Saturday 30 July 2011

அபாய கட்டத்தில் அஞ்சல் நிலையங்கள்!

நன்றி விகடன் 

கூரியர் நிறுவனங்களுக்கு அடிக்கிறது 'லக்'

இந்திய அஞ்சல் துறையின் 247 ஆண்டு வரலாற்றில், மிக மோசமான தருணம் இது. அமெரிக்க நிறுவனத்தின் ஆலோசனையை ஏற்கிறோம் என்ற பெயரில், தபால் நிலையங்களின் எண்ணிக்​கையை படிப்படியாகக் குறைத்து, அஞ்சல் துறையை ஒட்டுமொத்தமாக மூடும் பாதையைத் நோக்கிச் செல்கிறது, மத்திய அரசு.

இந்தியாவில் இப்போது 1,57,979 தபால் நிலையங்கள் இயங்குகின்றன. இவற்றில் கிராமங்களில் உள்ள நிலையங்களின் எண்ணிக்கை மட்டும் 1,39,182. கிட்டத்தட்ட 4,75,000 ஊழியர்கள் வேலை செய்கின்றனர். ஒரு தபால் நிலையம் சராசரியாக 7,716 பேருக்கு சேவை செய்வதாகக் கூறுகிறது, இந்திய அஞ்சல் துறையின் ஆண்டு அறிக்கை!



கடந்த பல ஆண்டுகளாகவே, இந்திய அஞ்சல் துறை நஷ்டத்தில்தான் இயங்குகிறது. ஆனால், போட்டியாளர்களான, தனியார் கூரியர் நிறுவனங்களோ வருவாயை வாரிக் குவிக்கின்றன. இத்தனைக்கும், அஞ்சல் துறையுடன் ஒப்பிட்டால், கூரியர் நிறுவனங்களின் கட்டமைப்பு சுண்டைக்காய்தான். உதாரணமாக, பெரிய கூரியர் நிறுவனங்களில் ஒன்றான 'டீடிடீசி’ மாதத்துக்கு 1 கோடி கடிதங்கள் மற்றும் சரக்குகளைக் கையாளுகிறது. 5,200 இடங்களில் மட்டுமே அதற்கு சேகரிப்பு மையங்கள் இருக்கின்றன. ஊழியர்கள் 13,000 பேர்தான்!

ஆனால், மிகவிரிவான கட்ட​மைப்புடன் இருக்கும் அஞ்சல் துறை தொடர் நஷ்டத்தில் இயங்கக் காரணம்... அஞ்சல் துறை நிர்வாகத்தின் கையாலாகாத்தனம். தகவல் தொழில் நுட்பம் விசுவரூபம் எடுத்திருக்கும் ஒரு யுகத்தில் விரைவான செயல்பாட்டின் முக்கியத்துவம் பற்றியோ... நிர்வாகச் சீர்கேடுகளின் அபாயம் பற்றியோ... கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை இந்திய அஞ்சல் துறை.



மிக சமீபத்திய உதாரணம் இது... புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்தில் உரியவர்களிடம் விநியோகம் செய்யாமல் குப்பையில் வீசி எறியப்பட்ட பாஸ்போர்ட்டுகள், ஏ.டி.எம். கார்டுகள் உட்பட ஏறத்தாழ 10,000 தபால்களை பொதுமக்களே மீட்டு உள்ளனர். இதற்குக் காரணமான, அஞ்சல்துறை அலுவலர் பவானந்தம், தபால்காரர் மாணிக்கம் ஆகிய இருவர் மீதும், நீண்ட காலமாகப் புகார் சொல்லப்பட்டும் அதிகாரிகள் கண்டு கொள்ளவே இல்லை என்பதுதான் வேதனை. இப்போது கையும் களவு​மாகப் பிடிபட்டதும் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இத்தகைய சம்பவங்கள் கூரியர் நிறுவனங்களில் சாத்தியமா?

இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும், ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு ஒரு நாளுக்குள் தபால்களை விநியோகித்து விடும் கூரியர் நிறுவனங்கள், ஒப்புகைச் சான்றும் வழங்கி விடுகின்றன. ஆனால், அஞ்சல் துறையில் அனுப்பப்படும் சாதாரண தபால்கள், சென்று சேரும் என்பதற்கே உத்தரவாதம் கிடையாது. பதிவு அஞ்சல் என்பது கட்டுப்படியாகக் கூடிய கட்டணத்தில் இல்லை. விரைவு அஞ்சலில் அனுப்பும் தபால்கள் பக்கத்து மாவட்டங்களைச் சென்றடையவே இரண்டு நாட்கள் ஆகிறது!

கூரியர் நிறுவனங்களில், ஒரு மாநிலத்துக்குள் 250 கிராம் கொண்ட ஒரு தபாலை அனுப்ப

30 வசூலிக்கப்படுகிறது. வெளிமாநிலத்துக்கு 45. ஒரு நாளைக்கு 10-க்கும் மேற்பட்ட தபால்களைக் கொடுப்பதாக இருந்தால், 30 சதவிகித கட்டணச் சலுகையும் உண்டு. அஞ்சல் துறையிலோ, இதே தபாலை பதிவுத் தபாலில் அனுப்ப 80 வசூலிக்கப்படுகிறது.

அடிப்படை வியாபாரக் கட்டமைப்பில் கொஞ்சம்கூட அக்கறை காட்டாத அஞ்சல் துறை, வருவாயைப் பெருக்கத் தங்கக் காசு தொடங்கி தீபாவளி பட்டாசு வரை விற்பனை செய்கிறது. உலகின் முன்னோடி நிறுவனம் என்ற பெருமையை மறந்து, அமெரிக்காவின் 'மெக்கின்ஸே’ நிறுவனத்திடம் ஆலோசனை கேட்கிறது இந்திய அஞ்சல் நிறுவனம்.

'மெக்கின்ஸே’ கொடுத்து இருக்கும் பரிந்துரைகளில் முக்கியமானவை இதுதான். நகர்ப் புறங்களில் உள்ள 9,797 அஞ்சலகங்களை மூடுவது. விரைவு அஞ்சல் மையங்களின் எண்ணிக்கையை 315-ல் இருந்து 89-ஆக குறைப்பது. அஞ்சலகச் சேவையின் முக்கிய ஆதாரமான ரயில்வே மெயில் சேவை மையங்கள் எண்ணிக்கையை 421-ல் இருந்து 84 ஆகக் குறைப்பது போன்றவைதான். இந்த செயல்பாடுகளைப் பார்த்தால், படிப்படியாக அஞ்சலகங்களை மூடி அஞ்சல் சேவையில் இருந்து அரசு விடுபட நினைக்கிறது என்றுதான் தோன்றுகிறது.

இந்தப் பரிந்துரையை அமலாக்கக் கூடாது என வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்த அஞ்சல் துறை ஊழியர்கள் தயாராகி வருகின்றனர். ''எந்தப் போராட்டத்துக்கும் இல்லாத முக்கியத்துவம் எங்கள் போராட்டத்துக்கு உண்டு. ஊழியர்கள் நலனுக்கான போராட்டம் அல்ல, எங்கள் துறையைக் காப்பாற்றும் உரிமைப் போராட்டம்!'' என்கிறார்கள் ஊழியர்கள்.

கூரியர் நிறுவனங்களிடம் இருந்து வெற்றி சூட்சுமத்தைக் கற்றுக்கொவதற்கு பதிலாக, கூரியர் நிறுவனங்களிடம் அஞ்சல் துறையை முழுமையாக ஒப்படைக்கும் வண்ணம், இந்தத் துறையில் இருந்தே அரசு வெளியேறுவதைப் பார்த்தால், என்னமோ நடக்குது... மர்மமாக இருக்குது! 

No comments:

Post a Comment