Saturday 3 December 2011

முல்லைப் பெரியாறு பிரச்னை: கேரள கட்சிகள் கையிலெடுக்கும் பின்னணி என்ன?




கேரளாவில் ஆளும் காங்கிரஸ் ஜனநாயக கூட்டணியின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகும் "திரவம்' தொகுதி இடைத்தேர்தலுக்காக, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையை, கேரள கட்சிகள் கையில் எடுத்துள்ளன என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. மேலும், அணை தொடர்பான வலுவை ஆராய குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. அதற்குள், முல்லைப் பெரியாறு அணையால், கேரள மாநிலத்தின் நான்கு மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்பட உள்ளது. எனவே, புதிய அணை கட்ட வேண்டும் என, கேரள கட்சிகள், பார்லிமென்டில் பிரச்னையைக் கிளப்பி வருகின்றன.

இதற்கெல்லாம், விரைவில் நடக்க உள்ள "திரவம்' தொகுதி இடைத் தேர்தல் தான் காரணம் என்று கூறுகின்றனர். திரவம் தொகுதியின் எம்.எல்.ஏ., வாக இருந்த ஜேக்கப், கடந்த அக்டோபர் மாதம் இறந்துவிட்டார். இவர், கேரள காங்கிரஸ் (ஜே) கட்சியின் தலைவராக இருந்தவர். இவர் இறந்ததால் ஏற்பட்ட காலியிடத்துக்கு நடக்கும் இடைத் தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் மட்டுமே, சட்டசபையில் மெஜாரிட்டிக்குத் தேவையான, 71 எம்.எல்.ஏ.,களை பெறமுடியும்.

திரவம் தொகுதி, முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தின் எல்லையில் உள்ளது.
இதனால், தேர்தல் பிரசாரத்தில், பிரதான இடத்தை முல்லைப் பெரியாறு பிரச்னையை, கேரள கட்சிகள் முன்நிறுத்துகின்றன என, குற்றம் சாட்டுகின்றனர்.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு உள்ள நிலையில், ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணை வழக்கில் ஏற்பட்ட தோல்வி மீண்டும் ஏற்பட்டுவிடும் என்று அச்சம் கேரள அரசுக்கு ஒருபுறம் இருக்கிறது. இதற்காக, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக மக்களை திரட்டும் வேலை நடந்தாலும், அரசியல் ரீதியாக அதில் ஆதாயமடைய கேரள கட்சிகள் போட்டிபோடுகின்றன என்ற குற்றம்சாட்டு எழுந்துள்ளது. அதன் வெளிப்பாடாகத் தான், "திரவம்' தொகுதி இடைத் தேர்தலை, கேரள கட்சிகள் அணுகுகின்றன என கூறுகின்றனர்.

எனவே, தேர்தல் முடியும் வரை முல்லைப் பெரியாறு பிரச்னையை கேரள கட்சிகள் முன்னிறுத்தும் எனவும் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment