Tuesday 30 August 2011

ம‌க‌ளுடைய‌ மாதவிடாயை குடி: இல்லையேல் எட்டு வயதுக்குள் திருமணம் செய்துவை.



“மாஸி மாஸி ரஜஸ்தஸ்யஹா பிதா பிபதி கோனிதம்...”என்ன சொல்கிறது இந்த மநு தர்ம மந்திரம் புரியலையா? நீ ஏன்டா உன் பெண்ணுக்கு எட்டு வயது வரை கல்யாணம் செய்யாமல் இருந்தாய். கன்னிகா தர்மத்தை கால்களில் போட்டு மிதித்து விட்டாயே, இது பாவம் என்று உனக்குத் தெரியாதா? இந்த பாவத்துக்கு தண்டனை என்ன என்று உனக்கு தெரியாதா? என மநு ஸ்மிருதி அந்த அப்பாவி அப்பாக்களை பார்த்து அதட்டுகிறது.

இக்கால அப்பாக்களுக்கு அந்த தண்டனை என்ன என்று தெரியாமல் இருக்கலாம். அக்கால அப்பாக்களுக்கு மநு தர்மம் வகுத்த தண்டனைகள் தெரியும். அதனால் அவர்கள் ஆடிப் போயிருந்தார்கள். அந்த தண்டனையை அனுபவிப்பதை அவர்களால் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை. அந்த அசிங்கத்தை செய்வதை விடவும் தங்கள் ஆயுளையே முடித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் அந்த அப்பாக்கள். அப்படிப்பட்ட அளவுக்கு அது என்ன தண்டனை?இந்த ஸ்மிருதி விதியை எழுதுவதற்கு என் பேனா கூசுகிறது. இப்படிப்பட்ட ஒரு கருத்தை சுமந்து கொண்டிருப்பதற்காக சமஸ்கிருத பாஷையே கூச்சப்பட வேண்டும். அந்த விதியின் விளக்கத்தை உங்களுக்கு தமிழில் நான் சொல்லும்போது... தமிழின் தரம் கெட்டுவிடக் கூடாதே என நான் பயப்படுகிறேன்.

ம‌க‌ளுடைய‌ மாதவிடாயை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும். எட்டு வய‌துக்குள் உன் ம‌க‌ளை திரும‌ண‌ம் செய்து கொடுக்கா விட்டால் ருதுவாகி கல்யாணமாகாமல் அவள் இருக்கும் காலம் வரை உன் பெண்ணுடைய பஹிஷ்டை காலத்தில் அதாவது மாதவிலக்கு காலத்தில் வெளியேற்றப்படுமே கழிவு அதை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும். இப்படியொரு தண்டனையை பெறுகிறோமே என நீ வருந்த வேண்டும். அதற்காகத்தான் இந்த தண்டனை.

பெற்ற மகளிடம் அப்பா செய்ய வேண்டிய காரியமாக மநு தர்மம் சொன்னதை தெரிந்து கொண்டீர்களா? எழுதி முடித்தபின் என் பேனாவுக்கு குமட்டிக் கொண்டு வருகிறது. மரண தண்டனை விதித்து தீர்ப்பு எழுதிய பேனாவை முனை குத்தி முறித்துப் போட்டு விடுவதைப் போல இந்த பேனாவையும் தூக்கி எறிந்து விடலாமா என தோன்றுகிறது.

அடப்பாவிகளா? வறுமையாலோ, ஜாதக தோஷத்தாலோ, பெண்ணின் குறைபாடுகளாலோ கல்யாணம் தாமதமாகி எத்தனை பெண்கள் வீட்டில் இருக்கிறார்கள். ருதுவான பிறகு தான் கல்யாணமே பண்ண வேண்டும் என்பது பொதுவான விழிப்புணர்வாளர்களின் கருத்து.
அதையும் தாண்டி மகளின் மாத விலக்கை பருகச் சொல்கிற மநு தர்மம் எத்தனை கடுமை?... கொடுமை?... எரிகின்ற தீயில் எது நல்ல தீ என்பது மாதிரி... இந்த தண்டனையிலிருந்து தப்பிக்க இன்னொரு பரிகாரத்தையும் அருள்கிறது மநு தர்மம். அப்படியா? என்ன பரிகாரம்?.

இந்த கொடுமையான தண்டனை அதிலிருந்து தப்பிக்க பிராமணர்களுக்கு வருமானம் தருகின்ற ஒரு பரிகாரத்தையும் மனுதர்ம நூல் சொல்லி கொடுகிறது.அதிலிருந்து நீ தப்பிக்க வேண்டுமானால் அவளுடைய ஒவ்வொரு பஹிஷ்டையின் (மாதவிடாய்) போதும் ஒரு பசுவை பிராமணனுக்கு தானம் பண்ணிவிடு. இந்த கோதானம் தான் உனக்கு பரிகாரம்.

அதாவது... மகள் ருதுவாகி கல்யாணம் ஆகும் வரை அவளுக்கு எத்தனை பஹிஷ்டை நேருகின்றதோ... அத்தனை பசுக்களை தானம் பண்ணவேண்டுமாம். இப்போது புரிகிறதா... எங்கு போய் எங்கு வருகிறது மநு தர்மம் என்று? அந்த கோதானம் பண்ணுகிற செலவில் கல்யாணத்தையே நடத்தி விடலாம் என்கிறீர்களா? கொடுமையான தண்டனை அதிலிருந்து தப்பிக்க ‘வரும்படி’ தருகின்ற பரிகாரம். சரி, கோதானம் கொடுத்தோ, கொடுக்காமலோ கல்யாணம் ஆகிவிட்டது.அப்படி ஆகிவிட்டால் அடுத்த ஒருவருஷம் வரை அந்த மணமகனும், மணமகளும் தினமும் வீட்டில் ஒளபாசனம் பண்ணவேண்டும். அதென்ன ஒளபாசனம்? அதாவது அக்னி காரியம் தம்பதிகள் தினமும் அக்னி வளர்த்து பண்ணவேண்டிய ஹோமம். அந்த ஒரு வருடம் வரை அவள் கணவன் வீட்டில் இருந்தாலும், கணவனுக்கு பணி விடைகள் செய்தாலும், ஒரே மஞ்சத்தில் படுத்தாலும் தேக ஸம்பந்தம் (உடலுறவு) கொள்ளக்கூடாது.

ஒரு வருஷம் கழித்து ஒளபாசன கடமைகளை முடித்த பின்னர்தான் சாந்தி கல்யாணம் (சாந்தி முகுர்த்தம்). இதற்கிடையில் ஒரே மஞ்சத்தில் படுத்திருக்கும் இருவரும் ஒன்றுசேரக் கூடாது என்பதற்காக மஞ்சத்தில் அவளுக்கும், அவனுக்கும் இடையே ஒரு தர்பை (புல்லை) கிள்ளிப் போடுவார்கள். அந்த தர்பை தான் கந்தர்வன். அவன் இருவரும் இணையாமல் பார்த்துக் கொள்வானாம். இன்னமும் சிலர் சாஸ்திரத்துக்காக இதைத் தொடருகிறார்கள் என்பது ஹாஸ்யம்(சிரிப்பான விஷயம்).

இப்பழக்கம் ஆதிகாலத்தியது க்ருஹ சூத்திரம்(மநு தர்மம்) சொல்வது. இதன்படி, வகுத்தவர்களாலேயே நடக்க முடியவில்லை. என்ன ஆனது? இந்த சட்டம் அந்த ஒரு வருஷ காலம் என்பது 6 மாசங்களானது. அப்படி இருந்தும் என்னடா இவ்வளவு நாள்கள் ஆகிறதே என்று கொஞ்சமாய் குறைந்து மூன்று மாதங்கள் ஆனது. அடுத்தடுத்து வந்த தலைமுறையினருக்கு மூன்று மாதமே பெருங்காலமாக இருந்தது. அப்புறம் பார்த்தார்கள். 15 நாள்கள் ஆக்கினார்கள். அதுவும் தேய்ந்து 7 நாள்களானது. பின் கல்யாணம் ஆகி 3 நாள்கள் கழித்து என்று ஆகினார்கள். இப்போது அதுவும் போயி காலையில் கல்யாணம், ராத்திரி சாந்தி கல்யாணம் என்று ஆக்கினார்கள்.நமது சௌகரியத்துக் கேற்ப சாஸ்திரம் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதை போல் ஆக்கி விட்டோம் என்பதற்காக சொல்ல வந்தேன்.

சரி... மநு தர்மம் சொன்னபடி பால்ய கல்யாணம் பண்ணிக் கொண்டவர்கள் யாரையாவது காண்பிக்க முடியுமா?.

ஆக்கங்கள்: அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.

No comments:

Post a Comment