Saturday 21 January 2012

தகவல்களை வழங்க அரசு நிறுவனங்கள் முன்வர வேண்டும்: சத்யானந்த மிஸ்ரா வேண்டுகோள்


First Published : 21 Jan 2012 02:51:39 AM IST

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் தலைமைத் தகவல் ஆணையர் சத்யானந்த மிஸ்ரா (இடமிருந்து மூன்றாவது).
சென்னை, ஜன.20: பொதுத் துறை நிறுவனங்கள் குறித்த தகவல்களை அந்தந்த நிறுவனங்களே வழங்க முன்வர வேண்டும் என்று தலைமைத் தகவல் ஆணையர் சத்யானந்த மிஸ்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 சென்னையில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான கல்விக் கழகம் சார்பில் "தகவல் பெறும் உரிமைச் சட்டம்- 2005' என்கிற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து சத்யானந்த மிஸ்ரா பேசியது:
 தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் வெற்றி மற்றும் தோல்வி ஆகியவை தகவல் அதிகாரிகளைச் சார்ந்துள்ளன. இச்சட்டத்தின் கீழ் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிவரை 10 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகள் தொடர்பாகத்தான் அதிக மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
 இதில் சரியான முறையில் பதில் அளிக்கவில்லை எனக் கூறி விசாரணைக்காக 23 ஆயிரம் மனுக்கள் நிலுவையில் உள்ளன. இச்சட்டத்தின் மீது மக்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. சரியான முறையில் செயல்படுவதாக ஒரு தரப்பினரும், சரியில்லை என மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
 சட்டங்களை அறிவிப்பது எளிது, ஆனால் அதைச் செயல்படுத்துவதுதான் கடினம். கடந்த 2005-ம் ஆண்டு அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்ற காரணத்திற்காக, இச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மக்கள் அந்த நம்பிக்கையை இழக்கக்கூடாது. எனவே சட்டத்தை உரிய முறையில் செயல்படுத்தினால்தான் அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை உருவாகும்.
 இச்சட்டத்தைக் கொண்டு வரும்போது அரசு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும். எனவே மக்களுக்கு தேவையான தகவல்களை வழங்க தகவல் அதிகாரிக்கு மட்டுமின்றி நிர்வாகத்துக்கும் பொறுப்பு உள்ளது.
 எனவே நிறுவனங்கள் தொடர்பாக உள்ள தகவல்களை பாதுகாக்க வேண்டும். இதில் தகவல்களை வழங்க அதிகாரிகள் எந்தவிதத் தயக்கமும் காட்டத் தேவையில்லை. மேலும் தகவல்களை பாதுகாப்பது மட்டுமின்றி இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். ஆனால், பொதுத் துறை நிறுவனங்கள் அதைக் கடைபிடிப்பது இல்லை.
 தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதிலளிக்கும்போது தங்களது கருத்துகளை வழங்காமல், காகிதத்தில் உள்ள தகவல்களை மட்டுமே வழங்க வேண்டும் என்பதுதான் சட்டம்.
எனவே அரசு ஊழியர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை உரிய முறையில் செயல்படுத்த வேண்டும்.
 இச்சட்டத்தில், எந்தவித மாற்றத்தையும் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை. மேலும் 30 நாள்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்ற கால அவகாசத்தையும் நீடிக்கத் தேவையில்லை. தற்போது மத்திய மற்றும் மாநில தகவல் ஆணையங்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. இதை மேம்படுத்த மேலும் சில காலம் ஆகும்.
 சட்டத்தின் கீழ் இ-மெயில் மூலமாக தகவல் பெறும் வசதியை சில அமைப்புகள் ஏற்படுத்தி உள்ளன. மேலும் அனைத்து துறைகளில் விரைவில், இந்த முறை அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன. மத்திய தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள ஆணையாளர்கள் பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று சத்யானந்த கூறினார்.
 இந்த நிகழ்ச்சியில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சுரங்கத் துறை இயக்குநர் பி.சுரேந்திர மோகன், மனித ஆற்றல் துறை இயக்குநர் எஸ்.கே.ஆச்சாரியா, பொதுத்துறை நிறுவனங்களுக்கான கல்விக் கழக இயக்குநர் ராம்குமார் மிஸ்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

No comments:

Post a Comment