Saturday 17 December 2011

7ம் அறிவு-விமரிசனம்


இது சித்தவைத்தியனின் பெருமை பேசும் திரைப்படம்!

போதிதர்மர், நோக்குவர்மம் என காதில் விழுந்த டிரைய்லர் சொற்களால் ஈர்க்கப்பட்டு  ‘அட இது நம்ம படம் போல இருக்கே! என்ற ஆர்வத்தில் திரைக்கு வந்த இன்றே பார்த்துவிட வேண்டும் என்று, இன்னொரு தமிழார்வ நண்பரையும் இணைத்துக் கொண்டு, “தீபாவளியும் அதுவுமா..வீட்ல இருக்காம? என்ற மனைவியையும் முறைத்துக் கொண்டு, 7ம் அறிவைப் பார்த்தோம்.

அழிந்து போன தமிழருக்காகவும் அழியாத தமிழுக்காகவும் அர்ப்பணித்து ஏ.ஆர்.முருகதாஸ் சூர்யாவை வைத்து எடுத்துள்ள மாபெரும் திரைப்படம் ஏழாம் அறிவு.

தமிழ் மருத்துவமாம் சித்த மருத்துவரின் புதல்வியாய் சுருதி, தற்போதைய ஜெனிடிக் எஞ்சினியரிங் மூலம், மூத்த தமிழன் போதிவர்மனின்(சூர்யா) ஆற்றலை மீட்டெடுத்து, நம் மூலிகை மருந்துகளால் நாட்டு மக்களையும், நம் வர்ம-களரிக் கலையால் நாட்டையும் காக்கும் படம் 7ம் அறிவு.
தமிழனின் தன்னிகரற்ற அறிவை, ஆற்றலை இவ்வளவு தெளிவாகச் சொன்னமைக்கு முதலில் கை கொடுங்கள் முருகதாஸ்!

மகேந்திரவர்ம பல்லவனின் புதல்வனால் இங்கிருந்த களரியும் வர்ம்மும் சீனத்துக்குப் போய் குங்ஃபூவாகவும் கராத்தேயாகவும் ஆனது என்று திரையுலகில் முதலில் பதிவு செய்தமைக்குப் பாராட்டுக்கள்.

இங்கிருந்த தமிழ் மருத்துவமாம் சித்த மருத்துவம் சீனத்து மருத்துவத்துடன் சேர்ந்து செறிவூட்டப்பட்டது. சீன மருத்துவத்திற்கு மேலான, இணையான மருத்துவ அறிவு தமிழனிடம் இருந்தது என்பதை எடுத்துச் சொன்னமைக்கு தமிழனாய் சித்த மருத்துவனாய் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஈழத்தில் வீழ்த்தப்பட்ட்து தமிழனின் வீரம் தாழ்ந்ததால் அல்ல. 9 நாடுகளின் கூட்டணித் துரோகம் தான் என்பதைச் சொன்னமைக்கும், தமிழ் பேசுவதை தவிர்க்கும்/எதிர்க்கும் மயிர் நரைத்த உள்னாட்டு வெள்ளையரை தோலுரித்தமைக்கும், கூடுதல் நன்றியும் வணக்கமும்.
போதிவர்மனின் டி என்.ஏ-ஐ, ஜெனிடிக் எஞ்சினீயரிங் செய்து தான் தமிழனின் ஆற்றலை வெளிக் கொணர வேண்டும் என்றல்ல, உள்ளடங்கியிருக்கும் அந்த அறிவுச் சுரங்கத்தை முயற்சி எனும் ஆயுதத்தால் கூட கொண்டுவரமுடியும் என கருத்துச் சொன்னமைக்கும், மஞ்சளையும் வேப்பிலையும் சாமியாகச் சொல்லாமல் சயன்ஸாக சொல்லுங்கள் 6ம் அறிவை அடையாளம் காட்டியமைக்கும் சேர்த்து வாழ்த்துக்கள்.

இவ்வளவு செய்த நீங்கள், கொஞ்சம் அவசரப்பட்டு ஏன் இட ஒதுக்கீடை சாடுகிறீர்கள்? அந்த ஒதுக்கீடு கிடைக்காமல் போனால் இன்னமும் உண்மைத் தமிழனாகிய நீங்களும் நானும் என்ன இப்போது செய்திட முடியும்? கொஞ்சம் மனசாட்சியை மறந்து விட்டீர்களே
போதிவர்மர் காலத்தில் சொன்னப்பட்ட நூலாக, அவசரப்பட்டு சரகசம்ஹிதையைச் சொல்லிவிட்டீர்களே.. அதற்கு முன்பே தமிழனின் மருத்துவ நூலான தொல்காப்பியம் முதலான பல சித்தமருத்துவ தமிழ் நூல்களை அல்லவா பதிவு செய்திருக்க வேண்டும்? கொஞ்சம் தமிழறிஞர்களை ஆய்வறிஞர்களை சித்த மருத்துவர்களை கலந்தாய்வு செய்திருக்கலாமே!.. நியாமாகப் பட்டால் இப்போது கூட அந்த வரிகளை  நீக்க இயலுமா என யோசியுங்கள்! வரலாற்றுப் பதிவுப் பிழைகளும், முரண்களும் தான், இத்தனைகாலம் தன் வரலாறு தெரியாமல் தமிழனை கொண்டு சென்றிருப்பதை மறுக்க மாட்டீர்கள் என கருதுகிறேன்.

சிவப்புத்தோல் சுருதியின் நவீன தமிழும், நோக்குவர்மத்தால் நோகாமல் நொங்கு எடுக்கும் வில்லத்தனமும் கதையின் ஓட்டத்திற்கு கொஞ்சம் ஒட்டமறுப்பதும்  மேற்சொன்ன ஒரு சில பிழைகள் தவிர்த்துப் பார்த்தால், 7ம் அறிவு தமிழனின் திரையுலகப் பதிவில் மைல்கல்.

No comments:

Post a Comment