Saturday 30 July 2011

தமிழில் பெயர் : சினிமாக்காரர்களுக்கு ஆப்படித்த ஜெ.

கடந்த திமுக ஆட்சியில் நம்மை மிகவும் கொதிப்படைய வைத்த விஷயம் ’சினிமாப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு’ என்ற சட்டம். தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தாலும் ஸ்பானிஷில் பெயர் வைக்கப்பட்டிருந்தாலும் மாதச் சம்பளக்காரனிடம் வருமான வரியை கேட்காமலேயே உருவும் நாட்டில் தான் இந்த கோமாளிச் சட்டம் இயற்றப்பட்டது.




2006ல் ராமதாஸ், திருமாவளவன் போன்ற அரசியல் தலைவர்கள் தமிழில் பெயர் வைக்காமல் ஆங்கிலத்தில் பெயர் வைக்கும் சினிமாக்காரர்களை கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்தார்கள். சில இடங்களில் அது சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகவும் ஆனது. ‘இது படைப்பாளியின் சுதந்திரத்தில் தலையிடும் செயல்’ என இயக்குநர்களும் நடிகர்களும் பதிலுக்கு கூவிக்கொண்டிருந்தார்கள்.

இந்த நேரத்தில் தான் அந்தக் கால சாணக்கியரான கருணாநிதியின் மூளை வேலை செய்தது. ’தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு’ என்ற ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்தினார்.

கூட்டணிக்கட்சிகளையும் சட்டம் ஒழுங்கையும் தனக்குத் தெரிந்த அசமஞ்ச வழியில் சரி பண்ணியாயிற்று.

சினிமாக்காரர்கள் ஐந்து வருடமும் கலைஞரின் காலடியிலேயே கிடந்தார்கள். ரொம்ப போரடித்தால் பாராட்டு விழாவும் அதில் நடிகைகளின் நடனமும் நினைத்த நேரத்தில் கிடைத்தது. வரி விலக்கு என்றவுடன் படைப்பாளியின் சுதந்திரம் பற்றி வாய் கிழியப் பேசிய அறிவுஜீவிகள் மூச்சு விடவில்லை. தயாரிப்பாளரிடம் ’ஆங்கிலத்தில் தான் பெயர் வைப்பேன்’ என்று ஒருத்தனும் போராடியாகச் செய்தியும் இல்லை.



தியேட்டர்காரர்கள் முதல் தயாரிப்பாளர்கள் வரை யாரும் சினிமாவால் கிடைத்த லாபத்திற்கு வரி கட்டவேண்டிய அவசியம் இல்லாமல் போனது. தொடர்ந்து நிதிகளும் மாறன்களும் சினிமாத் தயாரிப்பில் இறங்கி ‘வரியில்லா வருமானத்தை’ அள்ளினர்.கூடவே கணக்கில் காட்ட முடியாதிருந்த கறுப்புக் பணத்தை வெள்ளையாக்கவும் இந்தச் சட்டம் மறைமுகமாக உதவி இருக்கலாம்.

பொதுவாக வரி விலக்கு என்பது அதை நுகர்வோரைச் சென்றடைவதே வழக்கம். முன்பு வரிவிலக்கு அளிக்கப்படும் நல்ல படங்கள்கூட குறைவான டிக்கெட் விலையில் திரையிடப்பட்டன. ஆனால் எங்கும் இல்லாத அதிசயமாக இந்த வரிவிலக்கு எந்த வித்த்திலும் சினிமா ரசிகர்களுக்கு பயனளிக்கவில்லை. டிக்கெட் விலை குறைப்பு பற்றி அரசு கண்டிப்பு காட்டவும் இல்லை.

வரி விலக்கில் காட்டப்பட்ட பாரபட்சம். மூத்த தமிழ்க்குடிகளின் குல தெய்வமான ’ஒச்சாயி’ பெயரில் எடுக்கப்பட்ட படத்திற்கு வரி விலக்கு மறுக்கப்பட்டது. ’சிவாஜி, வா குவார்ட்டர் கட்டிங்’ போன்ற ’செல்வாக்கு படைத்த ‘படங்களுக்கு தாராளமாக வரி விலக்கு அளிக்கப்பட்டது.

இதை விடவும் மோசமான விஷயம், நம் கவனத்திற்கு வராமல் போன விஷயம் இந்த கேளிக்கை வரி விலக்கால் மாநகராட்சி/நகராட்சிகளுக்கு ஏற்பட்ட வரி இழப்பு. பொதுவாக டிக்கெட்டில் குறிப்பிட்ட சத்வீதம் கேளிக்கை வரியாக வசூலிக்கப்பட்டு, அந்தந்த நகராட்சிகளின் வளர்ச்சிப்பணிக்கு அந்தப் பணம் செலவிடப்படும். ஆனால் இவர்களது சுயநலக் கூத்தில், நகராட்சிகள் நடுத்தெருவில் விடப்பட்டன.

அதற்கு நகராட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த பின் வருடம் (தோராயமாக) 50,000 ரூபாய் நிதி ஒவ்வொரு நகராட்சிக்கும் ஒதுக்கப்பட்டது, பலவித நிபந்தனைகளுடன். அதைப் பெறுவதற்குள் நகராட்சிகள் விழி பிதுங்கின. ஆனால் இந்தச் சட்டம் இயற்றப்படும் முன் நகராட்சிகளுக்கு தோராயமாக கேளிக்கை வரி வசூலாக இரண்டு லட்சம் வரை மினிமம் கிடைத்துக் கொண்டிருந்தது. (கணக்கீடு ’சுமாரான டவுன்’ ஆன கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் மூலம் பெறப்பட்டது. மற்ற நகராட்சிகள் பற்றி நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்)



இவ்வாறு எந்த வகையிலும் நியாயமற்ற ஒரு சட்டத்திற்கு இப்போது ஆப்பு வந்து சேர்ந்துள்ளது. வரி விலக்கு பெற வேண்டும் என்றால் கீழ்கண்ட நிபந்தனைகளை படங்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என அதிமுக அரசு அறிவித்துள்ளது:

1. திரைப்படம் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ”யூ" சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

2. திரைப்படத்தின் கதையின் கருவானது தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருத்தல் வேண்டும்.

3. திரைப்படத்தின் தேவையை கருதி பிறமொழிகளை பயன்படுத்தும் காட்சிகளைத் தவிர பெருமளவில் திரைப்படத்தின் வசனங்கள் தமிழ் மொழியில் இருத்தல் வேண்டும்.

4. திரைப்படத்தில் வன்முறை மற்றும் ஆபாசங்கள் அதிக அளவில் இடம் பெறுமேயானால் அத்திரைப்படம் வரிவிலக்கு பெறப்படுவதற்கான தகுதியை இழக்கும்.

இப்படி சுத்தி வளைத்துச் சொல்வதை விட ஜெ. நேரடியாகவே “வரி விலக்கு கிடையாது” என்று சொல்லி இருக்கலாம். அது நம் மக்களிடையே இன்னும் நல்ல பெயரை பெற்றுத் தந்திருக்கும்.

இருப்பினும் வழக்கம்போல் ’இதுவாவது கிடைத்ததே’ என்று இப்போதைக்கு திருப்தி அடைவோம். இது தொடரும் என்ற நம்பிக்கையில் அம்மையாரைப் பாராட்டுவோம்!

No comments:

Post a Comment