Wednesday 5 December 2012

வயதானாலும் அழகாய், பொலிவாய் இருக்கணுமா? இத கொஞ்சம் படிங்க...


அழகாய் இருத்தலுக்கும் பொலிவாய் தெரிதலுக்கும் ஆசைப்படாதோர் இவ்வுலகில் இப்போது இல்லை. வயது ஏறும் போது ஏற்படும் வயோதிக உடல் மாற்றத்தை ஒத்துக் கொள்ள முடியாத மனமும் வாழ்வும் ஒட்டிக் கொண்ட உலகம் இது. நரை, திரை மூப்பில் நம்பிக்கையில்லாமல் அழகு சாதனங்களை அள்ளிக் குவித்தாவது, இளமையை இன்ஸ்டன்டாக பெற முயற்சிக்கும் நம்மில் பலருக்கு உணவு ஒரு மார்க்கண்டேய மந்திரம் என்பது தெரியாது. ஒரு பவுண்டேஷன் கிரீம், அதன் மேல் சிகப்பழகு கிரீம், அதன் மேல் ஒரு சன் ஸ்கிரீனர், கொஞ்சமாய்  ‘ஆன்ட்டி ஏஜிங் ஃபார்முலா, என தேய்த்து பிட்சா கார்னருக்கு கிளம்பும் பல ஆன்ட்டிகளுக்கு , FINGER FRIES WITH PIZZA சாப்பிட்டால் சீக்கிரம் வயசாகும் என்பது தெரியவில்லை..  ‘ஸ்கின் ட்ரை ஆகுதுப்பா.. நீ என்ன கிரீம் யூஸ் பண்ற? என குளிர்பானத்தை உறிஞ்சுக் கொண்டே கேட்கும் யுவதிக்கு, தான் உறிஞ்சும் குளிர்பானமே தன் வயதை உறிஞ்சும் என்பது தெரியவில்லை.

காலையில் சாப்பாட்டுக்கு முன்னாடி - 1 மாலையில் சாப்பாட்டுக்கு அப்புறம் - 1 என யாராவது உங்கள் வயதைக் குறைக்கிறேன் –னு சொன்னால் நம்ப வேண்டாம். அக்மார்க் டுபாக்கூர் மாத்திரை வியாபாரம் மட்டுமே அது. மருந்து மாத்திரையால் வயதை குறைக்க முடியாது; வாலிபத்தை மீட்ட முடியாது. ஆனால் உணவால் முடியும். உணவால் இளமையை இழக்காமல் வைத்திருக்க முடியும். எப்படி?

முதலில் ஒரு சூப்பர் ரகசியம்..பத்து மலை தாண்டி பத்து கடல் தாண்டி கிடைக்கும் குலேபகாவலி மூலிகைக்கெல்லாம் போக வேண்டாம்..குழாய் தண்ணீர் சுடவைத்து ஆறவைத்து தினசை 4-5 லிட்டர் குடித்தாலே போதும். தோலின் ஈரத் தன்மை போகாது இருக்க அது உதவும். செல்லின் வளர்சிதை மாற்றத்தில், ஒவ்வொரு செல்லும் ஆரோக்கியத்துடன் உத்வேகத்துடன் திகழ போதுமான நீர்த்துவம் முதலில் அவசியம். ஆதலால் இளமையாய் இருக்க போதுமான தண்ணீர் குடியுங்கள்;

இளமையாய் இருக்க வேண்டும் என்றால்  நம் மனதின் ஒவ்வொரு சிந்தனை மட்டுமல்ல. நம் உடலின் ஒவ்வொரு செல்லும் ஆற்றலும், குதூகலமும் நிறைந்து இருக்க வேண்டும். அதிக கார்போகைட்ரேட் உணவானது எப்போதும், செல்லை சோர்வடையச் செய்யும். அதனால் தான் நேரடி இனிப்பு வேண்டாம் என்கிறோம். அதே சமயத்தில் போதிய அளவில் புத்திசாலி கார்போஹைட்ரேட்(smart carbohydrates) என்று நவீன உணவியலாளரால் அழைக்கப்படும் லோகிளைசிமிக் நிறைந்த கீரை நார்கள் மூலம் கிடைக்கும் இனிப்புச்சத்து அவசியம். ட்ரான்ஸ் ஃபாட் நிறைந்த எண்ணெய் பலகாரங்கள் அடிக்கடி சாப்பிடக் கூடாது. பாலும் தேவையில்லாதது.

அடுத்து தினசரி உணவு. பட்டை தீட்டாத பிரவுன் அரிசி(தவிட்டுடன் கூடியது) அதன் லோ கிளைசிமிக் தன்மையால் சர்க்கரையை இரத்த்தில் தடாலடியாக சேர்க்காது. எந்த ஒரு பொருள் இரத்த்திதில் சர்க்கரையை சீக்கிரமாக சேர்க்கிறதோ அது வயதை சீக்கிரமாக கொண்டு வரும். சாயந்திரம்  ‘மைசூர்பகோ அல்லது சந்திரகலாவோ இல்லாமல் காபி எப்படி சாப்பிடுவது?’, என்று சங்கடப்பட்டீர்கள் என்றால் வாழ்த்துக்கள்.. “பாவம்..வயசு காலத்தில.. நீங்க உட்காருங்க மேடம்! என பேருந்தில் எழுந்து இடம் கொடுத்து, உங்களுக்கு, சினியர் சிட்டிசன் உரிமைகள் நீங்கள் கேட்காமலே கிடைக்கும். தேவையா?

காலையில் நவதானியக் கஞ்சி, (ஓட்ஸ் இல்லாமல் எப்படி..எல்லாரும் சொல்ராளே!, என்றால் ஓட்ஸ்-உம் சேர்த்துக் கொள்ளலாம். தப்பில்லை), வரகரிசி பொங்கல், ராகி இட்லி என சிறுதானியம் நிறைந்த உணவு சாப்பிடுங்கள். மதியம் பிரவுன் ரைசில் சாம்பாரோ ரசமோ ஊற்றி சாப்பிடுங்கள். தயிர் வேண்டாம். மோர் கண்டிப்பாய் வேண்டும். இரவில் ஓசி டின்னர் என்றாலும், மனசுக்கு பிடித்தவ்ருடன் பெரிய ஓட்டலில் ஓரமாய் இருந்து சாப்பிடாலும், ஒரு கட்டு கட்டாமல் அளவாய் எண்ணெயின்றி சாப்பிடுங்கள். ஓவ்வொரு வேளை உணவிலும் சிறிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, வெந்தயம் இருக்க வேண்டியது கட்டாயம். இந்த சமாச்சாரமெல்லாம் வாசனை தருவது மட்டுமல்ல..வயசும் தரும். Anti oxidants இன்று மிக பிரபலமாகி வரும் மருத்துவ சொல். பருப்பில்லாமல் சாம்பாரா? என்கிற மாதிரி Anti oxidantsஇல்லாமல் பிரிஸ்கிரிப்ஷனா? என்று மருத்துவர்கள் இப்போது பக்கம் பக்கமாய் எழுதுவது இந்த Anti oxidants-ஐத் தான். ஆனால் நம்ம பெருங்காயத்தில் இருந்து, காய்ந்த திராட்சை, மஞ்சள், கிரீன் டீ, தக்காளித்தோல் என பல உணவில் இது நிறைந்திருப்பது பலருக்கும் தெரியாது. இனி தெரிந்து கொண்டு உணவில் அதனை மறக்க வேண்டாம். ஏனென்ரால் அந்த  Anti oxidants வயோதிக மாற்றத்தை தடுக்கும்.

வயதாவதைத் தடுக்கும் உணவில் முதலிடம் பழங்களுக்குத் தான்.அன்றைய உணமையான சாதுக்களில் இருந்து, இன்றைய பிரபல -போலி சாமியார்கள் வரை கொஞ்சம் இளமையாய் அவர்கள் தெரிவதற்கு அவர்களின் பழ உணவு ஒரு முக்கிய காரணம்.ஒவ்வைக்கு அதியமான் தந்த நெல்லிக்கனியை தமிழும் வரலாறும் எப்போதும் மறக்காது. தற்போது அறிவியலும் அதை மறக்காது. ஆம்.. நெல்லிக்கனி மீதான பல ஆய்வுகள் அதன் வயதை குறைக்கும் தன்மையை அறுதியிட்டு நிரூபித்து விட்டன. அதிலுள்ள பாலிஃபீனால்கள், விட்டமின் சி, இன்னும் சில நுண்ணிய துவர்ப்பிகள், வயோதிக மாற்றத்தை நெல்லி தடுப்பதை ஊர்ஜிதப்படுத்தியுள்ளன.

அதே போல், கொட்டையுள்ள திராட்சை(பன்னீர்), மாதுளை, சிகப்பு கொய்யா, அத்தி, அவகோடா, சிகப்பு ஆப்பிள் இவையெல்லாம் இளமைக்கு வித்திடும் உணவுகள். வயசாவதைக் காட்டிக் கொடுக்கும் முகச் சுருக்கம், கண்ணுக்கு கீழான கருவளையம், தோல் சுருக்கமும், வறட்சியும் நீங்க/ வராது தடுக்க..தினம் ஒரு வேளை பழம் மட்டுமே சாப்பிடுங்கள். பொலிவு பொங்கும். பிடித்தவர் காட்டும் அலட்சியம் மாறிப்போகும்.  “அட! வயசானாலும், நீ அழகு தான் போ! எனும் கொஞ்சல் துவங்கும்.

No comments:

Post a Comment