Tuesday, 20 December 2011

மூலிகை முதலுதவிகள்


’முதலுதவி செய்ய மூலிகை அறிவு’ என்பது அன்று குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும், குறிப்பாய் குடும்பத்தலைவிக்கு நிச்சயம் உண்டு. தொழிற்புரட்சி காலத்திற்கு பின் இங்கிலீஷ் மருத்துவம் வேகவேகமாக உலகெங்கும் காலூன்றிய போது, நாட்டு மருத்துவம் முழுமையும் நசுங்கி விடாமல் காப்பாற்றப்பட்டதிற்கு பாட்டி வைத்தியமாய் அது வீட்டில் பெண்களால் பாதுகாக்கப்பட்டதும் முக்கிய காரணம். மூலிகை என்றதும் பலரும் நினைப்பது, ’ஏதோ ஏழுகடல் தாண்டி ஏழுமலை தாண்டி எடுக்கும் விஷயம்’ என்று. நம் வீட்டு அஞ்சறைப்பெட்டியிலும்,
அருகாமை நிலத்திலும் அதிகம் கண்டுகொள்ளப்படாமல், ’சைரன் இல்லாத 108 வேன்’ மாதிரி பல மூலிகைகள் முதலுதவி செய்ய காத்திருக்கின்றன.

விருப்பமான உணவு தயாரிக்கும் வித்தை மாதிரி, முதலுதவிக்கு வீட்டில் இருந்தே கைமருந்தாய் கொடுக்கும் வித்தையும் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாய் தெரிந்திருக்க வேண்டும். ‘ஐய்ய்யோ! கைமருந்தா!?’ அது ஆபத்தாச்சே என்ற மேல்தட்டு மனோபாவம் மாற வேண்டும். எது அவசரம்? எது ஆரம்பம்? எது சின்ன சிரமம்? என்ற அடிப்படை அறிவு வீட்டில் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருப்பது அவசியம்.

நல்ல உருளைக்கிழுங்கு போண்டாவும் மொச்சைப்பயறும் சாப்பிட்டுவிட்டு கனவிலும் பைக்கில் மட்டுமே வாக்கிங் போகும் நபருக்கு, “கேஸ் போக மாட்டேங்குது: வயிரு உப்புசமாயிருக்கு; மார் வலிக்கிறது- பகவான் கூப்பிடரார்-னு நினைக்கிறேன். எனக்கு ஒருதடவை கடைசிப்புள்ள சுரேஷைப் பார்க்கணும்; புறப்பட்டு வரச் சொல்றியா?”ன்னு கேட்க, டாக்டருக்கும் விளி மானிலப் புள்ளைக்கும் போன்க்ள் பறக்கும். தடாலடியாய் ராவோடு ராவா பஸ்-டிரய்ன் பிடிச்சு அவர் வர, அவர் வந்து சேர்வதற்குள் , நட்சத்திர மருத்துவமனையில் வேகவேகமாக எல்லா ’டெஸ்டிங் சன்னதி’யிலும் சேவிச்சிட்டு கடைசியில், மூலஸ்தானத்து பெரிய டாக்டர் கடவுள், ” யு.ஆர்.லக்கி! ஒண்ணுமில்லே! இந்த மாத்திரைய சாப்பிடுங்க..ன்னு சின்னதாய் ஒரு மாத்திரை பிரசாதத்தையும், பெரிசாய் ஒரு பில்லையும் புன்னகையுடன் தந்து செல்வார்.
”நான் படிச்சு படிச்சு சொன்னேன்; இந்த போண்டா போளீ எல்லாம் வேண்டாம் வேண்டாம்-னு கேட்கிறாரா மனுசன் ?” என வீட்டம்மா அங்கலாய்க்க, ”ஏண்டி! அப்ப எனக்கு ஒன்றுமில்லே-ன்னு சொன்னா உனக்கு கஷ்டமா இருக்கா?”-ன்னு அவர் புலம்பும் வேளையில், கசங்கிப்போய் கடைசிப்பிள்ளை வாசலில் வந்து நிற்பார். ஒரு அவுன்ஸ் ஓம வாட்டரோ, ஒரு கிளாஸ் பெருங்காயம் கலந்த மோரோ அல்லது ஒரு ஸ்பூன் அன்னப் பொடியோ செய்து தரத் தெரியாத படித்த அறிவாளி நாகரீக குடும்பத்தில் இப்படித்தான் முதலுதவிகள் ரொம்ப காஸ்ட்லி! கைப்பக்குவமாய் முதல் உதவி செய்ய உதவும் மூலிகைகள் சில குறித்து பார்க்கலாமா?

ஆடாதொடை- எந்த உரமும் போடாமல்,எந்த பராமரிப்பும் தேவையில்லாமல் அழகாய் வளரக் கூடிய இந்த செடியின் இலைகள் சளி இருமலுக்கு மிகச் சிறந்த மருந்து. கொடிய கசப்புள்ள இந்த செடியின் சாறு தேன் சேர்த்து ஒரு சிரப் மாதிரி செய்து வைத்து கொடுக்க, குழந்தை பெரியவர்களுக்கு வரும் கொடிய இருமலுக்கு சளி வர தயங்கும் நீடித்த இருமலுக்கு அற்புதமான மருந்து! வளர்க்க இடமில்லாதவர்கள், இலையின் உலர்ந்த பொடியை கசாயமாக்கிப் பயன்படுத்தலாம்.

அதிமதுரம் - இனிப்பு சுவையுள்ள இந்த மூலிகை வேர் வறட்டு இருமல், வயிற்று வலி போக்கும் மருந்து. சிறு துண்டை நாவினுள் அடக்கிக் கொண்டு சாறை முழுங்குவது போதும்.

திப்பிலி – சளியுடன் வீசிங் வரும் சமயம், மருந்துகளுக்கு முன்னர் திப்பிலி கசாயமோ அல்லது அதன் வறுத்த பொடியை தேனில் குழைத்து சாப்பிடுவது ’வீசிங்கை’ குறைக்கும். சளியை எளிதாகப் போக்க உதவும்.

ஓமம் – வயிறு செரிக்காமல், கொஞ்சம் உப்புசமோ அல்லது செர்யாது வயிற்றுப்போக்கோ இருந்தால் ஓமத்தை வறுத்து கசாயமாக்கி சாப்பிடலாம். ஓமவாட்டர் வீட்டில் வைத்திருந்து அதில் 10மிலி அளவு எடுத்து வெதுவெதுப்பான நீர் கலந்து ½ டம்ளர் குடிக்கச் சொல்லலாம்.
சீரகம்- லேசான கிறுகிறுப்பு அதிக பித்தம் மாதிரி இருப்பின் சீரகத்தூளை கரும்புச்சாறிலோ அல்லது வெந்நீரிலோ சாப்பிட குறையும்.

வாய்விடங்கம்- வாயுப்பிடிப்புடன் முதுகு-குறுக்கு வலியிருப்பின் வாய்விடங்கம், சுக்கு மிளகு சேர்த்து கசாயமாக்கி இரண்டு வேளை சாப்பிட்டு மதிய வேளையில் மோரில் பெருங்காய தூள் போட்டு சாப்பிட தீரும்.

கடுக்காய்- விதையை நீக்கிய கடுக்காயை நன்கு பொடி செய்து வைத்துக் கொண்டு மலச்சிக்கல் இருந்தால் இரவுதோறும் 1 ஸ்பூன் வெந்நீரில் சாப்பிட மலம் எளிதில் கழியும்.

கற்றாழை – குமரி எனும் கற்றாழை பெண்களுக்கு மாதவிடாய் காலத்துவரும்வலிக்கு அருமையான முதல் உதவி. கற்றாழையின் உள் உள்ள சோறில் பூண்டு வெந்தயம் பனைவெல்லம் சேர்த்து லேகியமாக/களீயாக கிளறி எடுத்து தினசரி ஒரு சிரூ நெல்லிக்காய் அளவு சாப்பிடலாம். உள் சோற்றை நன்கு கழுவி அப்படியேவும் 1ஸ்பூன் அளவு சாப்பிடலாம். கற்றாழை பெண்ணிற்கான முதல் மூலிகை!

சாதிக்காய்-தூக்கம் வராமல் சங்கடப்படுபவருக்கும், நரம்புத் தளர்ச்சி உள்ளவருக்கும் சாதிக்காய் தூள் ½ சிட்டிகை அளவு இரவு படுக்கும் போது பாலில் சாப்பிட தூக்கம் வரும் நரம்பு வலுப்படும்.

இலவங்கப்பட்டை – பிரியாணியில் வாசம் தூக்க மட்டுமல்ல, இந்த பட்டையை தே நீரில் கொஞ்சம் போட்டு சாப்பிட மதுமேகம் கட்டுப்படும். உணவில் சிறிதளவு சேர்த்துவர குடற்புண்கள் ஆறும்.

இந்த பட்டியல் பெரிது..ஆனால் இந்த அறிவு மிக முக்கியமானது. பிட்சாவிற்கு மெக்ஸிகன் சில்லி போடவும் சல்சா சட்னி தொடவும் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டும் நாம், நம் பாரம்பரிய சொத்தை மறப்பதும் மறுப்பதும் மடமை. ஹெல்தி கிச்சன் என்பது இன்றைய காலத்தின் கட்டாயம். அந்த கிச்சனில் இந்த பொருட்களும் பொருள் குறித்த அறிவும் மிக அவசியம். எந்த மூலிகை எப்படி இருக்கும் என எனக்கு தெரியாதே என டபாய்க்க வேண்டாம். ’ஓட்ஸ்’ தெரியாத பாட்டியோ/பேத்தியோ இன்று கிடையாது. ஐந்து வருட்த்திற்கு முன் ’ஓட்ஸ்’-என்றால் எத்தனை பேருக்கு தெரிந்த்து? ஆனால் தினையோ கம்போ பற்றி பேசினால், ”இப்பல்லாம் அது கிடைக்கிறதா என்ன?”- என வியப்புடன் கேட்பார்கள். காரணம் ஓட்ஸ் வேக வேகமாக சந்தைப்படுத்தப்படுவது தான்.

அதிலுள்ள வணிக லாபங்கள் அவசர அவசரமாக அதன் நற்குணங்களை முதன்மைப்படுத்துகின்றன. நம்ம ஊர் கம்பும் தினையும் யதார்த்த சினிமாவின் கவிதை வரியில் மட்டும் ஒட்டிச் சிலாகிப்பதுடன் நின்று போகின்றன. ஆதலால் நாம் தான் இந்த மூலிகைகளை நலம் பயக்கும் சிறு தானியங்களை கூடுதல் அக்கறையுடன் தேடித் தெரிய வேண்டும். தெரிந்து பயன்படுத்த வேண்டும். அது நம்மையும், நம் விவசாயத்தையும் பாதுகாக்கும்!

காய்ச்சல்.

ஒன்பது பத்து வயதிருக்கலாம்..ஆனால் இன்னும் அந்த காய்ச்சலின் கதகதப்பு மறக்கவில்லை.”எக்கா! ரொம்ப சுடுதுக்கா..பேசாம நவனீதன் டாக்டர்கிட்ட கூட்டிட்டு போயிடலாம் என லோகு மாமா, என் அம்மாவிடம் சொன்னதும், “இன்னும் பத்து நிமிசத்தில கசாயம் வைக்கிறேன், ரண்டு வேளை பாத்திட்டு அப்புறம் குறையலேன்னா டாக்டர் வீட்டுக்குப் போகலாம்”, என பாட்டி சொல்லிக் கொண்டே வீட்டு முற்றத்தில் இருந்த கருப்புத் துளசியை கை நிறைய பறித்து வைத்துக் கொண்டு.,ஏல லோகு! தோட்டத்தில போய், ஒரு கைப்பிடி கப்பூர வல்லி, கொஞ்சம் நிலவேம்பு அரிஞ்சிட்டு வா” என சொல்லிய குரல் இன்னும் காதில் ஒலிக்கிறது.
சொன்னபடி பத்து நிமிஷத்தில் அந்த அடுப்பங்கரை, அவசர சிகிச்சை தரும் மருத்துவமனையாகும். அதுவரை எண்ணைய்ப் பிசிக்குடன் இருந்த அஞ்சரைப்பெட்டியின் முகம் திடீர் முதலுதவிப் பெட்டியாக மாற மடமடவென, மிளகு, சுக்கு, ஓமம் என ஒவ்வொரு பொருளாய் வர, செம்புப் பாத்திரத்தில், கசாயம் கொதிக்கத் துவங்கும். உள்ளிருந்து வரும் மணம் மானாவெளியில் உட்கார்ந்திருக்கும் என் நாசியில் ஏற ஏற உடல் வலி குறையத் துவங்கும். கசப்பான அந்தக் கசாயத்தைத் தன் கண்டாங்கி சேலைத் தலைப்பில் இறுகப் பிடித்து எடுத்து வந்து..”மடமடன்னு குடிக்கணும் சொல்லிட்டேன்’ அப்பத்தான் கடைசி வாய்க்குக் கருப்பட்டி தருவேன்,” என்ற பாட்டியின் அதட்டல் அன்பில், வேகமாய்க் கசாயம் குடித்து முடிக்கையில், காது பக்க முடி நனைந்து, வியர்வைத் துளிகள் முகமெங்கும் வர வர காய்ச்சல் விடைபெற்றிருக்கும்..மூணு, நாலு நாளில் சளி எல்லாம் வெளியேற, ”கருப்பட்டி தனியா தரமாட்டீங்களா பாட்டி?” என்ற என் வினவலுடன்..காய்ச்சல் காணாமல் போகும்.
”என் பையன் ரொம்ப கெட்டி சார்.! லேசா ஃபீவர் வரணும், அவனே போய் ’டோலோ’ வாங்கிப் போட்டிருவான்.. ’ஆண்டி பயாடிக்’ கூட அவனுக்கு அத்துப்படி..” என்ற அவசரகால அம்மா ஒருவர் என்னிடம் மருத்துவமனையில் சொன்னதைப் பார்க்கும் போது, எங்கே போய்விட்டாள் என் பாட்டி? எங்கே போகிறார்கள் இவர்கள்?” என என் மனம் ஏனோ தேடும்.
காய்ச்சல்- எந்த ஒரு இரும்பு மனிதரையும் வருடத்திற்கு இரண்டு மூன்று முறையேனும் பதம் பார்க்கும் துன்பம் காய்ச்சல். ‘எனக்கு காய்ச்சலே வந்ததில்லை’, என எவரும் சொல்ல முடியாது. ஆனால், இந்தக் காய்ச்சல் ஒரு தனி நோய் இல்லை. வேறு ஏதெனும் நோய்க்கான ஒரு வெளிப்பாடு அல்லது குறிகுணம் தான் காய்ச்சல். எப்படி இதனை எதிர் கொள்வது? உடனே மருத்துவரை நோக்கி ஒடணுமா? அலட்சியமாக இருக்கலாமா?

காய்ச்சல் பற்றிய அடிப்படை அறிவு,, ”சாமுத்ரிகா பட்டு” மாதிரி, ”நேச்சுரல் வண்ணப் பட்டு” மாதிரி, ”பி.ஃப்.கடனுக்கான வட்டிக் கணக்கு” மாதிரி ”கண்டிஷனர் கலந்த ஷாம்பு” பற்றி எல்லாம் தெரிந்திருக்கிற மாதிரி, கண்டிப்பாய் ஒவ்வொரு அம்மாக்கும், அப்பாக்கும் தெரிந்திருக்கணும். .தெரிஞ்சுக்குவோமா?
நம் உடலுக்குள் ஏதேனும் வைரசோ, பாக்டிரீயாவோ திடீர் அழையா விருந்தாளியாக உள் நுழைந்தால், ஏதேனும் உடலின் வெளிப்புறமோ, உள்புறமோ காயங்கள் ஏற்பட்டிருந்தால், வேறு ஏதும் நோய் நிலையிலோ, நம் உடல் தன்னை காத்துக் கொள்ளவும், காயத்தை ஆற்றவும், வைரஸ், பாக்டீரியாவை எதிர்க்கவும் நடத்தும் போரில் வரும் உடல் வெப்ப உயர்வே காய்ச்சல். நல்ல ஆரோக்கியமான உடலில் இந்தக் காய்ச்சல் பெரும்பாலும் ஒன்றும் செய்வதில்லை. ஓரிரு நாள் சுரம் காய்ந்து ஓய்வதுடன் வேறேதும் நிகழ்வதில்லை. ’லங்கணம் பரம் ஒவுஷதம்’, என்று ஒரு மருத்துவ மொழி உண்டு. அதன் பொருள், ’காய்ச்சலுக்கு மருந்து பட்டினி’, என்பது தான். இப்போதைய உடல் வலுவுக்கு பட்டினி இருத்தல் நல்லது அல்ல. எளிய, விரைவில் செரிக்கக் கூடிய உணவு (இட்டிலி, இடியாப்பம், புழுங்கல் அரிசி கஞ்சி….போன்ற) மட்டுமே குறைவாக எடுப்பது சிறந்தது. நிறைய வெதுவெதுப்பான நீர் அருந்துவதும், புளிப்பில்லாத பழச்சாறு குடிப்பதும் மிக அவசியம். நிலவேம்புக் கசாயம் மட்டும் மூன்று நாள் தவறாமல் எடுத்துக் கொள்ளுதல் போதுமானது.
சளியுடன் கூடிய காய்ச்சல் எனில் காலை மாலை இரண்டு வேளை ஆடாதொடைக் அல்லது தூதுவேளை கசாயமும் குடிப்பது அவசியம். ’அதுக்கெல்லாம்..கொல்லிமலைக்குப் போகணுமோ என ஆயிரத்தில் ஒருவனாக’ கற்பனை எல்லாம் செய்ய வேணாம்..உங்கள் அடுக்குமாடி வீட்டு அறையில் கூட கொஞ்சம் வெளிச்சம், தண்ணீர், கூடவே கொஞ்சம் அக்கறையும் ஊற்றி இம்மூலிகையினை அழகாய் வளர்க்கலாம். ”நேரமில்லயே!” என வழக்கமான புலம்பல் வேண்டாம். கிளினிக் வாசலில் காத்து நிற்கும் நேரத்தை விட இதற்கு மெனக்கிடுவது குறைவாகத் தான் இருக்கும்.
சிறு குழந்தைக்கு வந்த சுரம் எனில், துளசி, மிளகு, கற்பூரவல்லி, வெற்றிலை, மாசிக்காய் தூள், கசாயமாக்கி 30-60 மிலி இரண்டு வேளை 4 நாட்கள் கொடுக்கலாம்.அசீரணத்தினைத் தொடர்ந்து வந்த சுரம் எனில், சீரகக் கசாயம் இரு வேளை கொடுங்கள். மலம் சரியாக பிரியவில்லை எனில் ஒருமுறை பேதியாகும் படி ஆமணக்கு எண்ணெயோ, அருகாமையில் உள்ள உங்கள் குடும்ப மருத்துவர் தரும் பேதிமருந்தோ எடுப்பது நல்லது.
வைரஸ் காய்ச்சல் பெரிய தொந்தரவு பெரும்பாலும் தருவதில்லை என்ற பரவலான கருத்து பொய்த்து வருகிறது. புவி வெப்பமடைதலாலோ, இந்த மண்ணையும் நம் சூழலையும் நாம் கண்டபடி நம் வசதிக்கென கெடுத்து வந்ததாலோ, கோபம் கொண்ட நட்பு வைரஸ்கள் எல்லாம் நம்மோடு ’டூ’ விடத் துவங்கிவிட்டன. அதன் வெளிப்பாடு தான் சமீபத்தில் தமிழகத்தைப் பாடாய்ப்படுத்தி, எல்லா மருத்துவருக்கும் ’பெப்பே’ காட்டி வரும் மாறுதலான சிக்கன் குனியா.



எங்கோ மேற்கு ஆப்பிரிக்காவில் லேசாய் 1950 களில் தலைகாட்டி, 40ஆண்டுகள் ஆளரவமில்லாமல் இருந்த ஆல்ஃபாவைரஸ் நம்மூர் கூவத்துச் செழிப்பில், கொழித்துப்போன ஏடஸ் ஏஜிஸெகிப்டிகஸ் கொசுவில் குடித்தனம் வைத்து 2006 டிசம்பர் முதல் நம்மைச் சுற்றி அதிகம் வலம் வரத் துவங்கிவிட்டன. விளைவு..காய்ச்சல், அது போன பின்பும் மூட்டுவலி, காலை எழுந்தவுடன் கை, கால் மூட்டுகள் எல்லாம் ஃபெவிக்கால் போட்டு இறுகியது போன்ற உண்ர்வும் கூடவே தாங்க முடியாத வலியும் மாதக் கணக்கில் தொடர்கிறது. மிகவும் கொடுமையான விஷயம், இந்த சாதாரண சுரம், தமிழகத்தில் சில சாமானிய மக்களை மரணமும் அடையச் செய்திருப்பது தான்.
சிக்கன் குனியாவைப் பரப்புவது அந்த ஏடஸ் வகைக் கொசு தான். ஒருவரை அது கடித்துவிட்டு அருகாமையில் உள்ளவரைக் கடித்தால் வைரஸ் அவரிடம் இருந்து இவருக்குப் பரவி விடும். கொசுவை கூடிய வரை உள் நுழையாது கவனமாக வீட்டை வையுங்கள். நல்ல தண்ணீரை சேமித்து வைப்பதில் கொசு பரவ வாய்ப்பு அதிகம். இதனைத் தவிர்த்துவிடுங்கள். வீட்டில் வாரம் மூன்று நாள் நெல்லிக்காய்ப் பச்சடி (பெரிய நெல்லிக்காயில்), மிளகு ரசம், கண்டிப்பாகச் செய்யுங்கள். இன்னும் ஓரிரு மாதத்தில் பூக்கத் துவங்கும், வேப்பமரத்தின் பூவினை வைத்து வேப்பம்பூ ரசம் வையுங்கள். உணவில் கூடியவரை இனிப்பைத் தவிர்த்துவிடுங்கள்.அருகாமையில் இந்தக் காய்ச்சல் இருந்தால், சித்த மருத்துவரிடம் கிடைக்கும் நிலவேம்புக் குடிநீரை வாங்கி, வீட்டில் உள்ள அனைவரும் தினசரி காலை மாலை வெறும் வயிற்றில் 60-90 மிலி அளவு கசாயம் வைத்து ஒரு வாரம் சாப்பிடுங்கள்.
காய்ச்சலின் தன்மை மாலை மட்டும் உயர்ந்தாலோ, சளியுடன் இருந்தாலோ அது பிரைமரி காம்பிளக்ஸ் எனும் காசமாக இருக்கலாம். காய்ச்சலுடன் பல்லீறுகளில் இரத்தம் கசிவது, கெண்டைக்கால் மட்டும் வலிப்பது இருந்தாலோ டெங்கு அல்லது லெப்டோஸ்பைரோஸிஸ் எனும் எலிச்சுரமாகவோ இருக்கலாம். வலப்பக்க வயிறு வலி வீக்கத்துடன் கண்கள் மஞ்சளித்து இருப்பதும், சிறுநீர் மஞ்சளாகப் போவதும் இருப்பின் காமாலையாக இருக்கலாம். கஞ்சி போல் பேதியாவதுடன், தினசரி படிப்படியாக காய்ச்சலிருப்பின் டைபாய்டாக இருக்கலாம். இது போன்ற சூழலில் உங்கள் குடும்ப மருத்துவரின் நோய்க் கணிப்பும் முறையான சிகிச்சையும் மிக அவசியம்.
காய்ச்சலில் சில சிறு குழந்தைகட்கு அதிக சுரம் தாங்காமல் வலிப்பு வரக் கூடும். அதைத் தவிர்க்க, சுரம் 100-102 வரும் வரை பார்த்துக் கொண்டிராமல், தகுந்த சிகிச்சையுடன், நெற்றியில் வெள்ளைத்துணியை நனைத்து குளிர்பிப்பது அவசியம். அவ்வித ஃபெப்ரைல் கன்வல்ஷன்ஸ் எனும் வலிப்பு குறித்து வாழ் நாள் முழுதும் தொடர்ந்திடுமோ என்று அச்சமடையத் தேவையில்லை. உடல் நோய் எதிர்ப்பாற்றலை உயர்த்திட்டால் போதும்.
காய்ச்சலில் இவ்வளவா? என்கிறீர்களா? சித்த மருத்துவம் 62 வகை சுரம் பற்றி பேசுகிறது. அத்தனையும் அறிந்திருப்பது இயலாது. ஆனால் ஒவ்வொரு வீட்டுப் பெரியவரும் இதன் அடிப்படை சில உண்மைகளையாவது அறிந்திருப்பது மிகவும் அவசியமல்லவா?

அப்படியே சாப்பிடலாமா?


எந்த உணவாயிருந்தாலும் அப்படியே சாப்பிடலாமா? அவித்து அரைத்துத்தான் சாப்பிட வேண்டுமா? என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி..புற்று நோய்க்கான கூட்டுமருத்துவ சிகிச்சை குறித்த ஆய்வுபற்றி பேச வந்த அழைப்பின் பேரில், அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் கிளீவ்லாந்தில் இருந்த சமயம். அந்த 4 டிகிரி குளிரில், உப்பு புளி காரம் ஒன்றும் இல்லாத  “கோழி கறியா? வான்கோழியா? என்ன சாப்பிடுறீங்க?, என்று வெள்ளைக்கார அம்மணி கேட்ட கேள்வியில், உறைந்து போய் உட்கார்ந்திருந்த போது அடுத்த கட்டுரை எதை எழுதுவது என்ற யோசனை வந்தது..வான்கோழியா அல்லது அது வாலாட்டும் டயனாசரஸா இந்த அமெரிக்கர்கள் எதையும் சமைத்து தந்துவிடுவர் என்ற அச்சத்தில் பரிதாபமாய், கொஞ்சம் ஸ்பினாச் சாலட்(வேற ஒண்ணுமில்லைங்க.. நம்ம ஊர் கீரைக்கு மச்சினன் தான் ஸ்பினாச் கீரை), கொஞ்சம் பழத்துண்டுகளை ஆர்டர் செய்து, இதைப்பற்றியே எழுதினாலென்ன என்பதில் பிறந்ததுதான் இந்த கட்டுரை!

வயிற்றுக்குள்ளேயே ஒரு அடுப்பு இருக்கும் போது எதற்கு சமையலெல்லாம்..?அப்படியே சாப்பிட்டால் தான் அவிழ்தம் என்று இயற்கை உணவு ஆலோசகர்கள் அடிக்கடி கூறுவதுண்டு. ஆதாமும் ஏவாளும்  அவர்கள் குடும்பத்தாரும் அப்டித்தான் சாப்பிட்டார்கள். ஆனால்  நெருப்பு ஒன்றை மனிதன்சிக்கிமுக்கிக் கல்லை உரசி கண்டுபிடித்த பின்பு சுடாத பழம் வேணாம் சுட்ட பழம் சாப்பிடலாமே என்ற கருத்து மேலோங்கி, அது வளர்ந்து வளர்ந்து, ஐந்து சுற்று முருக்கு, மோர்க்குழம்பில் மிதக்கும் வடை என வகைவகையாக்கச் சமைத்துச் சாப்பிடும் பழக்கம் பெருகியது.

பசிக்கு உணவு என்ற நிலை மாறி, ருசிக்கு உணவு, சாப்பாடு எனும் சாக்குபோக்கு சொல்லி காதலியின் கரம் பற்றி மனம் களிக்க எதை தின்னால் என்ன , என்ற நிலைகள் வந்ததும், உணவு தயாரிப்பில் பொரியல் வருவலாகி, பின் கருகலாகி, சமையல் என்பது சுரம் தப்பிய சூப்பர் சிங்கர் போலானது. ஆதலால், மீண்டும் நாம் ஏன்  “ஹார்லிக்ஸை மட்டுமன்றி அவரக்காய் வெண்டைக்காயையும்  ஏன் அப்படியே சாப்பிடக் கூடாது? என்ற கருத்து வலுக்க ஆரம்பித்துவிட்ட்து.. எதை அப்ப்டியே சாப்பிடணும் எதை சமைத்து சாப்பிடணும் என்பதை தெரிவதற்கு, முன் நம் மரபணு பற்றிய சூட்சுமம் நம்க்கு தெரிந்தாக வேண்டும். 

20-25 வருடம் அம்மா சமையலில் சாப்பிட்ட வயிறுக்கு, திருமணமான ஆறுமாதம் கழித்து, மனைவி வைக்கும் வெந்நீர் கூட கொஞ்சம் வயிற்றைப்பிரட்டுவதாகத் தெரியும் போது, இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக சமைத்த உணவில் பழகிப் போன சீரணமண்டலம் திடீரென அனைத்தையும் சமைக்காமல் சாப்பிட துவங்கும் போது சிலருக்கு சேட்டை செய்யக் கூடும். அதற்குக் காரணம் epigenitics என்கிற சூழலுக்கு ஏற்ப மரபணு பழகிப்போன/மாறிப்போன விஷயம் என்கிறது நவீன அறிவியல். தடாலடியாக சரவணபவனில் இருந்து கோயம்பேடு மார்க்கட்டுக்கு குடித்தனம் போய் விடாமல் படிப்படியாக இயற்கை உணவிற்கு சிலவற்றை கொண்டு செல்வது தான் புத்திசாலித்தனம். ஆரோக்கியமும் கூட.

பழங்கள்தாம் அப்படியே சாப்பிடுவதில் முதல் தேர்வு. பழத் துண்டுகளுக்கு மேல் ஐஸ்கிரீம் போடுவது, சர்க்கரை போடுவது என்ற அதிகப் பிரசங்கித்தனமில்லாமல் பழத்துண்டுகளை அப்படியே சாப்பிடுவது உத்தமம். பழ அப்பம், அன்னாசிபழக் குழம்பு என பழத்தையும் சமைக்கும் பழக்கம் பரவி வருகிறது.. எப்போதோ விருந்துக்கு வேண்டுமென்றால் அது சரி.. அடிக்கடி இப்படித்தான் சாப்பிடுவேன் என அடம்பிடித்தால், பழம் அதன் பயன் தராது. பழங்களில் நோய் எதிர்ப்பாற்றல், வயோதிகம் குறைக்கும் மார்க்கண்டேய மகத்துவம், இன்னும், கான்சர் முதலிய பல நாட்பட்ட நோய்களை எதிர்க்கும் தாவர சத்துக்கள் பழங்களில் அதிகம் உண்டு.. சிவப்பு, நீல,ஆரஞ்சு, மஞ்சள் நிறமுள்ள அனைத்துப் பழங்களிலும் இந்த நிறமிச்சத்துக்களால் கூடுதல் பலன் உண்டு. சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள இந்திய மருத்துவ ஆரய்ச்சி கழகத்தைச் சார்ந்த தேசிய உணவியல் கழகம் எது சிறந்த பழம் என்ற அறிக்கையை விட்ட்து...அதில் முதலிடம் பிடித்த்து எந்த கனி தெரியுமா? நம்ம ஊர் கொய்யா.. சும்மா  பம்மாத்துக்கு இனி வெளிநாட்டு ஆப்பிள் வாங்கி காசை வீணாக்காமல் கொய்யாக்கனிக்கு மாறுங்கள். அதில் மிளகாய் வற்றல் உப்பு தூவி சாப்பிடுவது தப்பு. வெறும் மிளகாய் வற்றல், அல்சரில் இருந்து கான்சர் வரை வரவழைக்கும்.

அதே போல் நறுமண சத்துள்ள உணவுகளான இலவங்கப்பட்டை, அன்னாசிபூ, ஏலம், சீரகம், பெருஞ்சீரகம் முதலான உணவுப் பொருட்களை அதிகம் சூடக்காமல் மிதமான கொதிப்பில் பரிமாறுவது நல்லது..இப்பொருட்களை சமைத்து முடித்த சூட்டில் கடைசியாக ஓரிரு நொடிகள் மட்டும் போட்டு, பின் கொதியில் இருந்து இறக்கிவிட்டால் நல்லது. அப்போது தான் அந்த நறுமணப்பொருளில் உள்ள யூஜினின் சத்து ஓடிப்போகாது.

அதிக நார்தன்மையுள்ள கீரை, மாவுச்சத்துள்ள கிழங்குகளை சமைத்துச் சாப்பிடுவது தான்  நல்லது.. செல்லுலோஸ் அதிகமுள்ள கீரைகள், கார்போஹைட்ரேட் அதிகமுள்ள கிழங்குகள் வேகாதிருப்பின் அசீரணம் உண்டாகும். வெந்து கெட்ட்து முருங்கைக் கீரை;வேகாமல் கெட்ட்து அகத்திக் கீரை என்ற பழமொழி சொல்வது முருங்கைகீரையை அதிகம் வேக வைக்க கூடாது என்பதைதான். நார் அதிகம்மில்லாத காய்கறிகள் அப்படியே சாப்பிடுவதில் தவறில்லை. வெண்டை, வெங்காயம், கேரட், முள்ளங்கி, தக்காளி இவை அப்படியே சாப்பிடுவதில் முதலிடம் பிடிக்கும் காய்கர்றிகள். சுரைக்காய் சாறு சாப்பிடும் பழக்கம் யோகாபிரியர்களீடம் அதிகரித்து வருகிறது. அது நல்லதுதான்..ஒரு வேளை சுரைக்காய் லேசாக கசந்தால் தவிர்ப்பது நல்லது.

லேசாக ஆவியில் வெந்தபின் காய்கறிகளைச் சாப்பிடுவது அதிக உடல் உழைப்பில்லாதவருக்கு, செடண்டரி வேலை செய்யும் நபருக்கு, நல்லது. அதிக உடல் உழைப்பு உள்ளவருக்கு சீரணத்திற்கான வெப்பம் சிறப்பாக உடலில் இருக்கும். அவர்கள் சமைக்காமல் சாப்பிட்டாலும் செரிக்கும். ஒரு முறை வேகவைத்து இடித்த அவல், பொரி அப்படியே அல்லது ஊற வைத்து சாப்பிடலாம். பாசிப்பயறு, கொண்டைக்கடலை போன்ற முளைகட்டிய தானியங்கள் அப்படியே சாப்பிடலாம். முலாஇகட்டிய தானியங்களில் அஹிகப்படியான புரதங்கள் ஒருசில எதிர் ஊட்டசத்தும்(anti nutrients) இருப்பதாக சில கருத்துக்கள் வருகின்றன. ஆதலால், அவற்றுடன் மிளகுத்துள் சேர்த்து சாப்பிடுவது இன்னும் நல்லது. சமைக்காத காய்கறியை/பழங்களை உணவுக்கு முன்னர் சாப்பிடுவதும் சீரணத்திற்கு நல்லது.

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் நிலா சோறு சாப்பிட்டு.பக்கத்துவீட்டு அக்கா,எதிர் வீட்டு கதிர்வேல், மச்சு வீட்டுத்தோழர்கள் என கூட்டமாய் நடக்கும் இரவு விருந்தில் எல்லோரது தட்டிலும் நிரவி இருப்பது நிலவொளி தான். அன்றைய மதிய வேளையின் மீதியும்,அதனுடானான அம்மவின் அவசர மெனக்கிடலில் விளைந்த கொத்தமல்லி சட்னியும் தான் பெரும்பாலும் நிலாச்சோறின் மெனு. எத்தனை தொலைவு சென்றாலும் மறக்க முடியாத சில பரிச்சயமான முகங்கள் போல, நிலா நம்மில் பலருக்கும் சினேகமான ஒன்று.அம்மாவின் இடுப்பில் இருந்து கொண்டு, குழைத்த பருப்புபூவாவில்  நிலவைத் தொட்டுத் தின்ன காலம் நினைவில் இல்லை என்றாலும் இந்த நிலாச் சோறு மறக்க முடியாதது.

சனிக் கிழமை ஒமவாட்டர் குடிச்சியா?போன வாரம் வேப்பங்கொழுந்து மஞ்சள் அரைத்து கொடுத்தியா? என்ற கேள்விகளுடன் ஆரம்பிக்கும்  நிலாச்சோற்று உரையாடல், திடீரென கருப்பு வெள்ளை சாலிடர் டீ.வி யில் தெரியும்சித்ரஹார்-ல வரும் அந்தக்கால கிஷோர் குமார் பாடல்ட்யூஷன் டீச்சர் கட்டி வந்த ஷிபான் சேலை என சுற்றி,,கதிர பாரு,தட்டு சுத்தமா இருக்கு.. நீ ஏன் மிளகை பொறுக்கி வச்சிருக்கே? மோர் சோறு கொஞ்சமாவது சாப்பிடாம எந்திரிக்கக் கூடாது. என்ற வினவல்களுடன் முடியும்.  நாட்டு வாழைப் பழத்தின் நாரையும் விடாமல் எப்படி சாப்பிடணும் என்ற மாமியின் விளக்கத்துடன்  நாங்களும் நிலவும் தூங்கச் செல்வோம்.

அது என்னப்பா? நிலாச்சோறு?..அப்படி புது ரெஸ்டாரண்ட் ஒபன் பண்ணியிருக்கங்களாப்பா?-இன்றைய தலைமுறை தொலைத்தவைகளில் இதுவும் ஒன்று.காங்கரீட் காடுகளின் அடுக்குமாடி குடியிருப்புகளில் பாவம் நிலவுக்கு ஒரு சதுர அடி கூட இல்லை. கையெழுத்து இல்லாமல் வரும் அந்த விருந்தினரைப் பார்க்க அபார்ட்மெண்ட் செயலர் அனுமதிக்காததால், காயப்போட்டு எடுக்காத போர்வையுடன் மட்டும் பேசிச் செல்லும்.

உணவின் உன்னதம் சமைப்பதிலும், அலங்கரிப்பதிலும், ஊட்டுவதிலும், பரிமாறுவதிலும், சாப்பிடும் முறையிலும், சாப்பிடும் இடத்திலும், எல்லாவற்றையும் விட சமைப்பவர் மனதிலும் கூட இருக்கின்றது!

தமிழகத்து பிராமணரல்லாதோர் இயக்கமும் , கேரளத்து பிராமணர் மறுப்பு இயக்கமும்

1. வரலாற்றுப் பின்னணி

இந்திய உபகண்டம் புராதான கலாச்சார பண்பாடுமிக்க சமூகமாய் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுந்து நின்ற போது, எமது இந்திய தேசத்தை காரிருள் ஒன்று சூழ்ந்தது. நட்சத்திரங்களும் வெண்ணிலவும், நால்புறத்து நீல நிற கடலும், முத்துவும், பவழமும், வைடுரியமும் நம் சந்தைகளில் கூறுவைத்து விற்றகாலத்தில் நமது முப்பாட்டனின் முன்னோர்கள் விவசாய நெல்மணிகளை பிரிக்க யானை கட்டி போரடித்த காலம். பிராமணன் என்ற வர்ணமும் பின் தாசன் என்ற வர்ணமும் தாசனிலிருந்து இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் 6,400 சாதிகளும் உருவாகாத காலம். காரிருள் சூழ்ந்ததும் வானில் மின்னிய நட்சத்திரங்கள் கரிய இருளுக்கு பலியாவதற்கு விருப்பமின்றி தற்கொலை செய்து பூமியில் விழுந்து மரித்தது. இயற்கை தந்த வரங்கள் கொள்ளைக்கார படைகளாலும், பஞ்சம் பிழைக்க வந்த நாடோடிகளாலும் சீரழிக்கப்பட்டது. பண்பாடு, கலாச்சாரம் கொண்டு கரம் கேரளத்து நாடாண்ட மக்கள் கூறுகட்டி பிரிக்கப்பட்டனர். இந்திய தேசத்தை சூழ்ந்திருந்த காரிருள் பிரம்மன் என்ற ஒரு கொடிய பாம்பாக வாயை பிழந்து விழுங்கியது.

இருள் சூழ்ந்த நம் தேசத்தில் கொளுந்து விட்ட ஜிவாலைகள் வானில் தோன்றிய போதெல்லாம் அந்த கொடூர பாம்பு விழுங்கி உண்டது. மெளரிய, குப்த பேரரசுகள் இந்தியாவை ஆண்ட போது அந்தக் கொடூர பாம்பு கொழுத்துக் கிடந்தது.

கி.பி. 18ம் நூற்றாண்டில் இந்திய சமூகம் பிரம்ம விஷ ஜந்துவான பாம்பு தனது அந்திமக் காலத்தை எதிர் கொள்ளத் துவங்கியது. இந்திய தேசமெங்கும் வியாபித்த தீ ஜிவாலைகள் எழுச்சியுடன் கொளுந்து விட்டு எரியத் துவங்கியது. அன்றைய கேரளத்திலும், தமிழகத்திலும் பலமான மின்னல்கள், இடியோடு எழத் துவங்கியது. இடி முழக்கமும், மின்னல்களின் சக்தியும், வீரியமும் விஷ ஜந்துவான பிரம்ம நாகத்தைத் துடிதுடிக்க வைத்தது.

தமிழக, கேரள சூழல்கள் என்பது அன்றைய இந்திய சூழலுக்கு உட்பட்டது என்பதால், அன்றைய இந்திய சூழலை புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழக கேரள சூழல் என்பது திராவிட சமூக இரு பிரிவுகள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். முந்தைய தமிழ் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்ட குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து நிலப்பகுதிகளும் சாதிகளற்ற திராவிட சமூகத்தின் ஐந்து கூறுகள் ஆகும். மலை சார்ந்த பகுதி மக்களும். காடு சார்ந்த பகுதி மக்களும், வயல் சார்ந்த வாழ்வு வாழ்ந்த மக்களும், கடல் சார்ந்த மக்களின் வாழ்வுடன், பாலை நில மண் மக்களும் கலந்ததே பாரதத் திராவிட சமூகமாய் அடையாளப்படுத்தப்படுகிறது. நம் தேசத்தை ஆண்ட பரதன், மீனவ குலத்தில் பிறந்ததோடல்லாமல், இன்றைய இந்திய தேசத்தின் கடலினை போக்குவரத்தாக பயன்படுத்தி இந்திய தேசத்தை ஆண்டதால் நம் தேசம் பரத தேசம் என்றாகி பின்னர் பாரத தேசமாய் அறியப்பட்டது.

சதுர்வண, நால்வர்ண முறைக்கு இந்திய சமூகம் இறையாகிய பின்பு - பிராமண வா;க்கம் - இரண்டு பிரிவுகளாக பிரிந்து மோதத் துவங்கினர். பிராமண வர்க்கம் இரண்டாக பிளவுபட்டது. கல்வித்துறையில் மேலாண்மை பெற்ற வர்க்கம் அரசுத்துறையில் நாட்டம் கொள்ள தொடங்கினர். பிராமணர்களின் இந்த பிளவு இந்திய இரு பெரும் இதிகாசங்களான ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் எதிரொலித்தது. கல்வியே நமது குலப்பணி என்ற பிராமணர்கள் - வசிஷ்டரை குருவாகவும், அரசாள்வதே எங்களது பணியென்ற சத்திரியப் பிராமணர்கள் - விசுவாமித்திரரை தனது குருவாகக் கொண்டனர். சுதந்திரப் போராட்ட காலணிக் காலத்தில், திலகரும், அரவிந்தரும் சத்திரியராக வெளிப்பட, கோகலேயும், பானர்ஜியும் பிராமணராக மிதவாதியாக வெளிப்பட்டனர். வைசியர் என்னும் வர்ணம் வசிஷ்ட வம்சம் என்கிற குல புரோகிதர்களின் பரம்பரையாக இருந்தது. இந்திய சுதந்திரப் போரில் இந்த வசிஷ்ட வம்சம் தேசிய, தரகு முதலாளியாக பரிணமித்து, இந்திய சுதந்திர போரினை, பிராமண சத்திரிய பிராமணர்களை ஒன்றிணைத்து முன்னெடுத்துச் சென்றது. இன்றைய சேட் பிராமணர்கள் வைசிய பிராமணர்களின் கடைசி பிரிவு என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே, பிராமணன், சத்திரிய பிராமணன், வைசிய பிராமணன் என்று ஆரியர்கள் சதுர்வணத்தில் பலமான மூன்று அடுக்குகளை கைப்பற்றிய பின்பு நான்காவது அடுக்கு சூத்திரன் ஆகும். பிராமணர் அல்லாத அனைத்து இந்தியர்களும் சூத்திரர் என்று புரிந்து கொள்ள வேண்டும். (மார்க்சிஸ்ட் - அக்டோபர் 93-(ப 32))

பின்னால் சூத்திரர்களாக அடையாளப்படுத்தியவர்கள் நிலமற்ற உழைக்கும் மக்களை ‘ஆதிசூத்திரன்’ என்று ஐந்தாவது வடிவம் இந்திய சமூகத்தில் பிறப்பெடுத்த விபரங்களை ஆராய்ந்த முதல் அறிஞர் டாக்டர் அம்பேத்கர் என்னும் இந்திய மின்னலே. திப்புசுல்தான் மற்றும் இஸ்லாமிய மன்னர்கள், தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய பேரரசுகளுக்கு பின்பு பாளையத்துக்காரர்கள் மற்றும் குறுநில மன்னர்கள் அரசாண்ட போதும் அவர்களைச் சத்திரியர்களாக இந்திய சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் இந்திய சமூகம் என்று சொன்னால் வேத பொருளில் அது இந்து சமூகம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய ஜனநாயக விரோதப் போக்கில் இந்திய தேசமெங்கும் பிராமணன் - பிராமணரல்லாதோர் என்ற முரண்பாடு கூராக எழுந்தது. அதன் மற்றொரு வெளிப்பாடானது கிறிஸ்தவ மத செல்வாக்கும், இஸ்லாம் மதத்தின் செல்வாக்கும் என்றே புரிய வேண்டும். இந்து மதம் மிகுந்த செல்வாக்கான மதம் என்பது அதன் வர்ண பேதம் இஸ்லாம், கிறிஸ்துவத்தில் எதிரொலித்தது என்று புரிந்து கொள்ள வேண்டும். சூத்திரன் என்று புறந்தள்ளப்பட்டவர்கள் மிகச் சுலபமாக மதம் மாறுவதிலிருந்து எளிதில் தப்பித்து விடலாம் என்ற வாதம் தவறானதென்று இந்திய சமூகம் நிரூபித்தது. அதன் காரணமாக பிராமணரல்லாதோர் இயக்கம் இந்திய தேசத்தில் சூல் பிடித்த போது அதன் தாக்கம் தமிழக, கேரள சமூகத்தில் ஏற்படுத்திய அதிர்வுகள் பண்பாட்டுத் தளத்தில் பரந்து, விரிந்த பாதையினை உருவாக்கிப் பின் வென்றது. 

18-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் பிராமணர், சத்திரிய பிராமணர், வைசிய பிராமணர் என்று பலமான பிராமண சமூகம் சூல் பிடித்திருந்தது. 1854-ம் ஆண்டு மெக்காலே பரிந்துரைப்படி இந்திய ஆட்சிப்பணி தேர்வுக்கென்று ஆங்கிலம், சமஸ்கிருதம், அரபி இருந்தது.

ஆங்கிலம், சமஸ்கிருதம் இரண்டிலும் தேர்ச்சி பெற்ற வர்ணமான பிராமணர்களே ஆங்கிலேய ஆட்சியின் போதும் உயர்ந்த பதவிகளில் பணியாற்றினர். பிராமணர்களின் செல்வாக்கு தமிழக்தில் முந்தைய அரசர்கள் காலத்திலிருந்தே சூல் கொண்டிருந்தது. முதலாம் இராசராசன் கல்வெட்டு ஒன்று பிராமணர்களின் ஊர்களில் பிராமணர் அல்லாதோர் தனது காணிகளை விற்க வேண்டுமென்று கல்வெட்டு கூறுகிறது. (ஆதார நூல் 562 - 1893 ARE/915 1143:s11V238))

கேரளச் சூழலில் கேரளத்து பிராமணர்களான நம்பூதிரிகள் - கேரளப் பிராமணர்களாகவும் சத்திரியர்களாகவும் பரிணமித்த போதும் - வைசிய பிராமணன் என்னும் வர்க்கம் கேரளத்தில் வளரவில்லை. ஏனெனில் அன்றைய கேரளத்தில் சந்தைகள் கிடையாது. (ஆதாரம் அரவிந்த மகரிசி சத்திரிய தேடல் பக்கம் 67)

கேரளத்து மக்கள் சாதி, பேதமின்றி பொதுவிடத்தில் கூடக்கூடாது - நம்பூதிரிகள் குடும்பத்து மூத்த மகன் மட்டுமே நம்பூதிரிப் பெண்களைதிருமணம் முடிக்க முடியும். சொத்துரிமையில் அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இரண்டாம், மூன்றாம் நம்பூதிரி மகன்கள், நம்பூதிரி அல்லாத ஜாதிப் பெண்களையே திருமணம் முடிக்க வேண்டும். நம்பூதிரி குடும்பத்துக்குள் ஏகபோக வாரிசுப் போட்டி வராதபடி கடுமையான சட்டங்கள் அமுலில் இருந்தது. நம்பூதிரிப் பெண்கள் ஒரு விலங்கினை போலவே கல்வி, சமத்துவ உரிமைகளிலிருந்து விலக்கப்பட்டிருந்தனர். 

வைசியன் கேரளத்தில் இல்லாத போது கேரளத்து சூத்திரரான நாயர்களே நம்பூதிரிகளின் தோழனாகச் செயல்பட்டனர். 11-ம் நூற்றாண்டில் கேரள பூமியில் நாயர்கள் நில பிரபுக்களாக பதவி உயர்வு பெற்றனர். கேரளப் பிராமணர்களான நம்பூதிரிகள் கேரள சூத்திரரான நாயர்கள் மீது சிறிதளவே தீண்டாமை கொடுமையை பிரயோகித்தனர். 

தமிழகத்தில் பலமான சூத்திரரான சைவ வெள்ளாளரை அவர்ணர்களாக தமிழக பிராமணர்கள் ஒதுக்கி வைத்த போது கேரளத்து சூத்திரர்களான நாயர்களை சவர்ணராக உயர்த்தினர். கேரளத்து நாயர்களுக்கு கருவறைக்கு செல்ல மட்டும் உரிமையில்லை என்ற போதும் தமிழகத்து சூத்திரர்களுக்கு ஏற்பட்ட பேராபத்து நாயர்களுக்கு ஏற்படவில்லை. கருவறை மட்டுமே நாயர்களை அவர்ணர்களாக்கியது. கேரள சமூகத்தில் நாயர்கள் சவர்ணர்களாக பதவி உயர்வு பெற்றது நில உடைமையின் எதிரொலிப்பாகும். 

கேரளத்தில் அவர்ணர்களின் முதலானவர் ஈழுவர் என்றால், தமிழகத்தில் அவர்ணர்களில் முதலானவர் சைவ வெள்ளாளர் என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.(நூல் - அரவிந்த மகரிசி சத்திரிய தேடல் - பக்கம் 67) 

கேரளத்து நாயர் அறிவு ஜீவிகள் நம்பூதிரிப் பிராமணர்கள் மீது தீராத பகை கொண்டிருந்த போதும் பெரும்பான்மை நாயர்கள் நம்பூதிரிகள் மீது மிகுந்த நேசம் கொண்டிருந்தனா;.

தமிழகத்தில் பிராமணர், எதிர் பிராமணர் அல்லாதோர் என்ற நிலை வருவதற்கான காரணம் சைவ வெள்ளாளர் என்ற ஆத்ம நேயர் வள்ளலார் அவர்களின் கோரப் படுகொலை பிராமண அல்லாதோர் மனங்களில் தீராத வடுவாக எதிரொலித்தது.

கேரளத்து அவர்ணர்களின் முதலாமானவர்களான ஈழுவர்களுக்கு எதிராகக் கொடூரமான தாக்குதல்கள் நடந்த காலங்களில், தமிழகத்தில் சைவ வெள்ளாளர்களுக்கெதிராக எவ்விதக் கொடுமையையும், தமிழகப் பிராமணர்கள் செய்யவில்லை. வள்ளலாரின் ஒரு சாது, ஒரு மதம், ஒரு கடவுள் என்ற சமரச சன்மார்க்க நெறி பிராமணர்களின் சதுர்வர்ணத்துக்குச் சவாலானது என்பதால் ஜீவ ஜோதியில் கலப்பது என்ற வள்ளலாரின் சன்மார்க்க நெறியை திரித்துத் தீயிலிட்டு தீட்டு நீக்கியது. தமிழகத்து சவர்ணம் - (அரவிந்த மகரிசி சத்திரிய தேடல் பாகம் 1 P 47)

வள்ளலாரின் உயிர் தியாகம் தமிழகத்தில் பிராமணர் அல்லாதோர் இயக்கம் சூல் பிடிக்கக் கருமருந்தானது - சைவ வெள்ளாளர்களும் பொருளாதார பலம் வாய்ந்த தமிழகத்து சூத்திரர்களும் இணைந்து பி.டி. தியாகராயர் T.M. நாயர் மற்றும் பனகல் அரசர் தலைமையில் 1916-ல் தென்னிந்திய நல உரிமை சங்கம் உருவாக்கினர். பிராமணரல்லாதோர் மாணவர் அமைப்பு ஒன்று சென்னையில் 1906-ல் தென்னிந்திய பிற்பட்ட வகுப்பு சங்கம் துவங்கப்பட்டது. வித்தர் ராம் ஷண்டே என்னும் பிரம்ம சமாஜியே இதை உருவாக்கினார். பாம்பே மாநிலத்தைச் சேர்ந்த இவர் அனைத்திந்திய தீண்டாமை எதிர்ப்பு மாநாட்டையும் கூட்டினார். (பெ.சு.மணி - பிரம்ம சமாஜம்) பின் தென்னிந்திய நல உரிமைச் சங்கமே தமிழக பூமியில் பிராமணரல்லாதோர் அதிர்வலைகளை முழங்கியது.

கேரள சூழலில் பிராமணரல்லாதோர் இயக்கத்திற்கு தூபமிட்டவர் நாயர் சமூகத்தைச் சேர்ந்த சட்டம்பி சாமிகளாவார். கேரளத்து நம்பூதிரிகள் நாயர்களுக்கு கருவறை நுழைய அனுமதிக்காத போது, கேரளத்து சூத்திரர்களான ஈழவர் உள்ளிட்ட சாதிகளுக்கு நேர்ந்த கொடுமை கண்டு நாயர்கள் நம்பூதிரிகளிடம் உறவினை விட்டொழித்து ஈழவர் உள்ளிட்ட கேரளத்து சூத்திர மற்றும் பஞசமர்களிடம் உறவு வைக்க வேண்டுமென்று குரல் கொடுத்தார் (அதே நூல் பக்கம் 28) ஆனால் காலங்காலமாக ஏகபோக வாழ்வு வாழ்ந்த நாயர்கள் நம்பூதிரிகளுடனான உறவினை விட்டொழிக்க முன்வராததால் சட்டம்பி சுவாமிகள் துவக்கி வைத்த பிராமணர் எதிர் பிராமணரல்லாதோர் இயக்கம் கேரளத்தில் தோல்வியடைந்தது.

தமிழகத்தில் பிராமணரல்லாதோர் இயக்கம் வேர் கொண்டு, நீதிக்கட்சியாய் பரிணமித்தது. சைவ வெள்ளாளர்களும் அன்றைய மரபு வழி பணக்காரர்களும் தொழில்துறை முதலாளியுமான வெள்ளுடை வேந்தர் தியாகராயர் என அழைக்கப்பட்ட பி.டி. தியாகராயர் தேவாங்கர்கள் என்னும் குலத்தைச் சேர்ந்தவர் - நெசவுத் தொழிலை தம் வாழ்க்கைத் தொழிலாக கொண்ட குலம் சென்னை மாநகராட்சி, மாநில சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பல பொது நிறுவனங்களில் பங்கேற்றவர். மயிலாப்பூர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு இவர் ரூ.10,000 நன்கொடை கொடுத்திருந்தும் கூட, இந்து வைதீகராக இருந்த தியாகராஜ செட்டியாரை மேடைக்குக் கீழே உட்கார வைத்தனர். (அர்த்தியால் பென்ஸ் “வீரத்தியாகிகள் முழக்கம்” மூல நூல்(ஆதார நூல் - தீண்டப்படாதவர்களால் தீண்டப்படாத புதிய கட்சி பக்கம் 69) பொருளாதார பலம் பொருந்திய சைவ வெள்ளாளரையும், அன்றைய சென்னை மாகாணத்தில் பலமான செட்டியார் இனத்தைக் கூட சூத்திரராக அவமானப்படுத்திய பின் நீதிக்கட்சியின் வேகம் தமிழகத்தில் சூடுபிடித்தது.

பிராமணர்களுக்கும் சைவ வெள்ளாளர்களுக்குமிடையே (சூத்திர பணக்கார இதர ஜாதிகளும்) இருந்த முரண்பாடானது உயர் சாதி இடுக்கினில் தங்களுக்கும் ஒரு இடம் வேண்டுமென்ற யாசக முரண்பாடுதான் என்றும் அது சாதிய மறுப்பு என்ற தீவிர முரண்பாட்டினை நோக்கி இட்டு செல்லவில்லை என்பதால் இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் பேராதரவினை இழந்தது.

அதன் காரணமாகவே 1921-ல் நீதிக்கட்சி தலைவர்கள் மதுரை மீனாட்சி கோவிலில் அதன் தலைவர்கள் டி.வி.சுப்பிரமணியன், ஜோசப், கண்ணப்பன் தலைமையில் கோவில் நுழைவு போராட்டம் நடத்தி பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் செல்வாக்கினை உருவாக்கத் தொடங்கினர். அதனாலே கடுமையான கல்லடி தாக்குதலுடன் 300 வழக்குகள் நீதிகட்சியினர் மீது பதிவு செய்யப்பட்டது..(G - O - 1227, Pub(Gen - A) Dept - date - 24-4-1958) 

பிராமணரல்லாதோர் இயக்கம் நீதிக்கட்சியாய் பரிணமித்த போதும், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவின்றி அது குறுகிய காலத்தில் தனது அந்திமத்தை எதிர் கொண்ட போது பலமான சூறைக்காற்றொன்று ஈரோட்டு திசையிலிருந்து தமிழகம் முழுக்க சுழன்று வீசத் தொடங்கியது. தேச விடுதலை நம் மக்கள் விடுதலை என்று சுதந்திர போராட்டத்தை நேர்மையுடன் எதிர் கொண்ட ஒரு தன்னலமற்ற விடுதலை வீரனின் நேர் கொண்ட பார்வையை திருப்பி விட்டது. வ.வே.சு.ஐயர் என்னும் நேர்மையற்ற சனாதன சுதந்திர போராட்ட வாதி என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

3000 ஆண்டுகளுக்கு முன் அகதியாக வந்த பார்ப்பன குழந்தைகளும், சார்வாகமும், சமணமும், பௌத்தமும், சாங்கீயமும் தழைத்தோங்கிய போது அரசாண்ட குலமான பிராமணரல்லாதோர் குல மாணவர்களும் இணைந்து உணவருந்தினால் நாடோடிக் குலத்துக்கு இழுக்காகி விடும் என்ற போது ஈரோட்டு சூறாவளியின் கண்ணுக்குள் செஞ்சூரியனொன்று கொழுந்து விட்டு எரிந்தது. நாடாண்ட குலங்களை நாடோடி குலம் வேட்டையாடுவதா! இங்கே நடந்து வரும் போர் இந்திய சுதந்திர போரா அல்லது வெள்ளையர்களை வெளியேற்றி விட்டு வெள்ளையரின் இருப்பிடத்தில் பார்ப்பண சவர்ணர்களை அமர வைப்பதா என்ற கேள்வியின் பதில் வர்ண போராட்டமே தேவையென்று உணர்ந்தார். ஏனென்றால் அன்றைய சுதந்திர போராட்டத்தின் தலைமை பார்ப்பனர் வசமே இருந்தது. மகாத்மா காந்தியடிகள் என்னும் மகான் பிராமணரல்லாதோர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிராமணர்களின் மூன்றடுக்கு போக எஞ்சியுள்ள அடுக்கு மகாத்மாவுக்கு என்பதை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. மகாத்மாவை அவர்கள் வைசிய குலத்தை சேர்ந்தவரென்று பிரகடனப்படுத்தினர். ஏனெனில் சூத்திரர் ஒருவரின் பின்னால் பிராமணர்கள் அணிவகுப்பதை விரும்பாததால் மிக சுலபமாக சமரசம் செய்தனர். ஏனெனில் மகாத்மா இல்லையென்றால் சுதந்திர போர் பின்னோக்கி நகர்ந்து விடுமென்று அவர்கள் உணர்ந்தனர். கேரள பூமியில் மகாத்மா காந்தியடிகள் ஸ்ரீ நாராயண குருவை சந்தித்த பின் “என் மனதில் நீங்காத பல புதிர்கள் நாராயண குரு சுவாமிகளை சந்தித்த பின்னே ஐயங்கள் விலகியது” என்று கேரள சிவகிரி குறிப்பில் காந்தியடிகள் கைப்பட எழுதியுள்ள விபரங்கள் ஆய்வுக்குரியதாகும்.

யங் இந்தியா இதழில் அக்டோபர் 12, 1921 - அன்று மகாத்மா காந்தியடிகள் கருத்துப்படி “நான் என்னை சனாதன இந்து என சொல்லிக் கொள்கிறேன். ஏனெனில் வேதங்களையும், உபநிடதங்களையும், புராணங்களையும் இந்து சாத்திரங்கள் எனப்படுகின்ற அனைத்தையும், அவதாரங்களையும், மறுபிறப்புகளையும் நான் நம்புகிறேன். என் கருத்துப்படி வேத பொருளில் தற்போது பொதுவான பக்குவமற்ற பொருளில் அல்லாமல் நான் வர்ணாசிரம தர்மத்தை நம்புகிறேன். மகாத்மா காந்தி அவர்களின் மேலே கண்ட புரிதல் அம்பேத்கரின் புனே ஒப்பந்த நிலைப்பாட்டிற்கு மிகுந்த சிரமத்தை தந்தது என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். 

மகாத்மா அவர்கள் சுதந்திரப் போரே பிரதானமானதாக முன்வைத்தார். பாரதியாரின் ஆரிய சமாஜ் கருத்துப்படி சாதி, மதம், ஒரு சில்லரை விசயமாக பார்த்தார் என்றே பரிசீலிக்க வேண்டும். பிராமணரல்லாத மகாத்மா சதுர்வர்ணத்தில் தனது அடுக்கு எதுவென்று உணர்ந்த போதும் சுதந்திர தேசமே தனது உயிர் மூச்சாகக் கொண்டவர் என்ற பரிசீலனையே நேர்மையான பரிசீலனையாகும். ஏனெனில் இந்திய சமூக புரட்சியாளர்கள் ஒவ்வொருவரும் ஒடுக்குதலிலிருந்தே எழுவார்கள். அபூர்வமாய் ஒரு வள்ளலார் உருவாக இயலும். அவர்கள் விதி விலக்குகள் என்றே உணரவேண்டும். சனாதன தர்மம் தவறென்று வாதிடுபவர்களை சமூகப் புரட்சியாளர்கள் என்றழைப்பது தவறல்ல என்ற போதும், இன்றைய தமிழ்நாட்டு சூழலில் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்குள்ளே படியடுக்குகள் உள்ளது என்பதை விஞ்ஞானப்பூர்வ பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். தமிழகத்தில் எழுந்த விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் எழுச்சியே தேவேந்திர மற்றும் பேரிகை ஜாதியினரிடையே ஒரு சமத்துவ எழுச்சியை உருவாக்கியுள்ளது என்று புரிந்து கொள்ளலாம். விடுதலை சிறுத்தைகள் (பேரிகை சாதியினர்) எழுச்சியானது ‘நிறப்பிரிகை’ இதழ் தந்த பண்பாட்டு தள ஆய்வின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றியேயாகும்.

தந்தை பெரியாரின் இயக்கம் ஆரியர் மேலாண்மையினை அப்புறப்படுத்தியதுடன், சைவ, வைணவ தாக்குதலுக்குண்டான தமிழ் சமூகத்தை புதியதொரு பாதையினை தேர்ந்தெடுக்கத் தூண்டியது. தந்தை பெரியாரின் விமர்சனங்கள் கூர்மையான உள்ளர்த்தங்களைத் தாங்கி நின்றது. தமிழ் சாதிகள் மோதுகின்ற காலகட்டத்தில் அச்சமின்றி கருத்து தெரிவித்த அபூர்வ சிந்தனையாளர்... பச்சைத் தமிழன் காமராசு என்ற பெரியாரின் விமர்சனம் பச்சைத் தமிழரால் தலைநகர் அரசியலில் தமிழகம் சார்பான தாக்கத்தை உருவாக்க முடிந்தது. கல்வி கற்காத முதல்வர் காமராஜராலே தமிழகம் கல்வி கற்றது. தந்தை பெரியாரின் கையிலிருந்த பிராமணரல்லாதோர் இயக்கம் விலகி சென்றதனாலே பெரியார் சிந்தனை வேகம் குறை துவங்கியது. கடவுள் மறுப்பாளர், நாத்தீகப் போராளி தமிழ் - மொழி பாதுகாவலர், பெண் விடுதலையாளர் என்று தந்தை பெரியார் தமிழகத்தின் விடிவெள்ளியாக பிரகாசித்துக் கொண்டிருந்த காலத்தில், பிராமணரல்லாதோர் இயக்கத்துக்கு சோதனையாக பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் முரண்பாடு பெரியார் இயக்கத்துக்கு மிகுந்த தலைவலியாக இருந்து வருகிறது. திராவிட இயக்கங்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களை சரிசமமாக அங்கீகரித்த போதும், தமிழ் சமூகத்தில் புரையோடிக் கிடக்கின்ற சாதிகளுக்கிடையேயான புரிதலின்மை தமிழ் சமூகத்தின் பின்னடைவுக்கு இட்டுச் செல்கிறது. முதலில் மொழி பற்றிய புரிதலை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்திய அரசில் மலையாளிகள் ஆதிக்கம்



தமிழ்நாட்டில் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பெரிதாகிக் கொண்டே இருந்தாலும் தமிழர்களால் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியாமல் போவதற்கு இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் மலையாளிகள்தான் காரணம்.

முல்லைப் பெரியாறு அணை பலம் இழந்து விட்டதென பொய் திட்டங்களைத் தீட்டி, ரகசியமாக அமுல்படுத்துவதும் மலையாள அதிகாரிகள் குழுதான்.....

மத்திய அரசின் ஆதிக்க வர்க்கத்தில் இருக்கும் மலையாளிகளின் பட்டியல் இதோ....

1. என். பெர்னாண்ட்ஸ் - இந்திய ஜனாதிபதியின் செயலாளர்.
2. வி. கே. தாஸ் - இந்திய ஜனாதிபதியின் தனிச் செயலாளர்.
3. டி. கே. ஏ. நாயர் - இந்தியப் பிரதமரின் முதன்மைச் செயலாளர்.
4. என். நாராயணன் - இந்தியப் பிரதமரின் முக்கிய ஆலோசகர்.
5. பி. ஸ்ரீதரன் - இந்திய மக்களவைச் சபாநாயகரின் தனிச் செயலாளர்.
6. கே. எம். சந்திரசேகர் - இந்திய அமைசரவைச் செயலாளர். 
7. ருத்ர கங்காதரன் - இந்திய விவசாயத்துறைச் செயலாளர்.
8. மாதவன் நம்பியார் - இந்திய விமானப் போக்குவரத்துத்துறைச் செயலாளர்.
9. நிரூபமா மேனன் ராவ் - முன்னாள் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் & தூதர்
10. சத்திய நாராயண தாஸ் - இந்திய கனரகத் தொழிற்துறைச் செயலாளர்.
11. ஜி. கே. பிள்ளை - இந்திய உள்துறைச் செயலாளர்.
12. சுந்தரேசன் - இந்திய பெட்ரோலியத் துறைச் செயலாளர்.
13. கே. மோகன் தாஸ் - இந்தியக் கப்பல்துறைச் செயலாளர்.
14. பி. கே. தாமஸ் - மத்தியக் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர் (தற்போது பதவியில் இல்லை...?)
15. சுதாபிள்ளை - இந்தியத் திட்டக்குழுவின் செயலாளர்
16. வி. கே. சங்கம்மா - இந்திய வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சிலர், செயலாளர்.
17. ஆர். கோபாலன் - இந்திய நிதிப்பணிகள் துறை இயக்குனர்.
18. கே. பி. வி. நாயர் - இந்திய செலவீனங்கள் துறைச் செயலாளர்.
19. கே. ஜோஸ் சிரியாக் - இந்திய வருவாய்த்துறைச் செயலாளர்.
20. ஆர். தாமஸ் - இந்திய வருமானவரித் துறைச் செயலாளர்.
21. வி. ஸ்ரீதர் - இந்திய சுங்கத்துறைச் செயலாளர்.
22. பி. கே. தாமஸ் - இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர்.
23. ஏ. சி. ஜோஸ் - இந்தியக் கதர் வாரியச் செயலாளர்.
24. சி. வி. வேணுகோபால் - இந்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகச் செயலாளர்.
25. ஸ்ரீ குமார் - இந்திய அரசின் மத்தியக் கண்காணிப்பு ஆணைய இயக்குநர்.
26. கோபாலகிருஷ்ணன் - இந்திய அரசின் மத்தியக் கண்காணிப்பு ஆணைய மூத்த அதிகாரி.
27. நந்தக் குமார் - இந்திய கூட்டுறவுத் துறைச் செயலாளர்
28. ரகுமேனன் - இந்திய செய்தி ஒலிபரப்புத்துறைச் செயலாளர்.
29. ராமச்சந்திரன் - இந்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர்.
30. ரீட்டாமேனன் - இந்திய ஜவுளித்துறைச் செயலாளர்.
31. விசுவநாதன் - சட்டத்துறைச் செயலாளர்
32. மாதவன் நாயர் - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர்

அமைச்சர்கள்

இந்திய நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களான 543 உறுப்பினர்களில் கேரளாவிலிருந்து 20 பேர்தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதில் காங்கிரஸ் மற்றும் அதன் தோழமைக் கட்சியினர் 15 உறுப்பினர்கள். இவர்களில் 5 நபர்கள் அமைச்சர்கள்.

1. ஏ. கே. அந்தோணி - இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர்.
2. வயலார் ரவி - வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர்.
3. கே. வி. தாமஸ் - இந்திய விவசாயத்துறை இணை அமைச்சர்.
4. முல்லப்பள்ளி ராமச்சந்திரன் - இந்திய இந்திய உள்துறை இணை அமைச்சர்.
5. அகமது - இந்திய ரயில்வேத் துறை இணை அமைச்சர்.

மிக முக்கியமானவர்கள்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி வீட்டில் அவரது கார் ஓட்டுநர் ரவீந்திரன், சமையல்காரர் அங்கம்மா அங்கனக்குட்டி, தோட்டக்காரர் தாமஸ் என்பவர்களுடன் அவருடைய வீட்டில் வேலை பார்க்கும் பலரும் மலையாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆமாம். இதையெல்லாம் படித்த பிறகும் முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறதா?

(தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு பிரச்சனைக்காக வினியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரம் ஒன்றிலிருந்து...)

Sunday, 18 December 2011

பள்ளி தேர்வுக்காலத்தில் அறிவைத் துலக்கும் உணவுகள்!



கல்வி மீதான அக்கறை கடுமையாகக் கூடி இருக்கும் காலம் இது. இந்த விஷயம் வரவேற்பிற்குரியது தான் என்றாலும், தற்போதைய கல்வித்திட்டம் எந்த அளவிற்கு ஒரு சிறந்த மனிதரை உருவாக்குகிறது என்பதில் சர்ச்சை இருக்கத் தான் செய்கிறது. மதிப்பெண் எடு
க்க, மனப்பாடம் செய்ய தரும் பயிற்சி, ஆளுமையை பெருக்க, சமூக அக்கறையை அதிகரிக்க தரப்படுவதில்லை. அந்த மதிப்பெண்ணும் மனப்பாடப் பயிற்சியுமே ஒரு மாணவனின் உயர்படிப்பிற்கான தகுதியாகக் கருதப்படுவதால், ஒண்றரை வயசிலேயே குழந்தையை பள்ளிக்கு அனுப்பும்பெற்றோர் ஏராளம்.
பார்த்து, ரசித்து, பழகி, புரிந்து நகரும் குழவிப்பருவத்தின் மூளையில், இங்கிலீஷ் பாட்டை திணித்து, அதில் மனம் களிக்கும் பெற்றோர் அதிகரித்து வருவது பெரும்
வேதனை. சூப்பர் மேனாகவும், சூப்பர் சிங்கராகவும், சூப்பர் ஸ்டாரகவும் தன் குழந்தையை கற்பனை செய்யும் பெற்றோர், அந்த குழந்தைக்கென ஒரு அற்புதமான மனது இருப்பதை மறக்கவும் மறுக்கவும் செய்வது தான் இன்றைய துரித, நவீன நாகரீக வாழ்வு தந்த பரிசு.
இன்னும் போதாக் குறைக்கு தொழிற்கல்வி மட்டுமே மிகச் சிறந்த விஷயம். அதற்கு, வீட்டில் இருந்து படித்தால் சரியாக இராது. விடுதியுடன் கூடிய பள்ளிச் சிறையில் தள்ளு என்ற மனோபாவமும் பெருகி விடுதிப்பள்ளிகள் பெருகி வருகிறது. படித்தவுடன் சில பல ஆயிரங்களுடன்/லகரங்களுடன் பன்னாட்டுக் கம்பெனியில் வேலை என்ற சு(ப)ய நல நோக்கு

பெருகியிருப்பதுதான், இந்த அடிமைப் பயிற்சிப்பட்டறையின் அடித்தளம்.
பொதுவாக, பிறக்கும் குழந்தைகளுக்கு மொத்தம் ஒன்பதுவகை புத்திசாலித்தனம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இயற்கைபற்றிய அறிவு(Naturalist intelligence),இசை அறிவு( musical intelligence) கணித அறிவு (logical-mathematical intelligence), existential intelligence, ளுமை தரும் அறிவு (interpersonal intelligence)உடலை வில்லாக ஆடவைக்கும் அறிவு(Bodily kinesthetic intelligence),மொழி அறிவு(linguistic intelligence), தன்னை உணரும் ஞான அறிவு(intrapersonal intelligence)சிற்பம்-ஓவியம் அறிவு(spatial intelligence) – என்பன தான்
இந்த ஒன்பது வகை அறிவு. இதில் ஒன்று உங்கள் குழந்தைக்கு கண்டிப்பாக இருக்கும். அதை கண்டிபிடிப்பது பெற்றோர் கடமை. ஹாய்! ஹவ் ஆர் யூ? ஹவ் இஸ் யுர் டே?, என விருந்துக்கு வந்தவன் போல் பிள்ளகளை யதேச்சையாகச் சந்திக்கும் பிஸி பெற்றோரால் இதை
கண்டுபிடிக்க முடியவே முடியாது.
நிறைய நேரம் செலவழிக்க வேண்டும். அதிகம் பேச வேண்டும். கொஞ்சி மகிழ வேண்டும். அவர்கள் அறியாமையை ரசிக்க வேண்டும். அவர்களுடன் படிக்க வேண்டும். கண்ணை விரித்து அவர்கள் ரவுலட் சட்டம் பற்றி எப்படிம்மா தெரியும் உனக்கு?” என கேட்டவுடன், பெருமையாகக் காட்டிக் கொள்ள வேண்டும்.
சரி..விஷயத்திற்கு வருவோம்..இந்த மார்க் மேனியா’ பெருகி இருப்பதில் கூடிவரும் இன்னொரு சிக்கல்..எதை சாப்பிட்டால் என் மகன் கணிதப்புலிஆவான்? எது குடித்தால் என் மகள் விஸ்வனாதன் ஆனந்த் ஆவாள்? என்ற தேடலில், ஹிஸ்டரி ஜாக்ரஃப்ரியில் 100 வாங்கணுமா - எங்க கம்பெனி எனர்ஜி ட்ரிங்க் சாப்பிடுங்க,”- எனும் விளம்பரங்கள்!. மாலையில் பள்ளி வாசலில் வீட்டுக் குழந்தைகளைக் கூப்பிடக் காத்திருக்கும் பெற்றோர் கூட்டம்தெரியுமா.. உனக்கு? ராஜேஸ் அப்பா யூஎஸ்-ல இருந்து ஏதோ பிரய்ன் டானிக் வாங்கி வந்திருக்கார்...அவன் போன மாசம் மேக்ஸ்ல செண்ட்டம் வாங்கிருக்கான் தெரியுமா? எனச் சொல்ல, அருகிலே இருக்கும் ஒரு சூப்பர் மம்மி, “ நோ! நோ!..அது.. இப்ப இந்தியாவிலேயே கிடைக்கிறது.. நான் அதான் என் பையனுக்குக் குடுக்கிறேன்” என புளங்காகிதமாய்க் கூற, கஷ்டப்பட்டு வீட்டை அடகு வைத்து ஸீட் வாங்கின குருவம்மாவும், கிருஷ்ணவேணியும்,வேக வேகமாக அட்ரஸ் வாங்கிக் கொண்டு அந்த சூப்பர் உணவு வாங்க பாதி சம்பளம் தொலைக்க தயாராகிறாகள்.
எது சூப்பர் உணவு? எல்லாமே நல் உணவுதான். வெண்டைக்காய் சாப்பிடால் கணக்கு வரும் என்பதெல்லாம், கொஞ்சம் குழகுழன்னு வரும் வெண்டைக்காயைச் சாப்பிட மறுக்கும் குழந்தையை சாப்பிட வைக்க சொன்ன குட்டிகதை.. வளரும் குழந்தைக்கு தேவையான அளவு கார்போஹைட்ரேட், புரதமும் நல்ல சிறு கனிமங்கள் நிறைந்த காய்கறிகளும், நிறைய பாலிஃபீனல்கள் உள்ள கனிவகைகளும் போதும். முட்டையும் மீனும் குழந்தைகளுக்கு சிறப்பான உணவு.
படிக்கும் குழந்தகட்கு மீன் உணவு ஒரு மிகச் சிறந்த உனவு என்கின்றது தற்

போதைய உணவு அறிவியல். அதிலுள்ள DHAசத்து மூளை வளர்ச்சிக்கு சிறந்தது. மீன் எண்ணெயில் அந்த DHA சத்து கிடைப்பதால் மீன் எண்ணெய் சாப்பிடுவது நல்லது. மீனில் நேரடியாகக் கிடைக்கும் இந்த DHA, வெஜிடேரியனுக்கு, ஃப்ளாக்ஸ் விதை எண்ணெயில் அதிகம் கிடைக்கும். ஆனால் ஃப்ளாக்ஸ் விதை எண்ணெயில் - இருந்து அதிலுள்ள ஒமேகா சத்து EPA ஆக மாறி, பின் அதிலிருந்து DHA உற்பத்தியாகும். மீனோ, முட்டையோ, பாசிப்பயறு கூட்டோ எது வேண்டுமானாலும் சாப்பிடலாம். வெஜிடேரியனாக இருந்தால் கூடுதல் மூளை வளரும் என்பது கட்டுக்கதை. உலகின் நோபல் பரிசு வாங்கியவர்களில் 90 சதவீதம் பேர் மீனும் மாட்டு இறைச்சியும் சாப்பிடுபவர் தான். அவரவர், உடலுழைப்பிற்கேற்றபடி, அருகாமையில்
கிடைக்கும் ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுப்பதுதான் புத்திசாலித்தனம்.
படிப்பில் கொஞ்சம் மந்தமான நிலை உள்ள குழந்தைக்கு வல்லாரை கீரையை சட்னியாகச் செய்து கொடுக்கலாம். அதனால் தான் அந்த கீரைக்கு ஞானவல்லி கீரை என்ற பெயருமுண்டு. நீர்ப்பிரமித் தண்டு எனும் மூலிகையை உணவில் சேர்க்க மூளையின் செயல்திறன் கூடுவதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
நல்ல புத்திசாலியாக இருக்க, குழந்தைக்கு நல்ல தூக்கமும், நல்ல உடல் உழைப்பும் அவசியம். குப்பை உணவுகளைச் சாப்பிட்டு உடலை வளர்க்கும் குழந்தையால் அறிவுத்திறனைப் பெருக்க இயலாது. தினசரி காலையில் காய்ந்த அத்தி, பேரிச்சையை சாப்பிடச் சொல்ல வேண்டும். மாலையில் 5-10 கிஸ்மிஸ் பழங்களைக் கொடுக்க வேண்டும். இனிப்பு அதிகம் சாப்பிட்டால், அது தூண்டும் இன்சுலின் அதிகப்பட்ட நிலையில் மூளையின் செயல்திறன் குறைவதை தற்போது கண்டறிந்துள்ளனர். இனிப்புகளை, வெள்ளை சர்க்கரையை முடிந்த அளவு குறைக்க வேண்டும். இனிப்பு தேவைப்படும் போது லோகிளைசிமிக் தன்மையுடைய தேனோ அல்லது பனங்கருப்பட்டியோ பயன்படுத்துவது நல்லது. சாக்லேட் இனிப்புகளின் மீதான பிடித்தத்தில் இருந்து பழங்களில் விருப்பத்தை அதிகரிக்க வைக்க

வேண்டும்.
வரகரிசிச் சோறும் வழுதுணங்காயும் (கத்தரிக்காயும்) சாப்பிட்ட ஒவ்வையாரை மிஞ்சிய புத்திசாலிப் பெண் யாருமில்லை. வறுமையில், சுட்ட மீனும் ஒரு துண்டு பன்னும் சாப்பிட்ட தாமஸ் ஆல்வா எடிசனுக்கு இணையான அறிஞர் இன்றளவில் இல்லை.
ஆதலால், மூளையை வளர்த்து புத்திசாலி ஆக்குவேன் என்று கூறி வரும்வியாபார அமிர்தங்களைக் காட்டிலும், உங்கள் இடுப்பில் உட்கார வைத்துக் கொண்டு நிலவைக் காட்டி, பருப்பு சாதத்தை குழைத்து ஊட்டிப்பாருங்கள்! உங்கள் வீட்டுச் செல்லம் உலகை ஆளக் கூடும்!