Sunday 12 February 2012

பயறுகள் - மருத்துவப் பயன்கள்


 ஏழைகளின் புலால் என்று அழைக்கப்பட்டது பயறுகள். ஆனால் இன்று  பணக்காரனோ ஏழையோ பயமில்லாத முதுமைக்கான முதல் தேர்வு பயறுதான் என்ற நிலை. அரிசி, கோதுமை தானியங்கள் மீது அலாதி பயம் ஏற்பட்டுள்ள காலகட்டத்தில் பயறுகள், தன்னுள்ளே பொதிந்துள்ள புரதத்தாலும், அதன் தாவர நுண்கூறுகள் தரும் அலாதி மருத்துவ பயன்களாலும், அன்றாட உணவில் இடம்பெற வலியுறுத்தப்படுகின்றன.
எது பயறு? சிப்பிக்குள் பொதிந்துள்ள முத்தைபோல், அழகான பச்சை நிற கதவுகளுக்குள் பத்திரமாய், வரிசையாய் பொதித்து வைக்கப்பட்டு விளையும் அவரைக் குடும்பத்து தாவரங்கள்தாம் இந்த பயறுகள். பாசிப்பயறு, உளுந்து, துவரை, மைசூர் பருப்பு, கொண்டைகடலை, பட்டாணி, ரஜ்மா.... என இதன் பட்டியல் நீளம். முழுதாய் இருப்பின் பயறு என்றும், உடைத்து இருந்தால் பருப்பு என்றும் செல்லமாய் அழைக்கப்படும் இந்த உணவு ஓர் உன்னத உணவு.

தானியமும் பயறும் உணவுக்குடும்பத்தின் தலைவனும் தலைவியும் மாதிரி. ஒவ்வொரு தானியமும் ஒவ்வொரு வித புரதமும், கூடவே கார்போஹைட்ரேட்டும் கொண்டிருக்கும். பயறும் அப்படித்தான். அரிசியில் இல்லாத புரதச்சத்து பாசிப்பயறில் இருக்கும்; உளுந்தில் இருக்கும். அதனால் தான் பயறையும் அரிசியையும் கூட்டணியாகக் கொண்டு இட்லியும் பொங்கலும் அன்று படைக்கப்பட்டன. கார்போஹைட்ரேட், புரதம் என்ற அறிவியல் தெரியாத போது அதன் அவசியம் தெரிந்து கூட்டாய்ச் சமைத்ததை நினைக்கையில் வியப்பும் பெருமிதமும் வருகிறது. இட்லி சாம்பார் சட்னி என்பது சரிவிகித சம உணவு என்பது புரியாமல் ஓட்ஸுக்கும் பிட்சாவுக்கும் வரிந்துகட்டிக் கொண்டு வக்காலத்து வாங்கும் நாகரீகக் கூட்டம் நகைப்பிற்குரியது.

சாதாரணமாய் 20-25% புரதச்சத்தைத் தன்னுள் கொண்டிருக்கும் பயறுகள், வளரும் குழந்தைகளின் அத்தியாவசியத் தேவை. அதன் அவசியம் புரியாமல் ஒதுக்கியதில்தான், எத்தனையோ ஊட்டச்சத்து பானங்கள்  கலர்கலராய் விளம்பரங்களுடன் விடாது  நம்மை விரட்டி வீட்டுக்குள் வந்து விட்டன. உயரமாய் வளர வைப்பேன்; புத்திசாலியாக்குவேன்; என உள்வரும் அத்தனை ஊட்ட உணவுகளுக்கும் சிறிதும் சளைத்ததல்ல இந்த பயறுகள். நோய் எதிர்ப்பாற்றல் நன்றாயிருக்க சரியான பயறு உணவு தினசரி அவசியம். பயறுகள் ஸிக்ஸ் பேக் கனவான்களுக்கான முக்கிய உணவு. தசைகளை இறூக்கமாக வளர்ப்பதற்கு பயறு அவசியம். கூடவே உடற்பயிற்சியும் வேண்டும். அதை மறந்து, “சார்! தினம் முளைப்பாரி கட்டி பல பயறு சாப்பிடுகிறேன். ஸிக்ஸ் பேக் வரலையே” –என்று கேட்டால், சத்தமாய் ஏப்பமோ இல்லை வேறு எதுவுமோ வரலாம். ஸிக்ஸ் பேக் வராது. உணவும் உடலுழைப்பும் ஒன்றாய் சேர்ந்தால் மட்டுமே அரோக்கியமும் அழகும் வசப்படும். பயறு விஷயத்திலும் அப்படித்தான்.

சர்க்கரை நோயாளிகளின் அலாதிப் பசியைப் போக்குவதிலும், அதனால் திடீர் சர்க்கரை உயர்வு(hyperglycemia) ஏற்படாமல் பார்த்துக் கொள்வதிலும் சிறப்பானவை. சர்க்கரை நோயில், இன்று வலியுறுத்தப்படுவது லோ கிளைசிமிக் உணவுகளைத்தான். பயறுகள் லோ கிளைசிமிக் தன்மை கொண்டவை. மாலை வேளையில் பசியுடன் இருக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கு முளைகட்டிய பாசிப்பயறு சுண்டலோ, சிவப்பு நிற மூக்குக் கடலைச் சுண்டலோ சிறந்த சிற்றுண்டிகள். அவை உடனடி பசியையும் குறைப்பதுடன், இரவில் அதிக பசியில், அதிக உணவை சாப்பிட்டு காலையில் இரத்த சர்க்கரை அளவு உயர்ந்து கலவரப்படுத்தாமல் இருக்க உதவிடும்.
பெரும்பாலான பயறுகள் கொழுப்புச் சத்து குறைவானவை..அல்லது சற்றும் இல்லாதவை. அதிக கொழுப்புச் சத்து உள்ள  நபர்கட்கு, அன்றாட உணவுத் தேர்வில் பயறுகள் இருக்கும் போது இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பு (low density lipo protein-LDL)கிட்ட்த்தட்ட 22% குறைவதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
பயறுகளின் அரசி என்றால் உளுந்தைச் சொல்லலாம். பெண்களின் கருப்பையை வளமாக்குவதில் உளுந்துக்கு இணையான உணவு ஏதும் இல்லை. சோயாவும் அது போன்றதே. உளுந்தின் முழுபயறை சப்பாத்திக்கு தால்செய்வது போல வாரம் இருமுறை செய்து வய்துக்கு வந்த பெண்கள் இருக்கும் வீட்டில் செய்வது நல்லது. உளுந்தக்களிக்கு கொந்தளிக்கும் பல குமரிகள் சப்பாத்திக்கான தால் என்றதும் சாத்வீகமாகுவது சமீப காலத்திய மாற்றம். உளுந்தைப்பொறுத்த மட்டில் வாய்ப்புக் கிடைத்தால் தொலி நீக்காதபடி பயன்படுத்துவது நல்லது. தொலியில் உள்ள நிறமிச் சத்து பல கருப்பை சார்ந்த நாட்பட்ட நோய்களை நீக்க்கூடியதும் கூட.

பாசிப்பயறு, கொண்டைக்கடலை, இவற்றை முளைகட்டிச் சாப்பிடுவது அதன் புரதச்சத்து உடலில் விரைவாக சேர ஏதுவாகும். அதே நேரத்தில் முளை கட்டிய பயறுகள் உடல் எடை குறைத்திடவும் உதவிடும். ஆதலால், வளர வேண்டிய சிறு குழந்தைகளுக்கு வருத்து பொடித்த பயறுக் கஞ்சியும், உடல் எடை குறைய டயட்டில் இருக்கும் நபர்கட்கு  முளைகட்டிய பயறும் நலம் பயக்கும். பால் புரதத்தை விட, புலால் புரதத்தை விட, பயறுப்புரதங்கள் விலை குறைந்தவை; உடலில் முழுமையாய் அதிகமாய் உட்கிரகிக்கப்படுபவை. குறிப்பாய் பாசிப்பயற்றின்protein efficiency ratio பிற புலால் புரதங்களைக் காட்டிலும் துரிதமானது.

அளவிற்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பது புரதத்திற்கும் பொருந்தும். போஷாக்கா வளர்க்கணும் என்றோ.. நாங்க வசதிபடைத்தவர் என நினைத்தோ பொங்கலில் முந்திரியை கரண்டி கரண்டியாக அள்ளிப்போட்டு சாப்பிடுவதும், வருத்த முந்திரியில்லாமல் எப்டீங்க போர்டு மீட்டிங் என வாரம் மூன்று மீட்டிங் சாப்பிட நடத்துவதும் இரத்தத்தில் யூரிக் அமிலத்தை உயர்த்தி வலது கால் பெருவிரல் வீங்கி வலிக்கிறதே யார் கிட்ட போகலாம் என யோசிக்க வைக்கும்? கவுட் ஆர்தரைட்டிஸ் எனும் ஒரு வித மூட்டுவலிக்கு அதிக புரதம் ஒரு முக்கிய காரணம். அதிக புரதம் உடலில் கொழுப்பாய்ச் சேமிக்கப்படும் என்பதாலும் அளவிற்கு அதிகமாக பயறுகள் அவசியம் இல்லை. அதன் மேலும் பயறு சிலருக்கு வாயுவை அதிகப்படுத்தும் என்பதால், எப்போதும் இஞ்சி, பூண்டுடன் பயறைச் சாப்பிடுவது சரி. வாய்வுக் கோளாறு ஏற்கனவே உள்ளவர்கள் பாசிப்பயறு, உளுந்து மட்டும் சேர்க்கலாம். பிறவற்றைத் தவிர்ப்பது நல்லது.

No comments:

Post a Comment