள்விக்குத்தான் மிகச்சிறந்த கேள்விக்கான பரிசையும் தந்தார்).
இக்கேள்விக்கான அவரின் பதில் இதுதான்: “பூமியைப் பொறுத்தவரை கார்பன்தான் அளவுக்கதிகமாக கிடைக்கிறது. கார்பனுக்கு அடுத்தபடியாகக் கிடைக்கும் சிலிக்கானைக் கொண்டுதான் கம்ப்யூட்டர்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், தற்போதைய சூழலில் பூமியில் சிலிக்கானைக் கொண்டு உயிரினங்கள் தோன்ற சாத்தியமில்லை. அப்படியே தோன்றினாலும், அது நாமறிந்த உயிராக இருக்குமா என்பது சந்தேகம்.’’ இறுதியில் அவர் நண்பர் நகைச்சுவையாகச் சொன்னதைக் குறிப்பிட்டார். “பின்னாளில் சிலிக்கானை அடிப்படையாகக் கொண்ட வாழ்வைத் தோற்றுவிக்கத்தான், தற்போதைய கார்பன் அடைப்படையிலான உயிரினங்கள் துண்டுகோலாக உள்ளன.’’
இவ்வாறு சொன்னதின் அர்த்தம், மனிதர்களாகிய நாம் எல்லொரும் கார்பனால் உருவாக்கப்பட்டவர்கள். ஆனால், நம்மைப் படிப்படியாக சிலிக்கானை அடிப்படையாகக் கொண்ட கம்ப்யூட்டர்கள் கோலொச்ச தொடங்கிவிட்டன என்பதுதான் அர்த்தம்.
மேற்சொன்னது, நகைச்சுவையாக இருந்தாலும், ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் இதில் நடுங்க வைக்கும் உண்மைகளும் உண்டு.
நம் வாழ்வு, சிந்தனை, செயல் எல்லாமே நாளுக்கு நாள் தொழில்நுட்பத்தைச் சார்ந்தே இருப்பது கவலையளிப்பதாகத்தான் உள்ளது.
ஒரு மனிதனின் மனவளர்ச்சிக்கும், சிந்தனைத் திறனுக்கும் அடிப்படையாய் அமைவது அவனது சமூக வாழ்வு. இன்று தொழில்நுட்பமானது சமூக வாழ்வைக்கூட அபகரித்துக் கொண்டது. இன்றைய தலைமுறை, சமூக வாழ்வைக்கூட அதற்கான இணைய தளங்களில்தான் வாழ்கிறது. தங்களின் பிரபலங்களை, அவலங்களை, அசிங்கங்களைக்கூட அவர்கள் சமூக இணைய தளங்களில்தான் பகிர்ந்து கொள்கிறார்கள்.
“ஒவ்வொரு தொழில்நுட்பமும் கண்டுபிடிக்கப்படும்போது, முதலில் அதை சாத்தான்கள்தான் கையிலெடுத்துக் கொள்கின்றன. அப்போது தேவதைகளோ அதை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்தலாம் என்று விவாதித்துக் கொண்டிருக்கின்றன’’ என்று யாரோ சொல்லியிருப்பது உண்மைதானோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
பல நேரங்களில் முற்போக்கான சமூகச் சிந்தனை கொண்டவர்கள் நவீன தொழில்நுட்பங்களை இப்படித்தான் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சினிமாவைப் பொறுத்தவரை சென்ற இதழில் பார்த்ததுபோல், தொழில்நுட்பம் அதன் நுகர்தலில்தான் பாதிப்பு ஏற்படுத்தியதே தவிர, அதன் படைப்பில் பெருமளவு ஏற்படுத்தவில்லை என்பதுதான்.
சினிமாவின் சக்தியை உணர்ந்தவர்கள் அதைக் கையிலெடுக்க வேண்டும் என்று பல காலமாகச் சொல்லி வருகிறோம். மலிவான டிஜிட்டல் வீடியோ கேமராக்கள் வந்தவுடன் ஒரு சிலர் அதைக் கையிலெடுக்கவும் செய்தார்கள். ஆனால், அந்தக் கேமராக்களைக் கொண்டு அவர்கள் உருவாக்கியப் படைப்புகளைப் பார்க்கும்போது பல நேரங்களில் அவர்கள் ஏன்தான் அதைக் கையில் எடுத்தார்களோ என நினைக்கத் தோன்றுகிறது.
சினிமா சக்தி வாய்ந்த சாதனம் என்பது மட்டும்தான் அவர்களுக்குத் தெரியும். ஆனால், அந்தச் சக்தி எப்படிப்பட்டது, எப்படி வெளிக்கொணர்வது, ஒரு நல்ல கதையைச் சினிமாவாக எப்படி அந்த சக்தியைக் கொண்டு மாற்றுவது என்பது பற்றியெல்லாம் அவர்களுக்கு ஏதும் தெரிந்திருக்கவில்லை. 
சினிமாவின் தொழில்நுட்பம் பற்றிய அறிவு, சினிமாவின் இந்தச் சக்தியை அறிந்துகொள்ள மிகவும் உதவுகிறது.
சினிமாவின் தொழில்நுட்பம் என்று சொல்லும்பொழுது வேறொரு உலகை உருவாக்கும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தைப் பற்றிச் சொல்லவில்லை. மாறாக, கதை சொல்லும்பொழுது, பார்வையாளன் மனதில், உணர்வில் சிறு சிறு சலனங்களை எப்படி உண்டாக்குவது என்பதை அறிவதுதான். அதை எப்படி இலகுவாக, மென்மையான கவிதை வரிகளைப் போல வெளிப்படுத்துவது என்பதுதான்.
ஒரு சினிமா கலைஞனுக்கு, சினிமாவின் தொழில்நுட்பம் பற்றிய அறிவு அவன் மூளையில் இருக்கக்கூடாது. மாறாக, அவன் உணர்வில் இருக்கவேண்டும். அப்போதுதான் சினிமா என்கின்ற மொழியை கதை சொல்ல கையில் எடுக்கும்போது, தொழில்நுட்பம் என்ற உளி கொண்டு அதற்கு அழகியலைச் சேர்க்க முடியும்.
சினிமாவில் அடிப்படை தொழில்நுட்பத்தைக் கண்ணுக்குத் தெரியாத அழகியலாய் உபயோகப்படுத்துவது என்பது எல்லைகளற்ற பணி.
சமீபத்தில் டெலிவிஷனில் வரும் ஒரு விளம்பரப் படம் பலரின் மனதைக் கொள்ளை கொண்டது. ஒரு வயதான, மிடுக்கான பாட்டி, தன் கணவன் முன்பு ஒரு சினிமாப் பாடலைச் சகல பாவங்களோடும், உணர்வுகளோடும், உடல் அசைவுகளோடும் பாடுகிறாள். அதை அவள் பேரன் சிறுவன் பார்த்து விடுகிறான். பாட்டிக்கு லேசான சங்கடம். சாப்பாடு மேiஜையில் எல்லொரும் இருக்க, சிறுவன் அந்தப் பாடலை முணுமுணுக்க, பாட்டியும் தாத்தாவும் அதிர்ச்சியடைய, பாட்டியிடம் சாக்லேட்டை லஞ்சமாகப் பெறுகிறான். அடுத்த காட்சியில், தெருவில் பாட்டியைப் போல் நடனமாடி ஐஸ்கிரீமை லஞ்சமாகப் பெறுகிறான். மீண்டும் வீட்டில் சிறுவன் பாடலை முணுமுணுக்கும்பொழுது, பாட்டி வெறுப்போடு சாக்லேட்டை பையிலிருந்து எடுக்க, சிறுவனின் அப்பா, பாட்டியிடம் (தன் அம்மாவிடம்) இந்தப் பாடல், ஆடல் விசயம் எல்லொருக்கும் தெரியும்’’ என்கிறார். உடனே பாட்டி முறைப்பாக சாக்லேட்டை மீண்டும் தன் கைப்பையில் போட, சிறுவன் வெறுத்துப்போய் வெளியேறுகிறான்.
ஒவ்வொரு முறையும் தொலைக்காட்சியில் இவ்விளம்பரம் வரும்போது அந்த சில நொடிகள் அதை லயித்துப் பார்ப்பேன். (இந்த விளம்பரப் படம் எதைப் பற்றியது என்று கேட்டால், பலர் முழிக்கலாம். இதுபோன்ற சுவையானக் கதையை விளம்பரத்தில் சொல்லும்போது விளம்பரத்துக்கான பொருள் மறக்கப்படுவது எப்போதுமே உள்ள ஆபத்து.)
அதேபோல், சமீபத்தில் வந்த ஒரு தமிழ்ப்படப் பாடலில், கதாநாயகி முட்டைக் கண்களோடு ஒரு கிராமத்துப் பெண்ணாக, பாவாடைத் தாவணியில், கையில் புத்தகங்களோடு நடந்து செல்வாள். அவளை விரும்பும் தாடிக்கார இளைஞன் சைக்கிளில் அவளைப் பார்த்துக்கொண்டே செல்வான். அவளும் பாடல் ஒலிக்கும் பின்னணியில் அடிக்கடி திரும்பி தன் முட்டைக் கண்களால் அவனைப் பார்ப்பாள். நெகிழ்ச்சியும் இதமும் கலந்த காட்சிகள் அவை.
இந்த நெகிழ்ச்சியான இதத்திற்கும் தொழில்நுட்பத்திற்கும் தொடர்பு உண்டா என்று கேட்டால், நிச்சயம் உண்டு என்பேன்.
இது போன்ற காட்சிகளால் கவரப்பட்டு அதேபோன்ற காட்சிகளைத் தங்கள் படத்தில் எடுத்த இயக்குநர்களை அறிவேன். ஆனால், அந்த நெகிழ்வும் இதமும் அந்தக் காட்சிகளில் இருக்காது. காரணம், காட்சியில் இழையோடும் அழகியலுக்கும் அதை எடுத்த இயக்குநரின் தொழில்நுட்ப அறிவுக்கும் உணர்வுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு.
சினிமா என்பதே காட்சிரீதியான சிந்தனை என பல முறை சொல்லியிருக்கிறேன். அதே சினிமாவை உருவாக்குவது என்பது காட்சிரீதியான சிந்தனையை முறைப்படுத்தப்பட்ட காட்சித் துண்டுகளாக உணர்ந்து, அவற்றை ஊனையும் உயிரையும் கொடுத்து பலரின் உதவியோடு கேமராவில் பதிவு செய்வது, பின்னர் அவற்றை துவக்கத்தில் உணர்ந்த காட்சிரீதியான சிந்தனைப்படி தொகுப்பது.
சினிமாவை ரசிப்பது, உருவாக்குவது என்பது தொடர்ச்சியான ஒரு செயல்பாடு. இந்த தொடர்ச்சியான செயல்பாட்டில் தொழில்நுட்பரீதியான சிந்தனை என்பது வளர்ந்துகொண்டே இருக்கும் ஒன்று.
சினிமாவின் வித்தகர்கள் என சொல்லப்படும் இயக்குநர்களுக்கு, தங்களின் தொடர்ந்த தொழில்நுட்ப ரீதியான சிந்தனையால் வளர்ந்துவரும் நவீன தொழில்நுட்பங்கள் அவர்களுக்கு வசியப்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற அமெரிக்க திரைப்பட இயக்குநரான பிரான்சிஸ் ஃபோர்டு கொப்போலா (திக்ஷீணீஸீநீவீள திஷீக்ஷீபீ சிஷீஜீஜீஷீறீணீ) தற்போது முழுக்க முழுக்க சுதந்திரமான திரைப்பட இயக்குநராக செயல்படுகிறார்.
அவரின் வளர்ந்து வரும் திராட்சை ரச மது தொழிற்சாலை அவருக்குக் கோடிகளைக் கொட்டுகிறது. சமீபத்திய அவரது படங்களெல்லாம் அவரின் சொந்த தயாரிப்புகளாகும். அவரின் சமீபத்திய படத்தின் தலைப்பு ‘ஜிஷ்வீஜ்வ ழிஷீஷ் ணீஸீபீ ஷிரஸீக்ஷீவீளமீ’. துருக்கியில் ஒரு முறை அவர் மதுவின் போதையில் இருந்தபோது அவருக்கு உண்டான கனவை அடிப்படையாகக் கொண்டது இப்படம். இப்படத்தில் ஒரு சிறு பகுதியை 3ஞி தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தி எடுத்துள்ளார். அதை ஏதோ ஒரு வித்தைபோல் அல்லாமல், கதையின் தேவைக்காக அத்தொழில்நுட்பத்தை உபயோகித்துள்ளார். அவருடைய கனவெல்லாம், பெர்க்மெனை போன்று தன் சொந்த கதைகளை, கனவுகளை படமாக்குவதுதான். ஆனால், அவரின் 30ஆவது வயதிலேயே அவரின் ‘காட் ஃபாதர்’ படம் மாபெரும் வெற்றிப்பெற்றதன் காரணமாக அவரால் அவர் விரும்பியபடி செய்ய முடியவில்லை.
தன் 45 ஆண்டுகால சினிமா அனுபவத்திற்குப் பின், தன் திரைப்படத் தொழிலின் கோட்பாடாகச் சொல்வது இதைத்தான்:
 சொந்தமாகத் திரைக்கதையை எழுதி இயக்க வேண்டும்.
 தற்போது உபயோகத்தில் இருக்கும் மிக நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு அப்படத்தை உருவாக்க வேண்டும்.
 படத்திற்கான முதலீட்டைத் தானே செய்யவேண்டும்.
இதுபோன்றதொரு சூழலும் வரமும் எல்லா இயக்குநர்களுக்கும் அமையாது.
அவர் இன்றளவும் தன்னை சினிமாவின் மாணவராகவே கருதுகிறார். ஒவ்வொரு நாளும் சினிமா தனக்குப் புதிய விஷயங்களைக் கற்றுத் தருவதாகச் சொல்கிறார். தொழில்நுட்ப வளர்ச்சியை உன்னிப்பாகக் கவனிப்பவர். குருசோவா, போலன்ஸ்கி போன்ற இயக்குநர்களைச் சினிமாவின் மேதைகள் என்று கருதுபவர். தன் கதைகளையும் கனவுகளையும் சினிமாவில் சொல்வதற்கு எப்போதும் சரியான தொழில்நுட்பத்தைத் தேடுபவர். சினிமா மிக இளமையான கலையாக இருப்பதாலேயே புதிய விசயங்களை, புதிய தொழில்நுட்பங்களைத் தனக்குக் கற்றுத்தருவதாகச் சொல்கிறார்.
சினிமாவின் தொழில்நுட்பத்தைக் குறித்து மிக ஆழமான கருத்துகளை அடிக்கடி இளம் இயக்குநர்களோடும் சினிமா மாணவர்களோடும் பகிர்ந்து கொள்வதில் இவருக்கு அலாதி பிரியம்.
சினிமா ஒரு கலையாக இருந்து, பின் சந்தைப் பொருளாய் மாறியதில் இவருக்கு ரொம்பவே வருத்தம். அது குறித்து மிக அழகாகக் கூறுகிறார்:
“சினிமாவின் தொடக்க காலத்தில் யாருக்கும் சினிமா எடுக்கத் தெரியவில்லை. அசையும் பிம்பங்களும், ஓடும் ரயிலும், பறக்கும் பறவைகளும் மட்டுமே போதுமான மகிழ்ச்சியை அவர்களுக்குத் தந்தன. சினிமாவின் மொழி என்பதே தற்செயலாய், விபத்தாய் நிகழ்ந்த ஒன்று. என்ன செய்வதென்று தெரியாமல் சில இயக்குநர்கள் செய்த சோதனையின் விளைவாகவே சினிமா மொழி உருவானது. ஆனால், 15-20 ஆண்டுகளுக்குப் பின் சினிமா சந்தைப் பொருளாய் ஆனபோது இந்தச் சோதனை முயற்சிகள் நின்று போயின.’’
சினிமாவின் தொடக்க காலத்தைக் குறித்து மட்டும் கொப்போலா இப்படிச் சொன்னாலும், இது சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டிலும் உண்மையாகத்தான் உள்ளது.
சினிமாவின் வளர்ச்சியும், சினிமாவின் தொழில்நுட்ப வளர்ச்சியும் எப்போதெல்லாம் நிகழ்கிறது என்று உன்னிப்பாகப் பார்த்தால், அப்போதெல்லாம் சினிமாவில் சிலர் சோதனை முயற்சிகளை மேற்கொண்டிருப்பர்.
துணிச்சலான முயற்சிகளே வளர்ச்சிக்கு இட்டுச்செல்லும் என்பார்கள். இது வேறு எந்தக் கலைக்குப் பொருந்துகிறதோ இல்லையோ சினிமாவுக்கு நிச்சயமாகப் பொருந்தும்.
சினிமா சந்தைப் பொருளான பின்பு, தயாரிப்பாளர்கள்தான் பெரும்பாலும் எல்லாவற்றையும் முடிவு செய்கிறார்கள். அவர்களின் ஒரே நோக்கம் பணம் சம்பாதிப்பதுதான். அதற்கு இடையூறாக எதையும் அவர்கள் விரும்புவதில்லை. குறிப்பாக, சோதனை முயற்சிகளை விரும்புவதே இல்லை.
தயாரிப்பாளரிடமோ, தயாரிப்பு நிறுவனத்திடமோ சென்று நான் இதுவரை யாரும் செய்யாத ஒரு திரைப்படத்தை உருவாக்கப்போகிறேன் என்று சொல்லிப் பாருங்கள். அவர்கள் உங்களுக்கு வெளியே போகத்தான் வழி காட்டுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை ஓடுகின்ற படம், பணம் பண்ணுகின்ற படம் என்றால் ஏற்கனவே வந்து வெற்றி பெற்ற படத்தின் பாணியில் இருக்கவேண்டும் என்பதுதான்.
இதில் ஒரு விநோத முரண்பாடு உள்ளது. தொழில்நுட்ப ரீதியாக, நுகர்கின்ற முறைரீதியாக சினிமாவின் வளர்ச்சி மிகவேகமாக உள்ளது. ஆனால், கதை சொல்லும் பாணியில், கருப்பொருளைத் தேர்வு செய்யும் பாணியில் சினிமா இன்றும் பழைய சினிமாவாகவே உள்ளது. அத்திப் பூத்தாற்போல் அவ்வப்போது சிலர் எடுக்கும் துணிச்சலான முயற்சிகள்தான் சினிமாவை முன்னோக்கி எடுத்துச் செல்கின்றன.
ஒரு புதிய விஷயத்தைச் சினிமாவில் எப்படிச் சொல்வது என்று நாம் தவிக்க வேண்டும். அப்படி சொல்ல முடியாதபோது அதற்கான புதிய முறையை எப்படியாவது கண்டுபிடித்தாக வேண்டும். அப்படித்தான் சினிமாவை முன்னெடுத்துச் செல்கின்ற தொழில்நுட்பங்கள் உருவாகின்றன.
ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதம் வந்தால், அந்த ஆண்டுக்கான ஆஸ்கர் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட படங்களைத் தேடி, தேர்ந்தெடுத்துப் பார்ப்பேன்.
கடுமையான வேலைப் பளுவுக்கு மத்தியிலும் இந்த மாதம் ஆஸ்கருக்காகப் பரிந்துரைக்கப்பட்ட இரு படங்களைப் பார்த்தேன். இரண்டுமே மனநிறைவைத் தந்த படங்களாக இருந்தன. முதல் படம் கிங்ஸ் ஸ்பீச் . டாம் `ஹீப்பர் இயக்கிய இந்தப் படம் சரிந்து கொண்டிருந்த இங்கிலாந்து திரைப்படத் துறையைச் சற்று நிமிர்த்தியது என்று சொல்லலாம். உலகெங்கும் ஜனரஞ்சகமாகவும், விமர்சன ரீதியாகவும் புகழப்பட்ட படம். வரும் வாரம் நடைபெற இருக்கும் ஆஸ்கர் பரிசளிப்பு விழாவில் குறைந்தது நான்கைந்து ஆஸ்கர்களையாவது அள்ளிச் செல்லும் என எதிர்பார்க்கிறேன் (இதை அச்சில் நீங்கள் படிக்கும்போது அது நடந்து முடிந்த ஒன்றாக இருக்கும்).
சினிமாவில் தொழில்நுட்பம் என்பது சொல்ல வந்த புதிய விஷயத்தை, புதிய முறையில் சொல்வதற்கான போராட்டம் ஆகும். அது இப்படத்தில் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் க்ளோசப் காட்சிகள் மிகப்பிரமாதமாகச் சொல்ல வந்த விஷயத்தின் வீர்யத்தை வெளிக்கொணர்வதாக உள்ளன. படத்தின் கதை என்பது இதுதான்:
இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜின் இரண்டாவது மகன் ஆறாம் ஜார்ஜூக்கு சிறு வயதிலிருந்தே திக்கு வாய். தன் அண்ணன்தான் அடுத்த மன்னன், தான் மன்னராகப் போவதில்லை என்பதால் அது குறித்து பெரிதாகக் கவலைப்படவில்லை. ஆனால், சந்தர்ப்பவசத்தால் ஆறாம் ஜார்ஜ் மன்னனாக நேரிடும்பொழுது, திக்கு வாய் பெரிய பிரச்சினையாக உள்ளது. அவன் அன்பான மனைவியின் உதவியால், ஒரு புதிய பேச்சுக்கலை பயிற்சி நிபுணரைப் பார்க்கச் சம்மதிக்கிறான். படம் முழுவதும், மன்னருக்கும் பேச்சுக்கலைப் பயிற்றி நிபுணருக்கும் இடையேயான உறவைப் பற்றியது. இறுதியில் மன்னன் எப்படி தன் பிரச்சினையில் இருந்து மீண்டு, யுத்த காலத்தில் மக்களுக்கு பல அற்புத உரைகளை நிகழ்த்துகிறான் என்பதுதான் கதை.
படத்தின் துவக்கமே மன்னன் ஆறாம் ஜார்ஜின் பேச்சைக் கேட்க அமைதியாக காத்திருக்கிறது. மன்னன் முகத்தில் தீவிர சிந்தனை, குழப்பம். தன்னால் மைக் முன்னால் திக்காமல் பேச முடியுமா என்பதுதான் அது.
வைட் ஆங்கிள் லென்ஸில் எடுக்கப்பட்ட மன்னனின் முகம் மற்றும் மைக்கின் க்ளோசப்புகள் சினிமாவுக்குப் புதிய ஒன்று.
இறுதியில், மன்னனால் பேச முடியாதபோது, மன்னனின் க்ளோசப் முகத்தில் இயலாமையும், கோபமும் வெடிக்கின்றன. மனைவியின் க்ளோசப் முகத்தில் அமைதியாகக் கண்ணீர் வழிந்தோடுகிறது. படம் அங்கிருந்துதான் தொடங்குகிறது. படத்தின் இறுதியில் அதே க்ளோசப்புகளில் மன்னன் மக்களுக்கு நம்பிக்கைத் தரும் யுத்த கால உரையை அற்புதமாக நிகழ்த்துகிறான்.
இன்னொரு படம் பிளாக் ஸ்வான். டேரன் அஃரோனஸ்கி இயக்கிய இப்படம் தன் கலையில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஓர் இளம் பாலே நடனக்காரியைப் பற்றியது.
ஙிறீணீநீளீ ஷிஷ்ணீஸீ புகழ் பெற்ற பேலே நிகழ்ச்சி. அதில் இளவரசனின் காதலைப் பெற இரு பெண்கள் போட்டி போடுகின்றனர். ஒருத்தி வெள்ளை அன்னம், இன்னொருத்தி கருப்பு அன்னம். இரண்டு கதாபாத்திரங்களை ஒரே நடனக்காரி மாறி மாறி செய்ய வேண்டும். இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க பல நடிகைகளிடையே போட்டி. இந்தப் போட்டியில் கதாநாயகி எப்படி வெற்றிப் பெறுகிறாள், இறுதியில் அதற்காகத் தன்னையே தியாகம் செய்கிறாள் என்பதுதான் கதை.
இந்த வெற்றிக்காக அவள் கடந்து செல்லும் அனுபவங்கள் மெய் சிலிர்க்க வைக்கும். பல நேரங்களில் உண்மையா, அவளின் மனபிராந்தியா என்று குழம்ப வைக்கும் அளவில் அவளின் அர்ப்பணிப்பு.
அவளின் கற்பனைகளை, குழப்பமான மனபிராந்திகளைச் சினிமாவின் தொழில்நுட்பத்தால் மட்டுமே காண்பிக்க முடியும் எனும் அளவில் படத்தின் இயக்குநர் படம் பிடித்திருக்கிறார்.
படத்தில் கதாநாயகியாக நடித்த நடாலி போர்ட் மேன் ஏற்கனவே கடந்த சில மாதங்களில் இக்கதாபாத்திரத்திற்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார். இந்த ஆண்டின் ஆஸ்கர் விருது இவருக்குக் கிடைக்காமல் போனால் அது இந்த ஆண்டின் மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கும்.
நடாலி இப்படத்திற்காக எட்டு ஆண்டுகள் காத்திருந்து, ஒரு வருடம் தொடர்ந்து தினசரி ஐந்து மணி நேரம் பாலே நடனப் பயிற்சி பெற்று, கடும் உணவு கட்டுப்பாட்டில் உடலை வளையும் மூங்கிலாக மாற்றி இப்படத்தில் நடித்துள்ளார்.
ஒரு கலைஞனுக்குக் கலை என்பதே கடும் பயிற்சி, முழுமையான அர்ப்பணிப்பு என்பதுபோல் நடாலி இப்படத்தில் பணியாற்றியுள்ளார். எத்தனை சந்தைக்கான சினிமாவாக மாறினாலும், ஹாலிவுட்டில் இதுபோன்ற கலைஞர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சினிமாவில் தொழில்நுட்பம் என்பது, அதை உருவாக்கும் கலைஞன் எடுக்கும் துணிச்சலான முயற்சியின் பாகமாக இருக்க வேண்டும். மாறாக, அதிநவீன உபகரணங்களோ, கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸோ அல்ல. தொடர்ந்து இது குறித்து வரும் இதழில் பார்ப்போம்.
- எம்.சிவகுமார்.

லாவணி - ஆவணப்படம்



அருகிவரும் அபூர்வ நாட்டுப்புறக் கலையான லாவணி பற்றிய ஒரு ஆவணப்படத்தை தஞ்சைத் தமிழ்க்கூடம் வெளியிட்டுள்ளது. தோழர் தஞ்சை சாம்பான், திருமதி பரிமளா ராஜகுமாரன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியவர் எஸ்.ராஜகுமாரன். முனைவர்கள் கு.முருகேசன், ஆர்.விவேகானந்த கோபால் இருவரும் இந்த லாவணிக் கலையின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி பற்றி இடையிடையே விளக்கிப் பேசியுள்ளனர். தஞ்சை ரெங்கராஜன் குழுவினரின் தப்பாட்டமும் சிறிது இணைக்கப்பட்டுள்ளது.
எதிர் எதிராக அமர்ந்து டேப் அடித்துப் போட்டியிட்டுப் பாடும் இந்த லாவணிக்கலை சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் வந்ததாகும். காமதகனம் என்றும், எரிந்த கட்சி-எரியாத கட்சி என்றும் தமிழகம் முழுவதும் இக்கலை பரவியது. பழங்கலைகள் ஆதரிப்பாரின்றி அழிந்து வருகின்றன. இவற்றைப் பாதுகாப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டுமென்ற வேண்டுகோள் இதில் விடுக்கப்பட்டுள்ளது.
பழைய சக்கரவர்த்தித் திருமகள் திரைப்படத்தில் கலைவாணர் என்.எஸ்.கே.யும், எம்ஜிஆரும் டேப் அடித்து லாவணி பாடுவார்கள். கேலியும், நையாண்டியும், எக்காளமும், ஆரவாரமுமாய் அதை மக்கள் மிகவும் ரசித்துக் கொண்டாடினர். காலத்தோடு, குறிப்பாக சமகாலப் பிரச்சனைகளோடு இணையாத கலைகள் தான் அழிகின்றன. லாவணியிலும் சமகால மக்களின் வாழ்க்கை, இன்பதுன்பங்கள், வெற்றி தோல்விகளை உள்ளடக்கமாக உருவாக்கினால் மக்கள் ரசிக்கவே செய்வர். எத்தனை காலத்திற்கு மன்மதன் எரிந்த கதையையே அல்லது ஒரே ராகத்தையே மக்கள் கேட்டுக் கொண்டிருப்பார்கள். இசை வடிவங்களும், இசைக் கோர்வைகளும், கருவிகளும் வேகமாய் மாறி வரும் காலமிது.
லாவணிக் கலைஞர்களான எம்.கே.அப்துல்காதர், ஆர். சச்சிதானந்தமும் அருமையாகப் பாடியுள்ளனர். ஆனால் புதிய தலைமுறையினருக்கு பாடலோ, கதையோ ஒன்றும் தெரியாது என்பதால் இது புரியாது.
எனவே லாவணிக் கலையைப் பாதுகாக்க வேண்டுமானால் அதற்கு முதலில் கவிஞர்கள் முனவர வேண்டும். நவீன கால உள்ளடக்கம் கொண்ட பாடல்களைப் புனைந்து தர வேண்டும். லாவணிக் கலைஞர்கள் அப்படி மேடைகளில் பாடி, பேசி வந்தால் நிச்சயமாக மக்கள் ஆதரிப்பார்கள். இக்கலையும் அழியாதிருக்கும். ஆனால் இப்படத்தை மிகவும் திறம்பட எடுத்துள்ள தஞ்சைத் தமிழ்க்கூடத்தை மனமாரப் பாராட்ட வேண்டும்.
வெளியீடு:-
தமிழ்க்கூடம்
புதிய எண்: 18/3 இராமானுஜம் தெரு
தி.நகர், சென்னை - 600017
விலை ரூ.110-

ஆவணப்படங்கள் - 3


“உண்மைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. எனவே அதை வெளிப்படுத்தும் முறைகளும் மாற வேண்டும்” என்று பெட்ரால்ட் பிரெக்ட் கூறியுள்ளார். அதனால் தான் அவர் தன் நாடகங்களில் அதுவரை இல்லாத பல புதுமைகளைப் புகுத்தினார்.
சினிமாவுக்கும் இது பொருந்தும். புதிய முறையில் மாறிக்கொண்டே யிருக்கும் உண்மையை மாறிக்கொண்டே இருக்கும் மனித மனதிற்கேற்ப சொல்ல முயற்சித்தபோதுதான் ஆவணப்படங்கள் ஒரு கலையாகப் பரிண மித்து பல வடிவங்களைப் பெற்றது.
சினிமா பிறக்கும்போது ஆவணப் படமாகத்தான் பிறந்தது. துவக்கத்தில் வெறும் நிகழ்வுகளைப் பதிவுசெய்த சினிமாவில் ஆவணப்படம் என்பது முறையாக, கலையாக மாறியது பின்னாளில் தான். பல பிரபல திரைப்பட இயக்குநர்கள் தங்கள் தொழிலை ஆவணப்படங்களில்தான் தொடங்கி உள்ளனர். பல பிரபல திரைப்பட இயக்குநர்கள் தங்கள் கதைப்படங்களுக்கு இடையே ஆவணப் படங்களையும் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். சத்யஜித்ரே, அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் கதைப்படங் களில் காட்டிய அதே ஆர்வத்தோடு ஆவணப் படங்களையும் எடுத்திருக் கின்றனர்.
உலகப்புகழ் பெற்ற போலந்து இயக்குநர் கீஸ்லோவ்ஸ்கி தொடக்க காலத்தில் பல ஆண்டுகள் போலந்து அரசுக்காக ஆவணப்படங்களை எடுத்தவர்தான்.
சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டில் ஆவணப் படங்களைப் பற்றி பேசும்போது, கீஸ்லோவ்ஸ்கி எனக்கு மிக முக்கியமான நபராக தெரிகிறார். காரணம்- இத்தொடரின் தொடக்கத்தில் நான் சொன்ன கருத்தான “இந்நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சனை என்பது, மக்கள் - குறிப்பாக இளம் வயதினர் வெகு விரைவாக எல்லாவற்றிலும் சலிப் படைந்து விடுகின்றனர்” என்பது ஆவணப்படங்களைக் குறித்து விவாதிக்கையில் மிக முக்கியமான ஒன்றாக மாறுகிறது. தற்போதைய தொழில்நுட்ப காலக்கட்டத்தில் எதைச் சொன்னாலும் விரைவாகச் சொல், சுருக்கமாக சொல், மிக முக்கியமாக சுவைபடச் சொல் என்பது எழுதப் படாத விதியாகிவிட்டது.
இன்று ஆவணப்படங்கள் என்பது கதைப் படங்களுக்கு நிகராக - முடிந் தால் கதைப் படங்களைக் காட்டிலும் ஆர்வம் தூண்டும் வகையில் சொல்வது என்றாகிவிட்டது.
அப்படிப்பட்டப் படங்கள்தான் இன்று உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. நான் மிக முக்கியமான விஷயத்தை என் படத்தில் சொல் கிறேன் என்று நினைத்துக்கொண்டு சுரத்தே இல்லாமல் சொன்னால், அப்படம் எடுக்கப்படும் பொழுதே இறந்துவிடும். இதைத்தான் கீவ்ஸ் லோவ்ஸ்கி அழகாகச் சொல்கிறார் “சினிமாவில் கதைப்படம், ஆவணப்படம் என்று இரண்டுவகை கிடையாது. ஆவணப்படங்களுக்கே உரிய கட்டுப் பாடுகளை மீறி வெளிப்படுவதுதான் கதைப் படம்”. கம்யூனிஸ போலந்து அரசுக்காக பல ஆவணப்படங்களை எடுத்த அவர் சொல்கிறார். “நாங்கள் அப்போது ஆவணப்படங்கள் எடுத்த போது, அதற்கென ஒரு தேவை இருந்தது. உலகை விவரித்துக் காட்டுவது என்பது அப்போது மிகுந்த பரவசத்தைத் தந்தது. கம்யூனிச உலகம் எப்படி இருக்க வேண்டும், அது எப்படி இருந்தது என்பதை உலகுக்குக் காட்டினோம். ஒரு விஷயத்தை விவரித்துக் காட்டினால்தான் அது அதிகாரப் பூர்வமாக உள்ளது என்று அர்த்தம். அதற்காக ஆவணப்படஙகள் மூலம் அந்த விஷயங்களுக்கு உயிர் கொடுத்தோம்.
1974ல் முதல் காதல் (First love) எனும் ஆவணப்படத்தை கீவ்ஸ்லோவ்ஸ்கி எடுத்தார். அதில் அவரது கேமரா எப்போதும் திருமணம் ஆகாத ஒரு காதல் ஜோடியின் பின்னே சென்றது. பின்னர் அப்பெண் கருவுருகிறாள். பின்னர் அவர் கள் திருமணம் செய்து கொள்கின்றனர். அவளுக்குக் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறப்பை அப்படியே காட்டுகிறார். பிறந்த குழந்தையை கையில் எடுத்த தந்தைக்கு கட்டுக்கடங்காமல் கண்ணீர் வெளிப்படுகிறது. கீவ்ஸ்லோவ்ஸ்கியால் அந்த உண்மையான கண்ணீரை அந்த இளம் தந்தை யின் அந்தரங்கத்தை படம் பிடிப்பது மிகவும் கஷ்ட மாக இருந்தது. இன்னொருவரின் அந்தரங்கத்துள் நுழைய எனக்கு என்ன உரிமை உள்ளது என்கின்ற கேள்வி அவரைத் துளைத்தெடுத்தது. அந்த ஒரு கணத்தில்தான் ஒரு நெறிமுறையைப் பின்பற்றும் விதமாக ஆவணப் படங்களிலிருந்து கதைப்படங் களுக்குச் செல்ல தீர்மானித்ததாகச் சொல்கிறார்.
“எல்லாவற்றையும் ஆவணப்படத்தில் விவரித்துக் காட்ட முடியும் என்பது சில சமயம் முடியாத ஒன்று. காதலைப்பற்றி ஒரு ஆவணப் படம் எடுக்கும் பொழுது, ஒரு எல்லை வரைதான் என் காமிராவால் காதலர்களைப் பின்தொடர முடியும். படுக்கை அறைக்குள் நிஜக் காதலர்கள் நுழைந்த பின் அவர்களை என்னால் காட்ட முடியாது. அதற்கு எனக்கு உரிமையும் இல்லை. ஆனால் அவர்களைக் காட்ட எனக்கு விருப்பம்” - இதுதான் ஆவணப்படங்களின் பிரச்சனை என கீவ்ஸ்லோவ்ஸ்கி கூறுகிறார். இதுவே கதைப் படமாக இருந்தால் என் விருப்பப்படி காட்ட முடியும். உடைகளை களைய சம்மதிக்கும் நடிகையை மட்டும் நான் தேர்வு செய்ய வேண்டும்.
கோட்டுபாடு ரீதியான இப்பிரச்சனையை கேமரா பஃப் (Camera Buff) என்ற கதைப் படமாக 1974ல் கீவ்ஸ்லோவ்ஸ்கி எடுத்தார். இப் படம் ஆவணப்படம் எடுக்கும் ஒருவனைப் பற்றிய கதைப்படம். இப்படத்தில் கதாநாயகனுக்கு கேமரா மீதுள்ள தீராத காதலால் வேலை, மனைவி, குழந்தை எல்லாமே பறிபோகிறது.
நீண்டகால ஆவணப்படம் எடுத்த அனுபவம் இல்லாமல் யாராலும் இப்படிப் பட்ட ஒரு அற்புதமான படத்தை எடுத்திருக்க முடியாது.
சென்ற இதழில் நான் விவரித்திருந்த “இன்ஸைட் ஜாப் (Inside job)”, நீரோஸ் கெஸ்ட்ஸ் (Nero’s Guests) போன்ற ஆவணப் படங்கள் அற்புத மான படைப்புகளாகும். ஆனால் இன்று ஆவணப் படங்கள் ஒதுக்கப்பட்ட, அவ்வளவாக அங்கீ கரிக்கப்படாத கலை வடிவங்களாகவே உள்ளன.
சினிமாவின் இந்த இரண்டாம் நூற்றாண்டில், கதைப்படங்கள் எதிர்கொள்கின்ற அதே பிரச்சனை களை, ஆவணப்படங்களும் எதிர்கொள்கின்றன. தற்போது சர்வதேச சந்தைக்காக எடுக்கப்படும் பல ஆவணப்படங்கள் உள்ளன. பல நேரங்களில் இத்தகைய ஆவணப்படங்களுக்குக் கிளர்ச்சி யூட்டும் விஷயங்கள் கருப்பொருளாக அமை கின்றன. குழந்தை பாலியல் தொழிலாளர்கள், அரவாணிகள், யுத்தக் கொடுமைகள் ... என்று சர்வதேச சந்தையை மனதில் வைத்து ஆவணப் படங்கள் எடுக்கப்படுகின்றன. பெரும்பாலும் இப்படங்களில் ஆழமோ, அக்கறையோ இருப்ப தில்லை. இன்னொரு புறம் அறிவியல், பிரபஞ்சம், விலங்குகள் ... என ஆர்வமூட்டும் தலைப்புகளில் படங்கள் எடுக்கப்படுகின்றன. இப்படங்கள் மிகுந்த பொருட் செலவில், அற்புதமாகப் படம் பிடிக்கப்பட்டிருக்கும். இப்படங்களில் பிராமாத மான இசையும், ஒலிச் சேர்க்கையும் இருக்கும். கதாபாத்திரங்கள் இல்லாத கதைப்படங்கள் போல் சுவைபட இருக்கும். பல நேரங்களில் இப்படங்கள் அடிப்படையில் பார்வையாளரைப் பரவசப் படுத்தும். இவற்றில் சொல்லப்படும் தகவல்கள் சரியானதுதானா என்று நிர்ணயிக்க முடியாத வகை யில் இருக்கும்.
ஆனாலும் ஆவணப்படங்கள் நம்முடைய கால கட்டத்தில் ஒதுக்கப்பட்ட பண்பாட்டு வடிவங் களாகவே உள்ளன. மிகச் சிறந்த ஆவணப் படங்கள் எப்போதுமே, அபூர்வமாக, சுண்டியிழுப்பதாக, மயக்கக் கூடியதாகவே இருக்கும் இது போன்ற படங்கள் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன. இத்தகையப் படங்களை பலர் அறிவதில்லை. சிறந்த கதைப்படங்களுக்கான தேடலே நம்மிடையே வலுவிழந்து இருக்கும் போது, ஆவணப்படங்களுக்கான தேடல் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
தற்போதைய பண்பாட்டு குழப்பத்தில் இத்தகைய ஆவணப்படங்களுக்கு என்று ஒரு இடம் இருக்கத்தான் செய்கிறது. இதனால் தான் பல நேரங்களில் மிகப்பெரிய ஹாலிவுட் திரை நட்சத்திரங்கள் இத்தகைய ஹாலிவுட் படங்களுக்கு உதவ முன்வருகிறார்கள். சென்ற இதழில் விவாதித்த ஐளேனைந துடிb ஆவணப்படத்திற்குக் குரல் கொடுத்திருப்பவர் பிரபல ஹாலிவுட் நட்சத்திர மான மேட்டெமன் (Matt Demon) ஆவார். அவ்வாறு குரல் கொடுத்ததற்காக அவர் தன் வழக்கமான ஊதியத்தை வாங்கிக் கொள்ளவில்லை.
மிகச் சிறப்பாக எடுக்கப்பட்ட ஆவணப்படங் கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பல நேரங்களில் கதைப் படங்களைப் போன்று திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடுகின்றன. மைக்கேல் மூரின் 9/11 ஆவணப்படம் அமெரிக்கா விலும், ஐரோப்பியாவிலும் பல நூறு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய படம். இப்படம் அந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழா வில் ‘தங்கப் பனை’ விருதும் பெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறந்த ஆவணப் படத்துக்கு ஆஸ்கார் விருது அளிக்கப்படுகிறது. நம்நாட்டில் ஆவணப்படங்களின் முக்கியத்துவம் அறிந்த பண்பாட்டு ஊழியர்களில் எத்தனை பேர் இப்படங்களைக் குறித்து அறிவர்.
நம்நாட்டில் முழு நீள ஆவணப்படங்கள் திரையரங்குகளில் திரையிடப்படுவது வெகு அபூர்வமாகவே நிகழ்கிறது.
நான் அறிந்து 9/11 ஆவணப்படம் சென்னையில் மட்டும் ஒரு மல்ட்டிபிளக்ஸ் அரங்கில் ஓரிரு நாட்கள் திரையிடப்பட்டது. சர்வதேச அளவில் மிகப்பெரும் வெற்றி பெற்ற “in the cove”, “Man on win” போன்ற படங்கள் இந்தியாவில் திரையிடப் படவே இல்லை. இந்த ஆண்டு ஆஸ்கார் விருது பெற்ற inside job படம் இரு மாதங்களுக்கு முன்பு சென்னையில் சத்யம் அரங்கில் ஒரு வாரம் ஒரு காட்சி ஓடியது. எல்லா காட்சிகளிலும் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே படம் பார்த்தனர்.
நம்நாட்டில், பொதுப் பண்பாட்டுத் தளத்தில் ஆவணப்படங்களுக்கு இடமே இல்லையோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. இலவசமாகத் திரையிடப்படும் மிகச் சிறந்த ஆவணப்படங் களுக்குக்கூட திரையரங்குக்கு யாரும் வருவ தில்லை.
நம் தமிழ்ப் பண்பாட்டில் தற்போது ஆவணப் படங்களுக்கு இடமே இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. அப்படி இருந்திருந்தால் எரியும் இலங்கை தமிழர் பிரச்சனை குறித்தும், இந்திய விவசாய நிலை குறித்தும், ஆதிவாசிகள் மற்றும் மாவோயிஸ்ட்டுகள் குறித்தும் மிகச் சிறந்த ஆவணப் படங்கள் வந்திருக்க வேண்டும்.
மிகச்சிறந்த ஆவணப்படங்கள் என்றாலே கலை நயத்தோடு உண்மையை உரத்து பேசுதல் என்று தான் அர்த்தம். அவ்வாறு இங்கு பேசவும் ஆளில்லை, அப்படி யாராவது பேசினாலும் கேட்க ஆளில்லை என்று நினைக்கும் பொழுது மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது.
சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டில் தமிழ்ப் பண்பாட்டு சூழலில்தான் இத்தகைய நிலையே தவிர, பொதுவாகப் பார்க்கும் பொழுது உலக அளவில் ஆவணப் படங்கள் ஒரு புதுப்பிக்கப்பட்ட பிரிவாக மிளிருகிறது.
தமிழ்ப் பண்பாட்டுச் சூழலிலும் டிஜிட்டல் தொழில் நுட்ப வளர்ச்சிக்குப் பின் பல இளைஞர்கள் பரவலாக ஆவணப் படங்களை எடுக்கிறார்கள்.
குறும் படங்களை போலவே இந்த ஆவணப் படங்களும் தனிமனித ஆர்வ மிகுதியால் எடுக்கப்படுகின்றனவே தவிர ஒரு ஆவணப் பதிவாக, ஒரு இயக்கத்திற்கோ அல்லது குறிப்பிட்ட நடவடிக்கைக்கு உதவுகின்ற கருவியாகவோ எடுக்கப்படுவதில்லை.
நெருங்கிய நண்பர்கள் மற்றும் குழு வட்டத்தில் ஓரிரு திரையிடல் களுக்குப்பின் இப் படங்கள் மறைந்து போகின்றன. மாறாக, ஆவணப் படங்கள் ஒரு விவாதத்துக்கான, ஒரு நடவடிக்கைக் கான கருவியாக இயக்கம் மற்றும் ஸ்தாபனங்களால் தயாரிக்கப்படும் பொழுது அவற் றின் பயன்பாடுகள் புதிய பரிமாணங் களைப் பெறு கிறது.
உலகெங்கும் மக்கள் சார்ந்த இயக்கங்கள், ஓரளவு வசதி கொண்ட தன்னார்வ தொண்டுத் நிறுவனங்கள், பல வணிக நிறுவனங்கள் கூட தங்களின் சமூக பொறுப்புணர்வு என்ற கட்டாயத்தின் கீழ் ஆவணப்படத் தயாரிப்புக்கு நிதியுதவி செய் கின்றன.
தமிழ்நாட்டிலும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசியல் மற்றும் பண்பாட்டு இயக்கங் கள் ஆவணப்படத் தயாரிப்புக்கென்றே நிதியை ஒதுக்க வேண்டும். பத்திரிகை, பிரசுரங்கள் கொண்டு வருவதற்கு செலவழிப்பது போல், ஆவணப்பட தயாரிப்புக்கும் செலவழித்தால், உலகெங்கும் இருப்பதுபோல் தமிழ்நாட்டிலும் ஆவணப்படங்கள் புதிய வடிவமாக, புதிய ஊடக மாக பயன்தரலாம்.
இன்று நம் உலகம் அரசியல், பொருளாதாரம், பண்பாடு ரீதியாக ஒன்றோடொன்று இணைகின்ற உலகமாக உள்ளது. தொலைக்காட்சியும், இணைய மும் ஒன்றோடொன்று இணைந்தே வருகின்றது. பேஸ்புக், ட்விட்டர், யூ ட்யூப் இவையெல்லாமும் அதன் ஒரு பகுதியாக மாறுகிறது. நாளை உருவாகப் போகும் உலகம் இதன் அடிப்படையிலேயே உருவாகும். முற்போக்கு மற்றும் மக்கள் சார்ந்த அரசியல், பண்பாட்டு இயக்கங்கள் இந்த நாளைய உலகிற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளா விட்டால், அவர்கள் வெகுவாகப் பின்தங்கி விடுவர். நாளைய உலகுக்கான இந்தத் தயாரிப்பில், ஆவணப் படங்கள் எடுப்பதும் ஒரு அம்சமாக இருக்கும். சிறந்த ஆவணப்படங்கள், முக்கிய பிரச்சனைகள் குறித்த அறிவு மற்றும் விவாதத் தேடலுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.
இன்று இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் இத்தகைய அறிவு மற்றும் விவரத் தேடல் அதிகமாகவே உள்ளது. அதற்கு ஆவணப்படங்கள் அழகாக உதவுகின்றன என்பதை நான் என் அனுபவத்திலேயே கண்கூடாகப் பார்த்தேன்.
சென்னையின் பிரபல பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பட்டறையில் ஒருநாள் ஆவணப்படங்கள் குறித்து பேச என்னை அழைத் தார்கள். அன்று நான் ஆவணப்படங்கள் குறித்த ஒரு சிறு அறிமுகத்துக்குப் பின் வோட் ஃபார் மீ (vote for me) எனும் சீன ஆவணப்படத்தை திரையிட்டேன். பிபிசி தயாரிப்பான இப் படம் முதன்முதலாக சீனப் பள்ளி ஒன்றில் வகுப்பு தலைவனை தேர்ந் தெடுக்க நடத்தும் தேர்தல் பற்றிய ஆவணப்படம் மிக அற்புதமான இந்த ஆவணப் படம் ஒரு சுவாரஸ்மான கதைப்படத்தைவிட அதிகமாக மாணவர்களை வசிகரித்தது.
படத்தில் ஆறாம் வகுப்பு மாணவர்கள் தங்கள் வகுப்பு தலைவனை தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்தல், தேர்ந்தெடுப்பது என்பது குறித்து மாணவர்களுக்கு ஏதும் தெரியாது. காரணம் தேர்தல் என்பதே அதற்கு முன்பு அங்கு நடந்தது கிடையாது. அதைப்பற்றி ஆசிரியை மாணவர் களுக்கு விளக்குகிறார். பின்னர் மூன்று மாணவர்கள் போட்டியிட முன்வருகிறார்கள். மூன்று பேரில் ஒருவர் மாணவி. அப்பா இல்லாமல் அம்மாவால் மட்டும் வளர்க்கப்படும் நடுத்தரக் குடும்பத்து பெண். இன்னொரு மாணவனுக்கு அம்மா, அப்பா இருவருமே வேலைக்குச் செல்கிறார்கள். உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இன்னொரு மாணவன் பணக்கார வகுப்பைச் சேர்ந்தவன். அப்பா அரசு அதிகாரி, அம்மா உயர்ந்த வேலையில் இருக்கிறார்கள்.
மூன்று மாணவர்களின் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை தேர்தலுக்காக எப்படியெல்லாம் தயார்ப்படுத்துகிறார்கள் என்பதுதான் படம். அப்பாவியான அக்குழந்தைகள் பெற்றோர்களால் என்ன பாடுபடுகிறார்கள் என்பதை இயற்கையான நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறது படம்.
இரண்டு மணி நேரத்தில் முடிய வேண்டிய எனது வகுப்பு, நான்கு மணி நேரத்துக்கும் கூடுத லாக நீடித்தது. மாணவர்கள் முழு ஆர்வத்தோடு காரசாரமாகத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
நேர்மை, ஊழல், தனி மனித ஒழுக்கம், பெற்றோர்களால் பிள்ளைகளுக்கு ஏற்படும் மன அழுத்தம்... என்று பல விஷயங்களைக் குறித்து ஆசிரியர்களே ஆச்சரியப்படும் அளவுக்கு மாணவர் கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டனர். இறுதியில் அப்பட்டறையின் மிகச் சிறந்த வகுப் பாக அது இருந்தது என ஆசிரியர்கள் கூறினர். அதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. அந்த ஆவணப்படம்தான்.
அந்த சீன ஆவணப்படம் சீனாவைப் பற்றிய புதிய புரிதலையும் மாணவர்களுக்குத் தந்தது.
சமீப காலங்களில் சீனாவைப் பற்றிய மிக அற்புதமான ஆவணப்படங்கள் வந்து கொண்டிருக் கின்றன. சமீபத்திய சீன ஆவணப்படம் ஒன்றை நான் பார்க்க நேர்ந்தது. அதைப்பற்றி இங்கு சொல்லியே ஆக வேண்டும்.
அப்படத்தின் பெயர் “லாஸ்ட் ட்ரெய்ன் ஹோம்” (Last train home) படத்தின் இயக்குநர் லிக்சின் ஃபான் (Lixin Fan) இவர் கனடாவில் வசிக்கும் சீனர்.
சீனாவின் அபரிமிதமான தொழில் வளர்ச்சி இன்று உலகையே வியக்க வைக்கிறது. கிராமப்புற விவசாய நாடாக இருந்த சீனா இன்று திடீரென உலகின் மிகப்பெரிய தொழில்துறை நாடாக மாறி வருகிறது. இந்த மாற்றத்தினால் சீனா, அரசியல், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு ரீதியாக பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
இப்பிரச்சனைகளை இப்படம் மிக பிரம்மாண்டமாக மிக அழகாக விவரிக்கிறது. சீனாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சி காரணமாக, பல பெரு நகரங்கள் தற்போது சீனாவில் உருவாகியுள்ளன. இந்தப் பெருநகரங்களில்தான் உலகெங்கும் விநியோகிக்கப்படும் பல நுகர்ப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தத் தொழிற்சாலை களில் வேலை செய்ய சீனாவின் தொலை தூர கிராமங்களில் இருந்து விவசாயிகள் லட்சக்கணக்கில் வந்து குவிகின்றனர். காரணம், விவ சாயத்தை காட்டிலும் இங்கு இவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. பல கிராமங்களில் வயதானவர்கள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தவிர யாருமே இருப்பதில்லை. குழந்தைகள் தனியாகவும், தாத்தா பாட்டியிடமும் தான் வளர்கின்றனர்.
தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெற் றோர்கள் அதிகபட்சம் வருடத்திற்கு ஒரு முறை தான் கிராமங்களில் உள்ள தங்கள் வீட்டுக்குச் செல் கின்றனர். அதுவும் சீன புத்தாண்டின் போது எல் லோரும் வீட்டிற்குச் செல்கின்றனர். கிட்டதட்ட 20 கோடி பேர் ரயில்கள் மூலமாக தங்கள் வீடுகளுக்கு செல்கின்றனர். ரயில் நிலையங்களும், ரயில்களும் இந்த 20 கோடி மக்களால் கட்டுப்படுத்த முடியாத வகையில் நிரம்பி வழிகின்றன. மனிதகுல வரலாற்றிலேயே மிகப்பெரிய உள்நாட்டு குடிப் பெயர்ச்சி இதுதான் என பத்திரிகைகள் சொல்கின்றன. இந்த ரயில் நிலையங்களும், ரயில் பயணமும் இதுவரை சினிமாவில் பார்த்திராத ஒன்று.
படத்தின் இயக்குநர் வெறும் இந்த பிரம் மாண்டத்தை மட்டும் காட்டவில்லை. படம் முழுக்க கதையாக அவர் சொல்வது ஒரு குறிப்பிட்ட விவசாய தம்பதியைப் பற்றியது. சாங்-கும் அவர் மனைவியும் பல ஆண்டுகளாக ஒரு ஏற்றுமதி ஆடை தொழிற்சாலையில் பணிபுரிகின் றனர். மகனும், வயது வந்த பெண்ணும் கிராமத்தில் பாட்டியின் அரவணைப்பில் பள்ளியில் படிக்கின்றனர். எல்லாம் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக என்றுதான் பெற்றோர் எல்லா கஷ்டங்களையும் அனுபவிக்கின்றனர். ஆனால் சாங்கின் மகள் படிக்க விருப் பம் இல்லாமல் தானும் நகரத்திற்கு தொழிலாளியாக வருகிறாள். பெற் றோர்களின் எதிர்ப்பை மீறி, அவர்களோடு சண்டை யிட்டுக் கொண்டு அவள் அவ்வாறு செய்கிறார். சாங்கும் அவன் மனைவியும் மனமுடைந்து போகி றார்கள். நகரத்திற்கு வந்த மகள், பெற்றோர்களை விட்டு நிரந்தரமாகப் பிரிகிறாள். கிராமத்தில் இருக்கும் தன் மகனுக்காக, சாங்கின் மனைவி மட்டும் கிராமத்துக்குத் திரும்புகிறாள். அந்த பிரம்மாண்ட கூட்ட நெரிசலில் மனைவியை வழியனுப்ப சாங் ரயில் நிலையம் வருகிறான். அவர்களின் வாழ்க்கையும், அவர்கள் பட்ட கஷ்டமும் அர்த்தமற்றுப் போகிறது.
பொருளாதார வல்லரசாக மாற சீனா மனிதத்துவ ரீதியாக எத்தனை பெரிய விலையைத் தரவேண்டியுள்ளது என்பதை இந்த ஆவணப்படம் கன்னத்தில் அறைவது போல் சொல்கிறது. தொடர்ந்து ஆவணப்படங்கள் குறித்து வரும் இதழ்களில் பார்ப்போம்.

 ஆவணப்படங்கள் - 2


சென்ற வாரம் ஒரு நாள் சென்னையில் உதவி இயக்குநர்களிடையே ஒரு கூட்டத்தில் பேச நேர்ந்தபோது ஒருவர் கேட்டார், “ஒரு ஆவணப்படத்தை உருவாக்குவதற்கும் ஒரு கதைப்படத்தை உருவாக்குவதற்கும் அணுகுமுறையில் அடிப்படை வித்தியாசம் என்ன?’’
இதற்கு ஒற்றை வரியில் பதில் சொல்ல முடியாது. கதைப்படத்தை பொறுத்தவரை இயக்குநர் எல்லா விஷயங்களையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க விரும்புவார். தான் சொல்ல விரும்பும் கதைக்காக, தன் சக்திக்கேற்ப, தன் சூழலுக்கேற்ப தன் கட்டுப்பாட்டிற்குள் வரக்கூடிய விஷயங்களை மட்டுமே தேர்ந்தெடுப்பார். ஆனால், ஆவணப் படங்களைப் பொறுத்தவரை எல்லா விஷயங்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது இயக்குநருக்கு முடியாத ஒன்று. ஆனால், தான் சொல்ல விரும்பும் விஷயத்தைக் கொண்டுவர இயக்குநருக்குத் தீவிர முனைப்பும், கடும் உழைப்பும் தேவைப்படுகிறது.
ஆனால், தற்போதைய காலகட்டத்தில் சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டில், நமக்கு தினசரி கிடைக்கும் செய்திகள்கூட டெலிவிஷன் சேனல்களில் பல நேரங்களில் அள்ளி அள்ளித் தெளித்த ஆவணப்பட துளிகளாய்த்தான் வருகிறது. செய்திகளுக்கான டெலிவிஷன் சானல்களில் பணிபுரிகின்ற செய்தி தயாரிப்பாளர்கள் பல முக்கிய செய்தி களை ஓர் ஆவணப்பட அணுகலோடுதான் தருகிறார்கள். அவ்வாறு செய்யும்போது சுவை கூட்டவும், சுவாரஸ்யமாக்கவும், தெரிந்தே கூசாமல் பொய் சொல்லவும் செய்கிறார்கள்.
சமீபத்தில் பின்லேடன் கொல்லப் பட்ட செய்தி டெலிவிஷனில் வந்த போது கண்கூடாகப் பார்த்தோம். இறந்துபோன பின்லேடனின் முகம் என எல்லா சேனல்களும் ஒரு முகத்தைக் காட்டின. சில மணி நேரத் திற்குள் அதே சேனல்கள் அந்த முகம் இறந்த பின்லேடனின் முகம் அல்ல; மாறாக, உயிரோடு இருந்தபோது எடுக்கப்பட்ட பின்லேடனின் முகத் தில் சிதைக்கப்பட்ட கண்களும் ரத்தமும் புனையப்பட்டது என்று அறி வித்தன. அமெரிக்க அரசும் இறந்து போன பின்லேடனின் உருவத்தின் புகைப்படத்தை வெளியிடப்போவ தில்லை என அறிவித்தது. ஆனாலும், அதே சேனல் கள் பின்லேடனைப் பற்றி பேசும்பொழுதெல்லாம் புனையப் பட்ட அப்படத்தை தொடர்ந்து காண்பித்தன. இந்தப் போக்கு தற்போது ஆவணப்பட தயாரிப்பு களிலும் அதிகம் காணப்படுகிறது. யுத்தம் மற்றும் மிகமோசமான விபத்துகளைப் படம்பிடிக்கும் ஒளிப்பதிவாளர்கள் எப்போதும் தங்கள் பைகளில் குழந்தைகள் விளையாடும் கரடி பொம்மை, குழந்தைகளின் காலணிகள் மற்றும் குழந்தைகள் வாயில் சப்பும் ரப்பர்களை வைத்திருப்பர் என்றும், பல நேரங்களில் படம் பிடிக்கும்பொழுது அவற்றை பிரேமுக்குள் எறிந்து படம் பிடிப்பர் என்றும் பல முறை கேள்விப்பட்டிருக்கிறேன்.
யுத்தம் மற்றும் விபத்து காட்சிகளில் இது போன்ற குழந்தைகளோடு தொடர்புடைய பொருட்களைப் பார்க்கும்போது பார்வையாளன் மனது கனக்கும். பார்வையாளன் மனதில் அப்படி ஒரு பாதிப்பை, நெகிழ்வை ஏற்படுத்தத்தான் ஒளிப்பதிவாளர்கள் அப்படிச் செய்கிறார்கள். இதை நாம் முறையற்ற செயல், பொய் என்று சொல்வதா அல்லது சொல்ல வந்த விஷயத்தின் மீது ஈர்ப்பை கூட்டுவதற்கான செயல்பாடு என்று சொல்வதா? ஓர் ஆவணப்பட தயாரிப்பில் அவ்வாறு செய்யும் பொழுது, அதை தொழில் தர்மத்திற்கு எதிரான செயலாகத்தான் பார்க்க வேண்டும். ஆனால், இதையே யுத்தம் மற்றும் விபத்து பற்றிய கதைப் படத்தில் அவ்வாறு செய்தால் அது அழகியல், இயக்குநரின் திறமை என்று மெச்சப்படுகிறது.
அவணப்படங்கள் பார்வையாளன் மீது பாதிப்பை ஏற்படுத்துவதற்குக் காட்சிகளை ஜோடிப்பதற்குப் பதிலாக உண்மையில் கிடைக் கும் விஷயத்தின் ஆன்மாவுக்குள் புகவேண்டும். அதற்கு ஆவணப்படத்திற்கான விஷயத்தின் ஆழத் திற்குள் புகவேண்டும். ஆவணப்படங்களை புனையப்படாத படங்களாக எடுக்கும் பொழுது எப்போதும் சுவாரஸ்ய மான, பாதிப்பை ஏற்படுத்தும் காட்சி கள் கிடைக்கும் என்று சொல்ல முடி யாது. சந்தர்ப்பவசத்தால், அதிர்ஷ் டவசத்தால்(?) சில நேரங்களில் சுவாரஸ்யமான மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் காட்சிகளைப் பெற லாம்.
சுனாமி பற்றிய ஓர் ஆவணப் படத்தில் அப்படியொரு காட்சியைப் பார்த்தேன். தூரத்தில் வரும் பேரலையை ஓர் ஒளிப்பதிவாளர் பாதுகாப்பான தூரத்தில் இருந்து படம் பிடிக்கிறார். அதை இன்னும் பாதுகாப்பான தூரத்தில் இருந்து இன்னொரு ஒளிப்பதிவாளர் படம் பிடிக்கிறார். அந்தப் பேரலை யாருமே எதிர்பாராத வண்ணம் ஒரு சில நொடிகளில் பெரும் சீற்றங்கொண்டு வெகுவேகமாக முன்னேறுகிறது. இதை சற்றே தாமதமாக உணர்ந்த முதல் ஒளிப்பதிவாளர் அலையிலிருந்து விலகி ஓட ஆரம்பிக்கிறார். ஆனால், கற்பனை செய்ய முடியாத அலையின் வேகம், ஒரு கண நேரத்தில் முதல் ஒளிப்பதிவாளரையும் அவரது கேமராவையும் கபளீகரம் செய்து விடுகிறது. பாதுகாப்பான உயரத்தில் இருந்து எடுக்கும் இரண்டாவது ஒளிப்பதிவாளரின் கேமராவில் இது அப்படியே பதிவாகிறது.
இதைப் பார்த்தபோது அந்தக் காட்சியின் பாதிப்பையும், அதிர்ச்சியையும் மீறி அந்த இரண் டாவது கேமராமேன் எத்தனை அதிர்ஷ்டக்காரன் என்று என் மனம் நினைத்தது. அவன் பிழைத்துக் கொண்டான் என்பதற்காக அல்ல. மாறாக, அவன் கேமரா முதல் கேமராமேனை சுனாமி அலை கபளீகரம் செய்ததை பதிவு செய்ததற்காக அவ்வாறு நினைத்தது. தொடர்ந்து அவ்வாறு நினைத்ததற்காக என் மனதிற்குள் ஒரு குற்ற உணர்வு.
நுட்பமான மனித பிரச்சினைகளை, சமூகப் பிரச்சினைகளைப் பற்றிய ஆவணப்படங்களை எடுக்கும்பொழுது அதன் இயக்குநரால் இந்தக் குற்றஉணர்விலிருந்து தப்பவே முடியாது. எத்தனை நுட்பமான மனித, சமூக பிரச்சினை குறித்து கதைப்படம் எடுத்தாலும், அது குறித்து குற்ற உணர்வு ஏற்படுவது என்பது அரிதான ஒன்று. ஆனால், ஆவணப்படங்கள் எடுக்கும்பொழுது இத்தகைய உணர்விலிருந்து தப்புவது கடினம். குற்ற உணர்வோடு, படம் எடுப்பவனுக்கு இது ஒரு போராட்டமுமாக அமைகிறது.
தமிழ்நாட்டில் சுனாமியால் பாதிக்கப்பட் டோருக்குச் சேரவேண்டிய உதவிகள் போய் சேர்ந்ததா, இல்லையா என ஆய்வு செய்யும் வகையில் சுனாமி முடிந்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் ஓர் ஆவணப்படம் எடுத்தேன். அப்போது நாகப் பட்டிணத்தில், சுனாமி முடிந்து நான்காண்டுகள் கழிந்த பின்னரும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பல மீனவர்கள், மிக மோசமான சூழலில் தற்காலிக குடியிருப்பில் வாழ்ந்து வந்தனர். அவர்களைப் படம் பிடித்துக் கொண்டிருந்த சமயத்தில் அன்றைய செய்தித்தாளில் இன்னொரு தற்காலிக குடியிருப் பில், மீனவர் ஒருவர் மாற்று ஏற்பாடு செய்து தராமலேயே அவரது தற்காலிக குடியிருப்பை அதிகாரிகள் இடித்ததால், தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளோடு எங்கு செல்வது என்று பரிதவித்த அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் என்பதுதான் செய்தி. உடனே, அந்தக் குடியிருப்பைத் தேடிச் சென்றேன். அங்கு சோகமே வடிவாய் இருந்த தற்கொலை செய்து கொண்ட மீனவரின் மனைவியையும் குழந்தைகளையும் படம் பிடித்தேன். ஒருவித தயக்கத்தோடு மனைவி யிடம் “உங்களிடம் ஒரு பேட்டி எடுக்கலாமா?’’ எனக் கேட்டேன். அவர் ஒப்புக்கொண்டார்.
தற்கொலை முடிவுக்கு அவர் கணவர் எப்படி தள்ளப் பட்டார் என்று கேட்டபொழுது, அவர் தற்கொலை செய்துகொண்ட தினத்தின் நிகழ்வுகளை விவரிக்கத் தொடங்கினார். அவர் முகத்தையும், பேசுவதையும் உன்னிப்பாக கேமரா திரையில் பார்த்துக் கொண்டி ருந்தேன். ஒரு கட்டத்தில் அவர் உடைந்து அழப் போகிறார். அவ்வாறு அழவேண்டும் என்றும் என் மனம் விரும்பியது. அப்படி அழுதால் பார்வை யாளனை மிகவும் பாதிக்கும் என்றெல்லாம் என் மனம் நினைத்தது. நான் நினைத்தபடியே அவர் உடைந்து அழுதார். படப்பிடிப்பு நான் நினைத்தது போலவே நன்றாக நடந்ததாக நினைத்தேன். பின்னர் அதைத் தொடர்ந்து எழுந்த குற்ற உணர் வால் படத்தொகுப்பின்போது அவர் அழும் காட்சியை நான் பயன்படுத்தவில்லை.
தற்போது டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி யின் உச்சத்தில் இருக்கும் சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டில் டெலிவிஷன் நிகழ்ச்சிகள், ஆவணப் படங்கள் எல்லாமும் வியாபாரம் மற்றும் விறு விறுப்பான நாடகம் என்றாகிவிட்டன. எனவே, இங்கு குற்றவுணர்வு மற்றும் குழப்பங்களுக்கு இடம் கிடையாது. விரைவு, விறுவிறுப்பு இதில் தான் எல்லா கவனமும் செலுத்தப்படுகிறது.
சினிமாவின் முதல் நூற்றாண்டில் ஆவணப் படங்கள் உண்மையை ஊன்றுகோலாகக் கொண்டு உலாவந்த ஓர் உன்னத கலைவடிவமாகக் கருதப் பட்டது. ஆவணப்படங்களின் முன்னோடிகளில் ஒருவரான ஜான் கிரியர்ஸன் சொல்கிறார், “வாழ்க்கையை உன்னிப்பாக நோக்கி, தேவை யானதை மட்டும் எடுத்துக்கொண்டு அதன் மூலம் ஒரு புதிய கலை வடிவத்தை உருவாக்கும் சக்தி சினிமாவுக்கு உண்டு’’. இதையேதான் பிரபல எழுத்தாளர் சல்மான் ரஷ்டி வேறு மாதிரி சொல் கிறார், “இதுவரை சொல்லப்படாத கதைகளை சொல்வதற்கும் குரலற்றவர்களுக்கு குரல் கொடுக்க வும் ஒரு புதிய மொழி தேவைப்படுகிறது. அதை நாம் கண்டுபிடித்தாக வேண்டும். இது சினிமா, ஆவணப்படங்கள், வாழ்க்கை வரலாறு எல்லா வற்றிற்கும் பொருந்தும். இங்கு தவறான மொழியை உபயோகப்படுத்தினால் அப்படைப்பு கள் பார்வையற்ற, கேட்கும் திறனற்ற படைப்பு களாகத்தான் இருக்கும்.’’
சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டில் பெரும்பாலானவர்களுக்கு இம்மொழி தேவை யற்று போனது. மாறாக, பரபரவென சொல், பட்டென சொல். அதற்கான மொழிக்கு உண்மை யை, வாழ்க்கையைவிட அலங்காரமும் ஜோடனை யும் அவசியம் என சொல்லப்படுகிறது.
இயக்குநர் சத்யஜித் ரே ஒரு முறை தன் முதல் படமான ‘பதேர் பாஞ்சாலி’ பற்றி பின்வருமாறு கூறினார்: “விபூதிபூஷன் பந்தோபாத்யாயாவின் நாவலை படித்த உடனே, அப்புத்தகம் ‘என்னை சினிமாவாக்கு, என்னை சினிமாவாக்கு’ என்று கதறி அழுதது. அதனாலேயே அப்புத்தகத்தை ‘பதேர் பாஞ்சாலி’ படமாக எடுத்தேன்.’’ இது முற்றிலும் உண்மை. பல பெரும் படைப்புகளுக்கு இது நிகழ்ந் துள்ளது.
சில விஷயங்களைப் பற்றிக் கேள்விபட்ட உடனேயே, சில விஷயங்களைக் குறித்து படித்த உடனேயே அதை தங்கள் படைப்பாகக் கொண்டு வரவேண்டும் என எழுத்தாளர்கள், திரைப்பட இயக்குநர்கள், கலைஞர்கள் நினைப்பது உண்டு.
எந்த ஒரு விஷயத்தையும் கேள்விபட்ட உடனேயே ஆவணப்படமாக்க வேண்டும் என்று நினைப்பதுண்டா? பெரும்பாலும் கதைப்படமாக உருவாக்குவதையே இயக்குநர்கள் விரும்பு கின்றனர்.
ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப் பட்டதாகச் சொல்லப்படும் விஷயத்தை பற்றி கேள்விபட்ட உடனேயே, அதை ஆவணப்படமாக் குவதைவிட, கதைப்படமாக ஆக்குவதற்கே சாத்தியம் அதிகம் உள்ளது என கருதினேன். பல லட்சம் கோடிகளை செலவு செய்து, பல ஆண்டுகள் உளவு பார்த்தபின், அவர்கள் முற்றிலும் எதிர்பாராத வகையில், பாகிஸ்தானின் மையப்பகுதியிலேயே பின்லேடன் வசித்து வருகிறான் என்பதை அறிந்த போது, அவர்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அவர்கள் அதை உறுதி செய்துகொள்ள பல மாதங் கள் நுணுக்கமாக உளவு பார்த்ததை அறிவிக்கும் போது, அது ஓர் அமெரிக்க த்ரில்லர் படக்கதை போலத்தான் இருந்தது. அதனால்தான் சென்ற ஆண்டு ஹர்ட் லாக்கர் படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற கேத்ரின் பிகாலோ பின்லேடன் சுட்டுக் கொல்லப் பட்ட விஷயத்தைக் கதைப்படமாக எடுக்கப் போவதாக அறிவித் துள்ளார்.
ஆனால், ஒரு சில விஷயங்கள் கதைப் படம், ஆவணப்படம் என்ற இரண்டுக்குமான சாத்தியக் கூறுகளைக் கொண்டிருக்கும். அதில் எந்த வடிவம் வெற்றி பெறும் என்பது அதை உருவாக்கும் படைப் பாளியைப் பொறுத்தே அமைகிறது.
சமீபத்தில் நிகழ்ந்த சர்வதேச நிதியகத்தின் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான் கைது பற்றிய விவரங்கள் செய்தித்தாள்களைப் படிப்போருக்கும், டெலிவிஷன் சானல்களைப் பார்ப்போருக்கும் நிச்சயம் தெரியும். அவரின் கைதுக்கான நிகழ்ச் சியை ஒரு திரைக்கதையைப்போல சுவாரஸ்ய மான முறையில் சர்வதேச டெலிவிஷன் சேனல்கள் ஒளிபரப்பி வந்தன.
டொமினிக் மிக சக்திவாய்ந்த பதவியில் இருப்ப வர். அடுத்த ஆண்டு பிரான்சு நாட்டு அதிபராகக் கூடிய எல்லா சாத்தியக் கூறுகளையும் உடையவர். 62 வயதான இவர் பெரும் செல்வந்தரும்கூட. மிகுந்த திறமைசாலி, புத்திசாலி என்று பலரால் பாராட்டப் படுபவர். இப்படிப்பட்ட ஒரு நபரை நியூயார்க் போலீஸ் ஒரு ஓட்டல் பணிப்பெண்ணை கற் பழிக்க முயன்றதாக கைது செய் துள்ளது.
அவர் கைது செய்யப்பட்ட அன்று நடந்ததாக சொல்லப் படும் நிகழ்வுகளை பத்திரிகை யில் படிக்கும்பொழுதும், டெலி விஷனில் பார்க்கும் போதும் ஒரு சுவாரஸ்யமான கதைப் படம் போலவே இருந்தது.
டொமினிக் தங்கியிருந்த அந்த சொகுசு ஓட்டலில் அவர் அறைக்கு ஒரு நாள் வாடகை ஒன்றரை லட்சம் ரூபாய். அன்றைய மதியப் பொழுதில் தன் அறையின் சொகுசு குளியலறை யில் நிர்வாணமாக குளித்துக்கொண்டிருக்கிறார். அறையில் யாரும் இல்லை என நினைத்து அறையைச் சுத்தம் செய்யும் பெண், அறைக்குள் செல்கிறாள். அப்போது டொமினிக் குளியலறை யில் இருந்து நிர்வாணமாக வெளியே வருகிறார். அப்பெண் அவரைப் பார்த்து அதிர்ச்சியடை கிறாள். டொமினிக் அவள் மீது பாய்ந்து பலாத் காரம் செய்ய முற்படுகிறார். அவள் எதிர்த்து போராடுகிறாள். டொமினிக் அறைக்கதவை தாளிட்டு விட்டு அவளை படுக்கையில் தள்ளி மீண்டும் பலாத்காரம் செய்ய முற்பட, அவள் திமிறி போராடி, அவர் பிடியிலிருந்து வெளியேறி அறைக் கதவைத் திறந்துகொண்டு ஓடுகிறாள். அதற்குள் டொமினிக் அவசர அவசரமாக அறை யைக் காலி செய்து விமான நிலையம் சென்று, பாரீஸ் செல்லும் விமானத்தில் முதல் வகுப்பில் அமருகிறார். அப்போதுதான் அவர் தன் செல் போனை அறையிலேயே விட்டுவிட்டு வந்ததை உணர்கிறார். ஓட்டலுக்குப் போன் செய்து விமான நிலையத்திற்கு செல்போனை எடுத்துவரச் சொல் கிறார். சிறிது நேரத்தில் இரு அமெரிக்க அதிகாரி கள் விமானத்திற்குள் நுழைகிறார்கள். தன் செல் போனைத்தான் ஓட்டல் சிப்பந்திகள் கொண்டு வருகிறார்கள் என்று நினைத்த டொமினிக்கை அவர்கள் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். கோர்ட்டில், தான் குற்றம் செய்யவில்லை என்கி றார் டொமினிக். நான் நிரபராதி என நிரூபிப்பேன் என பத்திரிகையாளர்களிடம் சொல்கிறார். வழக்கு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இது குறித்த செய்திகள் தினசரி சர்வதேச ஊடகங்களில் வந்து கொண்டிருக்கின்றன.
இதைப் படித்த உடனே, பல ஐரோப்பிய இயக்குநர்கள் இவ்வழக்கில் ஓர் ஆவணப்படத்துக் கான சுவாரஸ்யத்தைவிட கதைப்படத்துக்கான சுவாரஸ்யம் அதிகம் உள்ளது என்பதை உணர்வர். இவ்வழக்கில் டொமினிக் விடுதலையாவாரா, தண்டிக்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
சில நேரங்களில் சுவாரஸ்யமான விஷயங்கள் ஆவணப்படங்களாகவும் கதைப்படங்களாகவும் வந்த நிகழ்ச்சிகள் உண்டு. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக ‘செக்ஸ் இன் எ கோல்ட் க்ளைமேட்’ என்ற ஆவணப்படத்தையும், ‘மேக்டலின் சிஸ்டர்ஸ்’ என்ற கதைப்படத்தையும் சொல்ல லாம்.
இரண்டுமே ஒரே விஷயத்தை கருப்பொருளாகக் கொண்டவை.
அயர்லாந்து நாட்டில், கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் மேக்டலின் காப் பகங்கள் நடத்திவந்தனர். இங்கு இளம் வயதில் பாலியல் ரீதியாக முறை தவறியப் பெண்கள் சேர்க்கப்பட்டனர். பெரும்பாலான நேரங்களில் பெற்றோர் களே தங்கள் மகள்களை தண்டனையாக இங்கு சேர்த்தனர். அந்த இளம் பெண் கள் செய்த ஒரே தவறு (?) திருமணத் திற்கு முன் ஆண்களுடன் தொடர்போ, உறவோ வைத்திருந்ததுதான்.
காலவரையற்று இந்த காப்பகங் களில் பெண்கள் அடைபட்டிருந்தனர். அவர்கள் தினமும் 12 மணி நேரம் துணி களைத் துவைத்து சலவை செய்ய வேண்டும். அதை ஒரு லாபமீட்டும் தொழிலாக கன்னியாஸ்திரிகள் செய்து வந்தனர்.
இங்கு தங்கியிருக்கும் காலகட்டத்தில் இந்தப் பெண்கள் பல்வேறு பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாயினர். இங்குள்ள கத்தோலிக்க கன்னி யாஸ்திரிகளும், இங்கு வந்து போகும் பாதிரியார் களும் இந்தப் பெண்களைத் தங்கள் காம இச்சைக்குப் பயன்படுத்திக் கொண்டனர். எந்தத் தவறுக்காக (?) அவர்கள் இங்கே அடைக்கப் பட்டனரோ அதே தவறுகள் அவர்கள் மீது இங்கே இழைக்கப்பட்டன. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு இந்தக் கொடுமை நிகழ்த்தப்பட்டது.
பல சமூக வரலாற்று ஆவணப்படங்களை எடுத்த இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டீவ் ஹம்ப்ரீஸ் 90 களின் இறுதியில் இது குறித்த ஆவணப்படத்தை எடுத்தார். அதுதான் ‘செக்ஸ் இன் எ கோல்ட் க்ளைமேட்’ என்ற படம். இப்படம் இன்று னுஏனு-யிலும், இணையத்திலும் சுலபமாக கிடைக்கிறது. இப்படத்தில் அந்தக் காப்பகங்களிலிருந்து தப்பித்து இங்கிலாந்து சென்று வாழ்கின்ற மூன்று பெண் களின் பேட்டிகள்தான் பிரதான அம்சம். அப் பெண்கள் இப்போது வயதாகி, சிலர் திருமணமும் புரிந்து இங்கிலாந்தில் வாழ்கின்றனர். சிறுவயதில் அந்த காப்பகங்களில் அவர்களுக்கும் மற்றவர் களுக்கும் நேர்ந்த கொடுமைகளைப் படம் முழுக்க அவர்கள் நினைவு கூர்கின்றனர். அவர்கள் பெற் றோர்களால் எப்படி அங்கு தள்ளப்பட்டார்கள் என்பதையும் கதையாகச் சொல்கின்றனர். அவர் களுக்கு நேர்ந்த கொடுமைகளையெல்லாம் அவர் களின் வாய் வார்த்தைகளாய்தான் கேட்கிறோம். ஆனாலும், அது இடியென நம்மைத் தாக்குகிறது. 1998ல் முதன் முறையாக இப்படம் பிபிசி-யில் ஒளி பரப்பப்பட்டபோது இங்கிலாந்தே கொதித் தெழுந்தது. அதைத் தொடர்ந்து அக்காப்பகங் களால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பெண் கள் தங்கள் மனக்குமுறல்களை ஊடகங்களில் கொட்டினர். அயர்லாந்து அரசு இந்த ஆவணப் படத்தை உடனே தடை செய்தது. இன்றுவரை அயர்லாந்தில் இப்படம் அதிகாரபூர்வமாகக் காட்டப்படவில்லை.
என்னதான் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வார்த்தைகளால் விளக்கினாலும், காட்சிரீதியான விளக்கங்கள் ஏதும் இருக்காது. ஆனால், இதே விஷயத்தைக் கதைப் படமாக எடுத்தால் அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளைக் காட்டலாம்.
இந்த ஆவணப்படத்தால் மிகவும் வசீகரிக்கப்பட்ட பீட்டர் முலான் என்ற இயக்குநர் இதையே 2002 ஆம் ஆண்டு ‘மேக்டலின் சிஸ்டர்ஸ்’ என்ற கதைப்படமாக எடுத்தார். இப்படத்தில் தப்பித்துப் போன மூன்று பெண்கள் கதாபாத்திரங்களாக மாற்றப்பட்டனர். அவர்களை இளம் வயதில் அவர்களின் பெற்றோர்கள் தண்டனையாக அக் காப்பகங்களில் சேர்ப்பதாகவும், பின்னர் அங்கு அவர்களுக்கு நடக்கும் கொடுமைகளையும், இறுதி யில் அங்கிருந்து அவர்கள் தப்பித்துச் செல்வதையும் கதைரீதியாக, காட்சிகளாய் பார்க்கும்பொழுது அதன் தாக்கம் வேறு பரிமாணத்தில் இருந்தது. அமெரிக்காவில் இப்படம் பலத்த வரவேற்பை பெற்றது. வெனிஸ் பட விழாவில் தங்க சிங்கம் உட்பட பல சர்வதேச விருதுகளை இப்படம் தட்டிச் சென்றது. வாட்டிகன் கத்தோலிக்க சபை இப்படத்தை கடுமையாக எதிர்த்தது. ஆனாலும், இத்தாலி, அயர்லாந்து உட்பட பல ஐரோப்பிய நாட்டு விமர்சகர்கள் இப்படத்தைப் பெரிதும் பாராட்டினர். ஒரே விஷயத்தை ஆவணப்பட மாகவும், கதைப் படமாகவும் பார்க்கும்போது அதன் தாக்கம் எப்படி வெவ்வேறு பரிமாணங்களில் உள்ளது என்பதை இப்படம் உணர்த்துகிறது.

ஆவணப்படங்கள் - 1


1980களின் துவக்கத்தில் திரைப்படக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதும், சென்னை பிலிம் சொஸைட்டியை தீவிரமாக நடத்திக் கொண்டிருந்த போதும் திடீரென ஒருநாள் மாணவர் இயக்கத்தை சேர்ந்த சக தோழர் ஒருவர் இரு புத்தம் புதிய 16எம்.எம். படச்சுருள் பெட்டிகளைக் கொடுத்தார். ப்ளாஸ்டிக்கில், பளிச்சென்ற வண்ணத்தில் அத்தனை நேர்த்தியான படப்பெட்டி களை நான் அதற்கு முன் பார்த்தது இல்லை. இரு படப் பெட்டி களும், தென் அமெரிக்காவில் அப்போது நடந்து கொண்டிருந்த மக்களின் புரட்சிகரப் போராட்டத்தைப் பற்றிய ஆவணப் படங் களாகும்.
சென்னையின் பிரபல ஆங்கில பத்திரிகையினைச் சேர்ந்த ஒருவர் தென் அமெரிக்க பயணத்தின் போது அவருக்கு தரப்பட்ட அந்த படப் பெட்டிகளை ரகசியமாக இந்தியாவுக்கு கொண்டு வந்தார். அந்தப் படப் பெட்டிகள் தான் பலருக்கு காண்பிக்கப்பட வேண்டும் என்பதற்காக என்னிடம் தரப்பட்டது.
தென் அமெரிக்க நாடுகளான எல்சால்வடோர், நிக்காரகுவாவில் அப்போது நடந்து கொண்டிருந்த அரசுக்கெதிரான மக்களின் புரட்சிகர போராட்டட்ஙகளைப் பற்றிய படங்களாகும் அவை.
அரசியல் ஆவணப்படங்கள் என்றாலே அப்போதெல்லாம் தென் அமெரிக்க (லத்தின் அமெரிக்க) படங்கள் தான் என்றிருந்த காலம். இது போன்ற படங்களை பெரிய சர்வதேச திரைப்பட விழாக்களில் மட்டுமே பார்க்க முடியும். அப்படிப்பட்ட நிலையில் என் கையில் இருந்த இரு படப் பெட்டி களும் ஏதோ பொக்கிஷம் போல இருந்தது.
உடனடியாக அப்படங்களை ஒரு ஞாயிற்றுக் கிழமை மதியம் திரைப்படக் கல்லூரியின் திரை யரங்கத்தில் திரையிட்ட போது பெரும் அளவில் சென்னையை சேர்ந்த கலைஞர்கள், அரசியல்வாதி கள், பத்திரிகையாளர்கள் வந்திருந்தனர். திரை யிடல் முடிந்து எல்லோரும் கேட்ட ஒரு கேள்வி. “இந்தப் படம் உனக்கு எப்படிக் கிடைத்தது?” என்பது தான். “அது ரகசியம். வெளிநாட்டு நண்பர் ஒருவர் தந்தார் எனக்கூறி தப்பித்தேன்.
பின்னர் அப்படப் பெட்டிகளை யாருக்கும் தரக் கூடாது என்று என்னிடம் சொல்லப்பட்டிருந்தது. அதை நானே பல ஊர் களுக்கும், பல மாநிலங் களுக்கும் பயணம் செய்து, பல இடங்களில் போட்டு காட்டியிருக் கிறேன்.
சினிமாவின் முதல் நூற்றாண்டின் இறுதியில் நிகழ்ந்த இந்த நிகழ்ச்சி யை இப்போது நினைத்துப் பார்த்தால் எனக்கு விநோதமாக உள்ளது. காரணம் இன்று மிக முக்கிய அரசியல் ஆவணப்படங்கள், ஆவண வீடியோ பதிவு கள் உடனுக்குடன் செயற் கைக்கோள் டெலிவிஷன் சேனல்களில் காட்டப் படுகிறது. பின்னர் அது உடனடியாக இணையத்தில் பாதுகாக்கப்படுகிறது.
சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டில் ஆவணப்படங்களின் மிக முக்கியமான பரிமாணம் அதன் டிஜிட்டல் பதிவுகள்தான். டிஜிட்டல் பதிவு களின் விஷேச அம்சம், அவை ஒளி ஒலி அலை களாக உடனடியாக உலகின் எந்த மூலைக்கும் அனுப்ப முடிவது தான். செயற்கைக்கோள் டெலி விஷன் சேனல்கள் தங்கள் நிகழ்ச்சிகளை டிஜிட்ட லாக பதிவு செய்து ஒலி - ஒளி அலைகளாகத்தான் உலகெங்கும் அனுப்புகின்றன.
நாளுக்கு நாள் இந்த டிஜிட்டல் பதிவுகள் தொழில் ரீதியான மிக உயர்நிலையிலான பதிவு களாக மாறிக் கொண்டிருக்கின்றன.
HD-High Definition என்றழைக்கப்படும் வீடியோ டிஜிட்டல் பதிவுகள் இன்று தொழில் ரீதியான உயர் தொழில் நுட்பமாக கருதப்படுகிறது.
இந்த தொழில்நுட்ப கேமராக்கள், பல்வேறு விலைகளில், பல்வேறு நிலைகளில் ஐந்து லட்ச ரூபாயிலிருந்து ஐந்து கோடி ரூபாய் வரையில் பல்வேறு மெருகூட்டல்களோடு கிடைக்கிறது.
தொழில் முறை அல்லாத சாதாரண வீடியோ பதிவு கேமராக்கள் பத்தாயிரம் ரூபாயிலிருந்தும் கிடைக்கிறது.
தரமான படங்கள் என்றாலே, தரமான ஒளிப் பதிவு, தரமான ஒலிப்பதிவு என்றாகி போன நிலை யில், தொழில் முறை ரீதியானவர்கள் மட்டும் தான் தரமான படங்களை எடுக்க முடியுமா? சொல்வதற் கும், பதிவு செய்வதற்கும் மிக முக்கியமான மானுட, சமூகப் பிரச்சனைகளை வைத்திருக்கும் சாதாரண மாணவர்கள் இவ்வூடகத்தை கையில் எடுக்க முடியாதா என பலர் கேட்பதுண்டு.
முடியும். நிச்சயமாக முடியும். சில ஆயிரங் களில், சில பத்தாயிரங்களில் எடுக்கப்பட்ட பல ஆவணப் படங்கள் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி யுள்ளது. அது போன்ற படங்களில் சொல்லப்படும் விஷயங்களின் முக்கியத்துவம், அவசரத்தன்மை காரணமாக தொழில் நுட்பத்தின் தரம் என்பது இரண்டாம் பட்சமாகி விடுகிறது.
எரியும் மனித பிரச்சனைகள், மானுடத்திற்கு எதிரான மிகக் கொடுமையான அத்து மீறல்கள் நிகழும் போது அதைப் பதிவு செய்வதும், பின்னர் சரியான பார்வையோடு அதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதும் தான் முக்கியமே தவிர, தொழில் நுட்பத்தின் தரம் என்பதற்கு அங்கு இடமே இல்லை.
20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஜி.ஜார்ஜ் ஹால்லிடே என்கின்ற சாதாரண நபர் தன்னுடைய அமெச்சூர் வீடியோ கேமராவால் எடுத்த ஒரு சில நிமிட காட்சிகளால் ஏஞ்செல்ஸ் நகரமே ஸ்தம்பித்து போனது.
1991ம் ஆண்டு மார்ச் 3ம் நாள் 25 வயதான ரோட்னி கிங் என்ற கறுப்பு வாலிபன் குடித்துவிட்டு காரை ஓட்டிச் சென்றான்.
வேகக் கட்டுப்பாட்டை மீறிச் சென்ற அந்த காரை போலீஸார் நிறுத்த முயன்றபோது அவன் நிற்காமல் சென்றான். பின்னர் அக்காரை துரத்தி சென்ற போலீசார், காரை நிறுத்தி ரோட்னி கிங்கை வெளியே இழுத்து போட்டு கீழே தள்ளி தங்கள் தடிகளால் அடித்து நொறுக்குகின்றனர். அவன் முகமும் மண்டையும் உடைந்து ரத்தம் கொட்டு கிறது.
ஆனாலும் சில போலீஸார் அவனை தொடர்ந்து அடிக்க, மற்ற அதிகாரிகள் அதை தடுத்து நிறுத்தாமல், ஏளனப் பேச்சுக்களோடு வேடிக்கைப் பார்க்கின்றனர்.
இதைத் தற்செயலாக அருகில் உள்ள குடியிருப்பில் இருந்து பார்த்த ஜியார்கே ஹால்லிடே என்பவர் தனது சாதாரண வீடியோ கேமராவில் அந்த வன்முறையை போலீஸாருக்கு தெரி யாமல் தூரத்திலிருந்து பதிவு செய் கிறார்.
பின்னர் இந்த வீடியோ பதிவு, செய்தி நிறுவனங்கள் மூலம் உல கெங்கும் உள்ள டெலிவிஷன்களில் ஒளிபரப்பப்பட்ட போது அமெரிக்கா வின் பல நகரங்களில், குறிப்பாக லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் ஒரு பெரிய இனக் கலவரமே வெடித்தது.
அமெரிக்காவின் கறுப்பு இன மக்களும், அடிப்படை மனித உரிமை களை மதிப்பவர்களும் அந்த வீடியோ காட்சியில் சட்டத்தை மீறிய ஒரு இளைஞனை போலீசார் தண்டிப்ப தாக மட்டும் பார்க்கவில்லை. மாறாக, நிறத் துவேசம் கொண்ட வெள்ளை போலீசார்கள் ஒரு கறுப்பு இளைஞன் மீது கட்டவிழ்த்த காட்டு மிராண்டித்தனத்தைப் பார்த்தனர்.
இதன் காரணமாக, தெருவிற்கு இறங்கி, கறுப்பு இன மக்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பின்னர் மக்களின் எழுச்சியைத் தாங்க முடியாமல், அமெரிக்க அரசு ரோட்னி கிங்கை அடித்து நொறுக்கிய நான்கு வெள்ளை காவல் அதிகாரிகளைக் கைது செய்தது. ஒரு வருடம் நடந்த வழக்கின் இறுதியில் நான்கு காவல் அதிகாரிகளும் விடுதைல செய்யப்பட்டனர்.
இதை அறிந்த கறுப்பு இன மக்கள் அநீதி இழைக்கப்பட்டதாகக் கருதி, லாஸ் ஏஞ்சல்ஸ், லாஸ் வேகாஸ், அட்லாண்டா, ஜியார்ஜியா போன்ற நகரங்களில் மீண்டும் போராட்டத்தில் இறங்கினர். இப் போராட்டத்தில் வெடித்த வன் முறையால் பேரழிவு ஏற்பட்டது. 53 பேர் இறந் தனர். 3000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந் தனர். 7000 இடங்களில் தீ வைப்பு சம்பவம் நடை பெற்றது. 3100 வர்த்தக நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இப் போராட்டத்தால் ஏற் பட்ட இழப்பு 4000 கோடி ரூபாயைத் தாண்டியது.
இத்தனை பெரும் இழப்புக்கும், பேரழிவுக்கும் காரணம் அந்த சிறிய வீடியோ பதிவுதான் என்றால் அது மிகையில்லை. காரணம் அப்போதும், அதற்கு முன்பும், அதற்குப் பின்பும் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் நிறத் துவேசமும், நிறவெறித் தாக்குதல்களும் நடந்து கொண்டுதான் இருந்தன. அவை குறித்த செய்திகளும் அவ்வப்போது செய்தித் தாள்களில் வந்து கொண்டும் இருந்தன. ஆனால், அவையெல்லாம் ஏற்படுத்தாத பாதிப்பை இந்தச் சிறிய வீடியோ பதிவு எப்படி ஏற்படுத்தியது என்பதை ஆராய்ந்தோமானால் இந்த ஊடகத்தைப் பற்றிய பல சுவாரஸ்யமான உண்மைகள் நமக்குத் தெரியவரலாம்.

இதுபோன்ற வீடியோ பதிவுகளில் உள்ள உண்மையின் அருகாமையும், அவசரத் தன்மையும் உணர்வுகளைத் தட்டி எழுப்புகின்ற தன்மையும்தான். இதுபோன்ற பாதிப்புகளுக்குக் காரணமா?
அப்படியானால் சமீபத்தில் இங்கிலாந்தின் சானல் 4 டெலிவிஷன் சேனல் ஒளிபரப்பிய “ஸ்ரீலங்காவின் கொலைக் களம்” என்ற ஆவணப் படம் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டுமே. ஸ்ரீலங்கவே பற்றி எரிந்திருக்க வேண்டுமே. ராஜபக்ஷே ஓடி ஒளிந்திருக்க வேண்டுமே. தமிழகத்தில் மாபெரும் ஆர்ப் பாட்டங்கள் வெடித்திருக்க வேண்டுமே. இவற்றில் எதுவுமே நிகழவில்லை. காரணம் இந்த ஆவணப் படம் இங்கிலாந்தில் மட்டுமே ஒளிபரப்பப்பட்டு ஒருவேளை இந்தியா, இலங்கை டெலிவிஷன் சேனல்களும், தமிழ் சேனல்களும் இந்த படத்தை ஒளிபரப்பியிருந்தால், நிச்சயம் பெரும் பாதிப்புகள் தமிழகத்திலும், இலங்கையிலும் நிகழ்ந்திருக்க வேண்டும்.
48 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப்படம், பார்ப்போரின் நெஞ்சைப் பதைபதைக்கச் செய்கிறது. சேனல் 4ல் ஒளிபரப்பப்பட்ட அடுத்த நாள் இப்படத்தை நான் இணையத்தில் பார்த்த பின்பு பல மணிநேரம் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தேன். அந்த அளவுக்கு இப்படம் என்னை பாதித்தது. இப்படத்தை முகநூலில், பகிர்ந்து கொண்ட பின், இரு நண்பர்கள் மட்டும் இப் படத்தை பார்க்க துவங்கியதாகவும், சில நிமிடங் களிலேயே அதை பார்க்க மனோ திடம் இல்லாமல் நிறுத்தி விட்டதாகவும் குறிப்பு அனுப்பியிருந்தனர். பலர் இந்த ஆவணப்படத்தை பார்க்கவேயில் லையோ என சந்தேகம்.
இணையத்திலும் இப்படத்தை ஒரு சிலரே பார்த்திருக்க வேண்டும். டிஜிட்டல் புரட்சி என்று எவ்வளவு தான் நாம் சொல்லிக் கொண்டிருந் தாலும், நம்நாட்டில் இணையங்களை உபயோகிப் போர் எண்ணிக்கை வெகு குறைவாகவே உள்ளது. சீனாவில் இணையம் உபயோகிப்போர் எண் ணிக்கை நம்நாட்டில் உபயோகிப்போரைப் போல ஐந்து மடங்காக உள்ளது. நம் நாட்டில் அப்படி இணையத்தை உபயோகிப்பவர்களில் பெரும்பாலோர், அதி முக்கியமான சமூக, அரசியல் நிகழ்வுகளுக்காக உபயோகிப்பதில்லை. மாறாக பொழுது போக்கு, சினிமா, வேடிக்கை, விளையாட்டு, தனிப்பட்ட அரட்டை போன்ற வற்றுக்குத்தான் உபயோகிப்படுத்தப்படுகின்றது. இதையெல்லாம் நான் இங்கு ஏன் சொல்கிறேன் என்றால், “இலங்கையின் கொலை களம்” என்கின்ற இந்த ஆவணப்படம் தற்போதைக்கு இணையத்தில் மட்டுமே பார்க்க முடியும் என்ப தால் தான் பலருக்கு இது போன்ற விஷயங்களில் அக்கறை உள்ளவர்களுக்கு கூட இப்படத்தைப் பற்றி தெரியவில்லை என நினைக்கிறேன்.
“இலங்கையின் கொலைக்களம்” என்கின்ற இந்த ஆவணப்படத்தை பல தளங்களில் முக்கியமான படமாகக் கருதுகிறேன். மனிதனை மனிதன் அழிக்க உதவும் கடைசி யுத்த தளவாடம் இவ்வுலகில் இருக்கும் வரையில் இவ்வுலகம் நிச்சய மாக வாழ்வதற்கு லாயக்கற்றது என் கின்ற என் கருத்தை இப்படம் மேலும் உறுதி செய்தது. எல்லா யுத்தங்களிலும் அப்பாவி மக்களும், குழந்தைகளும் கொல்லப்படு வதும், பெண்கள் பாலி யல் ரீதியாக சிதைக்கப்படுவதும் எழுதப் படாத விதியாகவே உள்ளது. இரண் டாம் உலக யுத்தத்திலிருந்து வியட்நாம் யுத்தம், ஆப்ரிக்க உள்நாட்டு யுத்தங்கள், செர்மியா யுத்தம், ஈராக் யுத்தம் என்று எல்லாவற்றிலும் இதைத்தான் பார்க்கி றோம். “இலங்கையின் கொலைக் களம்” படத்திலும் அதைத்தான் பார்க்கி றோம்.
இப்படத்தின் விஷேச அம்சம் என்ன வென்றால், இப்படத்தில் வரும் பெரும்பாலான காட்சிகள், இந்த ஆவணப் படத்துக்காக எடுக்கப்பட்டவை அல்ல.
உண்மையில் பார்க்கப் போனால், இலங்கை அரசு, தான் திட்டமிட்டு நடத்திய இந்த யுத்தக் கொடுமைகளை உலகின் கண்களிலிருந்து மறைக்க வேண்டும் என்பதற்காக, பத்திரிகை மற்றும் டெலிவிஷன் செய்தியாளர்கள் யாரையுமே, தங்கள் நாட்டுக்குள்ளோ, யுத்த நடந்த பகுதிக்கு அருகிலே யோ அனுமதிக்கவில்லை. எந்த அளவுக்கு இலங்கை அரசு இதில் கவனம் எடுத்துக் கொண்ட தென்றால், இலங்கையில் செயல்பட்டுக் கொண்டி ருந்த ஐ.நா. அலுவலகத்தையும் பாதுகாப்பு தர முடியாது என்ற காரணத்தைக் கூறி மூடி விட்டது. ஐ.நா. அலுவலகம் மூடப் போவதை அறிந்த தமிழ் மக்கள், ஏதோ பேராபத்து நிகழப் போகிறது என்பதை உணர்ந்து, ஐ.நா. அலுவலகம் முன் திரள் கின்றனர். மூடப்பட்ட கதவுகளின் பின்னிருந்து, கம்பிகளின் வழியே “போகாதே, போகாதே” என்று கெஞ்சுகின்றனர். அதை ஒரு ஐ.நா. அதிகாரி உள்ளிருந்த படியே தன் சிறிய கேமராவால் படம் பிடிக்கிறார். போகாதே, போகாதே என்று கதறும் மக்களிடையே, ஒரு இளம் பெண் அமைதியாக பார்க்கிறார். அந்த சிறு பெண்ணின் முகத்தில் உள்ள ஏக்கமும், பயமும் பல விஷயங்களை சொல்கிறது.
இப்படத்தின் துவக்க காட்சிகளில் இது முக்கியமான ஒன்று.
இப்படத்தின் பிராதான காட்சிகள் எல்லாமே இது போல் சிறிய கேமராவாலும், கைபேசி கேமராக் கொண்டும் எடுக்கப்பட்டது தான்.
உலகின் கண்களிலிருந்து, தான் நடத்திய யுத்த குற்றங்களை மறைக்க இலங்கை அரசு எத்தனை தான் முயற்சி செய்தாலும், இந்த டிஜிட்டல் தொழில்நுட்ப, கைபேசி யுகத்தில் உண்மையை மூடி மறைப்பது எத்தனை கடினம் என்பதையே இப்படம் காட்டுகிறது.
இப்படத்தின் முதல் பாகத்தில் வரும் காட்சிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களே அல்லது விடுதலை புலிகளே தங்களது சிறிய மற்றும் கைபேசி கேமராவில் எடுக்கப்பட்டவை தான்.
ஒரு காட்சியில் வானிலிருந்து எறியப்படும் குண்டுகளுக்கு பயந்து, பெண்களும், குழந்தை களும் கதறிக் கொண்டு குழிக்குள் பதுங்குவதும். அப்போது ஒரு பெண் பதுங்கு குழியிலிருந்து வீடியோ எடுக்கும் நபரைப் பார்த்து அழுது கொண்டே “இப்போ எதுக்கு வீடியோ எடுக்கிறீங் க? நாங்க சாகப்போறதை எடுக்குறீங்களா?...” என்று கதறுவது பார்ப்போரை அறைவது போல் உள்ளது.
இன்னொரு காட்சியில் வேலிக்கு அந்தப்பக்கம் இருந்து இளம் பெண்கள் குண்டுவீச்சில் அப் போதுதான் இறந்த அம்மாவின் உடலைப் பார்த்து அம்மா... அம்மா.... என்று கதறும் போது, அடக் கடவுளே! இதையெல்லாம் பார்க்கத்தான் வேண்டுமோ என்று நம் மனம் கதற, கண்களை மூடிக் கொள்ள தோன்றுகிறது. படத்தின் முற்பகுதி காட்சிகள் பெரும்பாலும் இப்படித்தான் உள்ளது. 25 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் கடைசி மாதமான 2009ஆம் ஆண்டில் மே-ஜூன் போது இலங்கை அரசு திட்டமிட்டு நடத்திய கொடூரம் தான் இது.
அப்பாவி மக்கள் தங்கியிருந்த முகாம்கள் மீதும், தற்காலிக மருத்துவமனைகள் மீதும் அரசு ராணு வம் வேண்டுமென்றே திட்டமிட்டு குண்டு வீசியதை இக்காட்சிகள் தெளிவாக உணர்த்து கின்றன.
தற்காலிக மருத்துவமனையின் மேற்பார்வை யாளர் மருத்துவமனையில் எந்த வசதியும் இல்லாத தால் எத்தனை பேர் இறக்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அடுத்த காட்சியிலேயே குண்டு வீச்சுக்கு பலியான அவரது உடலைப் பார்க் கிறோம். எந்த யுத்தத்திலும் மனித உயிர்கள் எத்தனை மலிவானது என்பதைத்தான் இக்காட்சி காட்டுகிறது.
படத்தின் இறுதிப்பகுதிக் காட்சிகளை எல் லோராலும் பார்க்க முடியுமா என்பது சந்தேகமே.
யுத்தங்கள் மானுடத்தின் கடைசித் துளியையும் உறிஞ்சு விடும் என்பதற்கு அத்தாட்சியாய் உள்ளது இக்காட்சிகள். படத்தின் துவக்கத்திலேயே படத்தைத் தொகுத்து வழங்கும் ஜோன் ஸ்நோ நம்மை எச்சரிக்கிறார். “நீங்கள் பார்க்கப் போகும் சில காட்சிகள் உங்களை மிகுந்த பாதிப்புக்குள்ளாக் கலாம்”. அவரின் எச்சரிக் கையை இக்காட்சிகளின் போது நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது.
கைதிகளை நிர்வாண மாக கைகளை கட்டி ஒருவர் பின் மண்டையில் சுட்டுக் கொல்வது, பாலி யல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட பெண் களின் நிர்வாண உடல்களை மிக மோசமான முறையில் அப்புறப்படுத்துவது... என காட்சிகள் நம் தொண் டைக் குழியை அடைக்க வைக்கிறது.
இந்தக் காட்சிகளை யெல்லாம் யார் எடுத்தார் கள்? எப்படி எடுத்தார்கள் என்று பார்த்தால், அவை இன்றைய டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் சான்று களாக உள்ளன.
பெரும்பாலான இக்காட்சிகள், இக்கொடுமை களை நிகழ்த்திய ராணுவ வீரர்களே தங்கள் கைபேசி கேமராவால் எடுத்தது. இந்த காட்சிகள் எல்லாம் இந்தக் கொடூரங்களை நிகழ்த்திய ராணு வத்தினர் தாங்கள் நிகழ்த்திய செயல்களை சாதனை களாக நினைத்து அதற்கான கேடயங்களாக, சான்றிதழ்களாக தங்கள் கைபேசி கேமராவில் பதிவு செய்தது தான்.
என்னதான் உண்மையாக இருந்தாலும் இது போன்ற காட்சிகளைக் காண்பிப்பது நியாயம் தானா? தார்மீக அடிப்படையில் சரியானது தானா? என்று சிலர் கேள்வி எழுப்பலாம்.
அதற்கு இப்படத்தைத் தொகுத்து வழங்கும் சேனல் 4ன் ஜோன் ஸ்நோ (துடிn ளுnடிற) சொல்கிறார்: “மக்கள் இக்காட்சிகளைப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்த பின்னர்தான் இதைக் காட்டுகிறோம். அப்படி காட்டினால் தான் இந்த யுத்தத்தில் கொடூரங்கள் நிகழ்த்தியவர்களின் உண்மை சொரூபம் தெரியவரும். அப்போது தான் சர்வதேச அளவில் இந்த யுத்தக் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்”.
இதை நாம் ஏற்றுக் கொள்கிறோமோ, இல்லையோ, மொத்தத்தில் இந்த ஆவணப்படம், சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டுக்கே உரிய தொழில் நுட்பத்தின் மூலம், மனிதனுள் எப் போதும் மறைந்து கிடக்கும் அரக்கனை ஞாபகப் படுத்துவதாகவே உள்ளது. 

ஆவணப்படங்கள்


“அது எனக்கு முக்கியமான விஷயமாகப்பட்டது. அது ஆர்வத்துக்குரிய விஷயமாக இருந்தது. எனவே, அதை நான் பதிவு செய்ய விரும்பினேன்’’ என பல நேரங்களில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், திரைப்பட இயக்குநர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
‘பதிவு செய்வது’ என்பது ஆவணப்படங்களின் அடிநாதமாகவே உள்ளது. எதற்காகப் பதிவு செய்கிறோம்? பிறருக்குப் பயன்பட வேண்டும். பின்னாளில் பயன்படவேண்டும். காலத்தை வென்று சான்றாக இருக்க வேண்டும்... இப்படி பல காரணங்களைச் சொல்லலாம்.
கடந்த கால வாழ்வு, கடந்த கால அரசியல், கடந்த கால மனிதர்கள்... பற்றிய ஆவணப்பதிவுகள் எதுவுமே இல்லாமல் போயிருந்தால் நிகழ்காலமே அர்த்த மற்றதாய்ப் போயிருக்கும்.
குகை சுவர்களில் தொடங்கிய பதிவுகள் நூறாண்டுகளுக்கு முன் சினிமா வந்த பின் சினிமாவிலும் தொடர்ந்தது.
ராபர்ட் பிளஹார்த்தியின் ‘நானுக் ஆஃப் தி நார்த்’ ஆவணப்படம் இன்றளவும் நூறாண்டு களுக்கு முன்பிருந்த எஸ்கிமோக்களின் வாழ்வு பற்றி அறிய உதவும் சாதனமாக உள்ளது.
‘ட்ரையம்ப் ஆஃப் எ வில்’ ஆவணப்படம் மனிதகுலத்துக்கே எதிராய் அமைந்த ஹிட்லரின் எழுச்சியைக் காட்டும் ஆவணமாக அமைந்தது.
எழுத்து மற்றும் ஓவியம் மூலமாக பல நூறு ஆண்டுகளாகப் பதிவுகள், ஆவணப்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த நூறு ஆண்டுகளில் சினிமாவில் செய்யப்பட்ட ஆணவப் பதிவுகளின் தாக்கம் இந்த நூற்றாண்டுக்கே உரிய ஒன்றாகும்.
இப்போதும் உலகின் பல்வேறு இடங்கள், பண்பாடு குறித்த என் அண்மை அறிவு என்பது நான் பார்த்த பல ஆவணப்படங்கள் மற்றும் கதைப் படங்களிலிருந்து கிடைத்ததாகவே உள்ளது.
1980களில் ஜெர்மனி டெலிவிஷனுக்காக எடுக்கப்பட்ட ஆவணப்படத் தொடர் ஒன்றை பார்க்க நேர்ந்தது. ‘ஜெர்மன் கிராமப்புற வாழ்வு’ என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட அத்தொடர் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த முதியவர்களின் பேட்டியாகும். ஒவ்வொரு பேட்டியும் 40 நிமிடங் கள் ஓடக்கூடிய தொகுக்கப்பட்ட பேட்டியாகும். அந்த 40 நிமிடங்களில் பேட்டியளிக்கும் நபர் தங்கள் கிராம வாழ்வு, அவர்கள் சிறுவர் / சிறுமியாக இருக்கும்போது எப்படி இருந்தது, பின்னர் இளைஞர்களாக இருந்தபோது எப்படி இருந்தது, தற்போது எப்படி அது மாறியிருக்கிறது என்பதை யெல்லாம் ஒரு தேர்ந்த கதைசொல்லி போல விவரிப்பர். இடை இடையே அவர்கள் பேசு வதற்குச் சம்பந்தமான பழைய புகைப்படம் இருப்பின் அது காண்பிக்கப்படும்.
வெறும் பேட்டிகளையும், ஒரு சில புகைப் படங்களையும் மட்டுமே கொண்டு மிக எளிமை யான ஒன்று போல் தோற்றமளிக்கக்கூடிய வகை யில் தயாரிக்கப்பட்ட இத்தொடர் என்னுள் மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. என் மாணவப் பருவத்தில் பார்த்த அத்தொடர், இன்றள வும் நான் அந்த கிராமங்களுக்கெல்லாம் சென்று வந்தது போல் ஓர் உணர்வு.
இத்தொடரின் சிறப்பே, சரியான நபர்களைத் தேர்ந்தெடுத்து, சரியான கேள்விகளின் மூலம் அவர்களைப் பேசவைத்து, அதன் மூலம் லட்சக் கணக்கான பார்வையாளர்களை அவர்களின் கடந்த காலத்துக்கு அழைத்துச் செல்வதுதான்.
எந்த ஒரு பதிவுமே, உண்மையாக, ஆழமாக, காட்சி மற்றும் ஒலிரீதியாக செய்யும்பொழுது எத்தனை அழகாக இருக்கும் என்பதை முதன் முதலாக உணர்ந்தேன்.
சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டில், காட்சி மற்றும் ஒலிப்பதிவுகள் என்பது பண்பாட்டு சூழலில் மட்டுமல்லாமல் பல்வேறு பயன்பாடு களுக்கும் உதவுகிறது.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், பெரும்பாலான குற்றங்களைக் கண்டுபிடிக்க, சிசிடிவி மற்றும் செல்போன் பதிவுகள்தான் பயன்படு கின்றன.
ஆவணப்படங்கள் குறித்து பேசும்போது, இந்த டிஜிட்டல் யுகத்தில் அது எத்தனை சக்தி வாய்ந்த, அற்புதமான ஆயுதமாக இருக்கும் என்பதை பண் பாட்டுத் தளத்தில் பணிபுரிபவர்கள் பலர் உணர வில்லை என்றே தோன்றுகிறது.
‘கிராமப்புற வாழ்வு’ பற்றிய ஜெர்மானிய தொடர் போன்று, இடங்களைப் பற்றியும், மனிதர்களைப் பற்றியும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பல ஆவணப்படங்களை நம் நாட்டில் உருவாக்கலாம். ஆனால், அதற்கான முயற்சிகள் கிட்டதட்ட இல்லை என்றே சொல்லவேண்டும். காரணம், அதன் முக்கியத்துவத்தை நாம் உணராததே.
தமிழ்நாட்டில் அற்புதமான மனிதர்களைப் பற்றிய - கலைஞர்கள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள், அறிவியல் மேதைகள் பற்றிய ஆவணப்பட பதிவுகள் அங்கொன்றும் இங்கொன் றுமாக ஒரு சிலவே உள்ளன. அவையும் அரை குறையான பதிவுகளாகவே உள்ளன.
பெரியாரைப் பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. அவரைப் பற்றிய சரியான ஆவணப்படங்கள் ஏதும் இருப்பதாக தெரிய வில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, அவர் வாழ்ந்த காலத்தில் அவரின் முக்கியமான நிகழ்வுகளைத் திரைப்பட கேமரா வில் யாரும் பதிவு செய்யாதது. இன்னொன்று, ஏற் கெனவே உள்ள புகைப்படங்கள், மற்ற ஆவணங் களைக் கொண்டு நேரடியாகவோ, புனையப் பட்டோ ஆவணப்படம் எடுக்க தற்போது யாருக் கும் ஆர்வம் இல்லாதது.
மற்ற வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில்தான் மக்கள் தலைவர்களைப் பற்றிய ஆவணப்படங்கள் வெகு குறைவு. காந்தி, நேருவைப் பற்றிக்கூட முறையான ஆவணப்படம் கிடையாது. காந்தியைப் பற்றிய எல்லா திரைப் படப் பதிவுகளும் பெரும்பாலும் பிரிட்டிஷ் அரசால் எடுக்கப்பட்டதுதான். தமிழ்நாட்டை சேர்ந்த ஏ.கே.செட்டியார் தன் சொந்த முயற்சியில் காந்தியைப் பற்றி எடுத்த திரைப்பட பதிவுகள்தான் இன்று காந்தியைப் பற்றிய ஒரே ஆவணப்படமாக உள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர் களாக இருந்த பி.சுந்தரய்யா, ஏ.கே.கோபாலன், இ.எம்.எஸ்., பி.ராமமூர்த்தி போன்றோரைப் பற்றிய எந்த ஆவணப்படமும் இல்லாதது துரதிருஷ்டமே.
மார்ட்டின் லூதர் கிங் பற்றி பல ஆவணப் படங்கள் உள்ளன. அவரது வாழ்வை முழுமை யாகக் காண்பிக்கக்கூடிய ஐந்தரை மணி நேரம் ஓடக்கூடிய ஓர் ஆவணப்படத்தைப் பார்த்து நான் ஆச்சர்யப்பட்டேன். அவர் முதன்முதலாக மக்கள் முன் ஆற்றிய உரைகூட அதில் இடம் பெற்றிருந் தது. அவர் அந்த முதல் உரை ஆற்றியபோது அவர் பிரபலமாகாத தலைவராகத்தான் இருந்தார். ஆனாலும், அவரது முதல் பேச்சு முழுமையாகத் திரைப்படத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. யாரோ அவரின் முக்கியத்துவம் அறிந்து அவரின் முதல் உரையைத் திரைப்பட கேமராவில் பதிவு செய்திருக்கிறார்கள்.
ஒருவரின் வாழ்வும் நிகழ்வுகளும் அவருக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் உரியது என்கின்ற உணர்விலிருந்துதான் பதிவு செய்யும் பழக்கமே துவங்குகிறது. நாட்குறிப்பு எழுதும் பழக்கமும் இதன் வெளிப்பாடுதான். பல அரிய மனிதர்களின், கலைஞர்களின், எழுத்தாளர் களின், ஊர்சுற்றிகளின் நாட்குறிப்புகள் இன்று பொக்கிஷ இலக்கியங் களாக, ஆவணங்களாக இருப்பது நாம் அறிந்ததே.
இன்றைய டிஜிட்டல் உலகில் அத்தகைய பதிவுகள் ஒரு விநோத நிலையை எட்டியுள்ளன. இன்று ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக இணையதளங்களில் சிலரின் குறிப்புகளை, மேதாவித்தனங்களை, சுய தம்படங்களைப் பார்க்கும்போது, பதிவுகள் பிறருக்காக, பிற்காலத் திற்காக என்பது போய் சுயஅரிப்புக்காக என்பது போல் காட்சியளிக்கிறது. டிஜிட்டல் யுகத்தின் வேதனைகளில் இதுவும் ஒன்று. அதேநேரத்தில் டிஜிட்டல் யுகத்தின் பல பதிவுகள், ஆவணப்பட பதிவுகள் பல அற்புதங்களையும் கொண்டுள்ளன. அவை சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டுக்கே உரிய ஒன்று.
மாணவர்களுக்கான வீடியோ ஆவணப்பட போட்டிக்கு நடுவராக இருந்தபோது, நான் பார்த்த ஓர் ஆவணப்படம் புதுவித நெகிழ்ச்சியையும் ஆச்சர்யத்தையும் தந்தது.
அம்மாணவன் எடுத்திருந்த ஆவணப்படம் சென்னை நகரின் மின்சார ரயிலைப் பற்றிய படம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை சென்னையில் மீட்டர்கேஜ் மின்சார ரயில் பீச் ஸ்டேஷனிலிருந்து தாம்பரம் வரை ஓடிக்கொண்டிருந்தது. எல்லா ரயில்களும் அகலப்பாதையில் ஓடிக்கொண்டிருந்த பொழுது, இந்த சென்னை ரயில்கள் மட்டும் மீட்டர் கேஜில் ஓடிக்கொண்டிருந்தன. பின்னர் ஒரு நாள் இந்த மின்சார ரயில்களும் அகலப்பாதைக்கு மாற்றப்பட்டன. அவ்வாறு மாற்றப்படுவதற்கு முன்பு கடைசி நாளாக மின்சார ரயில்கள் ஓடிக் கொண்டிருந்தன. சென்னை நகரவாசிகள் பலருக்கு இந்த மின்சார ரயில் அவர்கள் வாழ்வோடு கலந்த ஒன்று. பள்ளி, கல்லூரி, அலுவலகம் என 20, 30 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து இந்த ரயிலில் பயணம் செய்தவர்கள் உண்டு. அவர்களுக் கெல்லாம் இந்தக் குறுகிய மின்சார ரயில்கள் இன்றோடு முடியப் போகின்றன என்ற செய்தி விவரிக்க முடியாத சோகத்தையும் பிரிவினையும் தந்தது. அந்தக் கடைசி நாள், கடைசி ரயில் நடுநிசி 12 மணிக்குச் சென்னை கடற்கரை ஸ்டேஷனிலி ருந்து கிளம்புகிறது. வழக்கத்தை விட கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டு அதிகாலை ஒரு மணிக்கு மேல் தாம்பரம் ஸ்டேஷனை அடைகிறது. காரணம், அந்த நடுஇரவிலும் ஒவ்வொரு ரயில் நிலையத் திலும், அதில் பல காலம் பயணம் செய்த பயணிகள் அந்த ரயிலைப் பார்ப்பதற்கும், பிரிவுபசாரம் செய்வதற்கும் காத்திருந்தனர். பலர் கண்ணீர் மல்க அந்த ரயிலைப் பார்த்தனர். ஒருவருக்கொருவர் கட்டித் தழுவிக்கொண்டனர். சிலர் ரயில் ஓட்டுநருக்கு மாலை அணிவித்து திலகம்கூட இடுகின்றனர். பல காலம் பயணம் செய்த தங்கள் ரயில்பயண அனுபவங்களைப் பேட்டியில் சொல்கின்றனர். அவ்வாறு சொல்லும்பொழுது பலருக்குக் குரல் உடைகிறது. கண்களில் நீர் கட்டுகிறது. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் இந்த பிரிவுபசாரத்தைப் பார்க்கும் ரயில் ஓட்டுநர் கொஞ்சம் கொஞ்சமாக நெகிழ்கிறார். இறுதியாக ரயில் தாம்பரத்தை வந்தடைந்தபோது கூட்டம் சற்று அதிகமாக உள்ளது. பலர் கடைசி ரயிலின் கடைசி நிமிடம் வரை இருப்பதற்காக ரயிலிலேயே பயணம் செய்து வருகின்றனர். இறுதியில் ரயில் ஓட்டுநரின் பேட்டி வருகிறது. அவர் சொல்கிறார்: “எட்டு வருடங்களாக இதே யூனிட்டை ஓட்டி வருகிறேன். நாளை முதல் இதை ஓட்ட முடியாது என் நினைக்கும்பொழுது...’’ என்று அதற்கு மேல் பேசமுடியாமல் நெகிழ்ந்து போகிறார். ஒரு கண அமைதிக்குப்பின் ரயிலின் அருகே சென்று பிரிய மான தோழியை முத்தமிடுவது போல் ரயிலின் இன்ஜின் பெட்டியை முத்தமிடுகிறார். அந்த ரயிலும் ஒரு ஜீவனுள்ள வஸ்து போல் சிலிர்ப்ப தாய் நமக்குத் தோன்றுகிறது.
அந்த மாணவன் எடுத்த ஆவணப்படம் இது தான். அவன் விளையாட்டாய் தன் சாதாரண டிஜிட்டல் வீடியோ கேமராவால் அந்த ரயிலின் கடைசி நாளின், கடைசிப் பயணத்தைப் படம் பிடித்திருக்கிறான்.
அப்படத்திற்கு இரண்டாம் பரிசு கொடுத்து அவனை அழைத்தபோது, அவனுக்கு ஒரே ஆச்சர்யம். “என்னால் நம்ப முடியவில்லை சார். நான் விளையாட்டாய்ப் பதிவு செய்த படம். இதற்கு ஏன் பரிசு கொடுத்தீர்கள்’’ என்று அப்பாவி யாய் கேட்டான். அவன் விளையாட்டாய், வெறும் பதிவாய் எடுத்திருக்கலாம். ஆனால், அவனை அறியாமலேயே அந்தப் பதிவில் சில அற்புதங் களும், பல நெகிழ்வுகளும் விழுந்துவிட்டன. அதுதான் அந்த ஆவணப்படத்தின் சிறப்பு. டிஜிட்டல் யுகத்துக்கே உரிய சரியான தருணங்களின் பதிவு.
பல நேரங்களில் சரியான பதிவுகள் கடந்த காலத்திற்கும், நிகழ்வுகளுக்கும் மட்டும் இட்டுச் செல்வதில்லை. மனிதர்களின் மனதிற்குள்ளும் சிந்தனைகளுக்குள்ளும் இட்டுச் செல்கிறது.
இந்திய அறிவியல் மேதையான, நோபல் பரிசு பெற்ற சந்திரசேகரின் வாழ்வு மற்றும் அறிவியல் குறித்து ஓர் ஆவணப்படம் எடுக்கலாம் என ஓர் ஆலோசனையை மத்திய அரசுக்கு அனுப்பினேன். அதற்காக சந்திரசேகர் குறித்த பல விவரங்களைப் படித்தேன். சந்திரசேகர் தற்போது உயிருடன் இல்லை. அவரைப் பற்றிய ஆவணப்படம் எடுக்க, ஏற்கனவே அவரைப் பற்றி பதிவு செய்யப்பட் டுள்ள ஆவணங்களைத்தான் உபயோகப்படுத்தி யாக வேண்டும். அந்த ஆவணப்பதிவுகளில் பெரும்பாலானவை அவரைப் பற்றி அவரோடு நெருங்கிப் பழகியவர்களும், பணி செய்தவர்களும் வார்த்தைகள் மூலமாக செய்த பதிவுகள்தான்.
அவர் நியூட்டன் பிரின்ஸிபியாவை எல்லோருக் கும் புரியும் வகையில் விளக்கி புத்தகமாக எழுதி னார். அவரின் ‘ப்ளாக் ஹோல்ஸ்’ பற்றிய கண்டு பிடிப்பைப்போல், இதுவும் அவரின் மிகமுக்கியச் சாதனை.
அவரின் மனைவி லலிதா (100 வயதைக் கடந்து தற்போது சிகாகோ நகரில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்) சந்திராவைப் பற்றி ‘என் அணையா தீபம்’ என்ற கட்டுரையில் மிக அற்புத மாக தன் கணவரைப் பற்றி விவரிக்கிறார். அதில் ஓர் அற்புதமான பதிவு: “அவரின் ‘பிரின்ஸிபியா’ குறித்த மறக்க முடியாத நிகழ்ச்சி ஒன்று நாங்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் ஆவணப் பாதுகாப்பக நூலகத்திற்குச் சென்றபோது நிகழ்ந் தது. நியூட்டன் பிரின்ஸ்பியா குறித்து தன் கைப்பட எழுதிய ஆவணங்களைப் பார்ப்பதற்குத்தான் அங்கு சென்றோம். நியூட்டன் தன் ஒரு கோட்பாட்டை விளக்குவதற்காக இப்படித்தான் வரைபடம் வரைந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அதே கோட்பாட்டை விளக்க சந்திராவும் ஒரு படத்தை வரைந்திருந்தார். நியூட்டனின் ஆவணங்களைப் பார்த்தபோது எனக்கு தாங்க முடியாத ஆச்சர்யம். நியூட்டனின் வரைபடமும் சந்திராவின் வரை படமும் அச்சு அசலாக ஒத்திருந்தது. நான் சந்திராவிடம் சொன்னேன்: “சந்திரா, நீ நியூட்ட னின் மூளைக்குள்ளேயே நுழைந்து, அது எப்படி செயல்பட்டது என்பதை அறிவதில் வெற்றி பெற்றுவிட்டாய்’’ என்றேன்.’’
இதைப் படித்தபோது எனக்கு மெய் சிலிர்த்தது. லலிதாவின் இந்த அற்புதமான பதிவுகளால், வாசகனாகிய நானே சந்திராவின் மனதிற்குள் நுழைந்ததைப்போல் உணர்ந்தேன். வெறும் வார்த்தை பதிவுகளுக்கே இத்தனை சக்தி என்றால், திரைப்பட பதிவுகளில் இதை நான் என் ஆவணப் படத்தில் கொண்டு வந்தால் எத்தனை பேரை சந்திராசின் மனதிற்குள் அழைத்துச் செல்லமுடியும் என்று நினைத்த போது சுகமாக இருந்தது.
மாபெரும் மனிதர்களைப் பற்றிய ஆவணப் படங்களுக்கு எப்போதுமே தனி மதிப்பு உண்டு. வாழ்த்துக் கொண்டிருக்கும் மாபெரும் மனிதர் களைப் பற்றி முழு நீள ஆவணப்படங்கள் எடுக்க வேண்டியது சினிமாவின் இரண்டாம் நூற்றாண் டில் தவிர்க்க முடியாத ஒன்று. அப்படி ஒரு வேளை எடுக்காமல் போனால் அதற்கு ஒரே காரணம், சினிமாவின் முதல் நூற்றாண்டில் எப்படி அதன் சக்தி அறியாமல், அதற்கான இடத்தை பண்பாட்டு தளத்தில் தராமல் போனார்களோ, அதே போல சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டில் அதன் சாத்தியப்பாடுகள் அறியாமல் அதைப் பயன்படுத் தாமல் தவறவிடுவதுதான்.
இந்த நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் மாபெரும் மனிதர்களான நெல்சன் மண்டேலா, பிடல் காஸ்ட்ரோ, ஹியூகோ சாவெஸ் போன்றவர் களைப் பற்றி பல ஆவணப்படங்கள் எடுக்கப்பட் டுள்ளன.
அமெரிக்காவின் உலகப் புகழ் பெற்ற இயக்கு நரான ஆலிவர் ஸ்டோன் எடுத்த முதல் ஆவணப் படம் ஃபிடல் காஸ்ட்ரோவைப் பற்றியது.
தன் வழக்கமான மாபெரும் ஹாலிவுட் கதைப் படங்களிலிருந்து ஒரு மாறுதல் தேடி ஃபிடல் காஸ்ட்ரோவை குறித்து ஒரு படம் எடுக்க 2002 ம் ஆண்டு ஹவானா செல்கிறார். காஸ்ட்ரோவும், ஆலிவர் ஸ்டோனை ஏற்கனவே அவரின் படங்கள் மூலம் அறிந்திருந்தால் தன்னை குறித்து படமெடுக்க அனுமதிக்கிறார். அதற்கு காஸ்ட்ரோ விதித்த ஒரே நிபந்தனை மூன்று நாட்கள் முழுமையாக தன்னோடு இருந்து படம் பிடிக்கலாம். அதே நேரத்தில் தேவையில்லை என்று தான் நினைத்தால் படப்பிடிப்பை நிறுத்த எந்த நேரத்திலும் தனக்கு உரிமை உண்டு என்பதுதான்.
ஆனால் காஸ்ட்ரோ தன் அதிகாரத்தை பயன் படுத்திப் படபிடிப்பை நிறுத்தவே இல்லை.
மூன்று நாட்களில் முப்பது மணி நேரம் மூன்று கேமரா கொண்டு தொடர்ந்து படம் பிடிக்கப் பட்டது. அந்த 30 மணி நேரமும் காஸ்ட்ரோவும், ஆலிவர் ஸ்டோனும் மனம் விட்டு பேசினர். “ஏ” ஜோக்குகள்கூட பகிர்ந்து கொண்டனர். அந்த மூன்று நாட்களும் காஸ்ட்ரோ எங்கெல்லாம் சென்றாரோ கூடவே ஆலிவர் ஸ்டோனும், அவரது கேமராக்களும் சென்றன. அவர்அலுவலகம், மருத்துவக் கல்லூரி, அருங்காட்சியகம், சாலை களில் இறங்கி மக்களோடு கலப்பது... என்று எல்லா இடங்களிலும் கேமரா காஸ்ட்ரோவை தொடர்ந் தது.
பின்னர் சில மாத படத்தொகுப்பு வேலைக்கு பின், 30 மணி நேர படக்காட்சிகள் கமாண்டேன்ட் என்ற பெயரில் ஒன்றரை மணி நேரப் படமாக எடுக்கப்பட்டது.
இந்தப் படத்தில் காஸ்ட்ரோவை ரத்தமும் சதையுமாய், சிரிப்பும் கும்மாளமுமாய், சிந்தனை யும் கோபமுமாய் 100 நிமிடங்கள் தொடர்ந்து பார்ப்பது ஒரு கிடைத்தற்கரிய அனுபவம்.
வெறும் மூன்றே நாட்களில் நடந்த பட பிடிப்பைக் கொண்டு இத்தனை அற்புதமான ஆவணப்படத்தை உருவாக்க முடியும் என்றால் அதற்குக் காரணம் இப்படத்திற்கு உபயோகப் படுத்தப்பட்ட டிஜிட்டல் வீடியோ கேமராக்கள் தான்.
இது போன்றதொரு சாத்தியப்பாடு சினிமா வின் இரண்டாம் நூற்றாண்டுக்கே உரிய ஒன்று இது போன்றதொரு ஆவணப்படத்தை சினிமா வின் முதல் நூற்றாண்டில் எடுக்க மிகுந்த நேரமும், உழைப்பும், செலவும் செய்ய வேண்டியிருந் திருக்கும். ஆலிவர் ஸ்டோன் தன் இந்த முதல் ஆவணப்பட அனுபவத்தைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்:
“இதற்கு முன் படப்பிடிப்பு என்பது எனக்கு மிகுந்த களைப்பைத் தந்தது. காரணம் அவற்றின் பிரம்மாண்டம், செலவு மற்றும் போலித்தன்மை. இந்த ஆவணப்படத்தின் போது மிகுந்த உற்சாகத் தோடு சுதந்திரத்தை அனுபவித்தேன். காரணம் நான் உபயோகப்படுத்திய டிஜிட்டல் தொழில் நுட்பம் தான்...”
எல்லா முக்கிய நிகழ்வுகளும் இன்று வெறும் அச்சிலும், புகைப்படமாகவும் மட்டும் பதிவு செய்தால் போதாது. கூடவே, அசையும் பிம்பமாய் ஒலியோடும் பதிவு செய்ய வேண்டியுள்ளது.
அதன் காரணமாகத்தான் நோபல் பரிசுக் குழு கடந்த பத்து ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும், நோபல் பரிசு பெறுபவர் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் ஆவணப்படமாக எடுக்கிறது. கூடவே அவர்களின் நீண்ட பேட்டியையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பதிவு செய்கிறது. இவை யாவும் பிற்காலப் பயன்பாட்டிற்காக அவர்களின் ஆவணப் பயன்பாட்டிற்காக அவர் களின் ஆவணப் பாதுகாப்பகத்தில் பாதுகாக்கப் படுகிறது.