Saturday 17 December 2011

மூட்டுவலி போக உணவும் சித்தமருத்துவமும்


சாயந்திர வேளை வீட்டுத் திண்ணையில் வழக்கமாக மணக்கும் நாகர்கோயில் ஆசான் தைலவாசனை, வயலில் இருந்து தாத்தா வந்துவிட்டதை அறிவிக்கும். ”ஏன் தாத்தா உங்க கால் இப்படி வளைஞ்சு இருக்கு?””’’ என்ற எங்கள் கேள்விக்கு உழைத்து இறுகி வறண்டு இருக்கும் மூட்டும் அதன் கீழ் வளைந்து இருக்கும் முழங்காலும் தைல மினுமினுப்புடன் வாசனையுடன் உழைப்பின் கதை சொல்லும். ”பட்டணத்துக்காரா! என்னடா..கால்ல பலம் வச்சிருக்கே! கொஞ்சம் அழுத்தி மிதிடா!” என்ற அவரது செல்லக் கோபம், ”அழுத்தினா வலி வரணுமே! வலி போகும் நல்லா அழுத்தி அமுக்கச் சொல்கிறாரே1” என்பது புரியாமல் அழுத்திவிட திண்ணையில் தலைக்குத் துண்டைமட்டும் தலையணையாய் வைத்து லேசாய் தாத்தா கண் அயர்வார்.

இன்று ”ஏன் இப்படி கிழவியாட்டம் எப்ப பார்த்தாலும் இடுப்பில் வலிக்கிறது; மூட்டு நோகிரதுன்னு புலம்பிறே? அப்படி என்ன வேல செய்து கிழிச்சிட்ட?,” என வரும் எகத்தாள வார்த்தைகள் கூடுலாய் எரிச்சலையும் கோபத்தையும் கொட்டும்.

வயசானா வரும் வலி மூட்டுவலி என்ற கதை ரொம்பவே மாறிப் போய், துள்ளிக் குதிக்க வேண்டிய இளம்பருவத்தில் இடுப்பில் வலி, கால் மூட்டில் வலி, தோள் மூட்டில் வலி, கழுத்து வலியோ..அப்படியே பரவி பின்பக்க தோள், முன்கை, முழங்கை என வலி..என இளமையில் விரட்டும் மூட்டு வலி இன்று ஏராளம். என்ன ஆச்சு இந்த மூட்டுகளுக்கு? பாட்டி தாத்தா சொத்தாக இருந்தது ஏன் இப்போது அவசரமாய் அனைவரையும் படுத்துகிறது?
நிறைய வாழ்வியல் மாற்றங்கள், மாடர்ன் கிச்சன் மறந்துபோன பாரம்பரியம், கூடிவிட்ட சொகுசுக் கலாச்சாரம், இவை தான் பொருத்துக்களை (JOINTS) இளமையிலேயே வலுவிழக்க செய்திருக்கிறது..அவற்றின் வலு கூட்டி, நம் வாழ்வையும் உற்சாகமாய் நகர்த்த(மன்னிக்க..ஓடவைக்க) என்ன செய்யலாம்?..இனி பார்க்கலாம்!

ஒரு மாருதி காரை தாங்கும் வலு உண்டு நம் ஒவ்வொரு கால் மூட்டுக்கும்...ஆனால் அதற்கான உணவும் உழைப்பும் சீராக இருந்திருக்க வேண்டும். அது மாறும் போது நம் நோஞ்சான் உடலைக் கூட தூக்க சேட்டை செய்யத் துவங்கும். இளம் வயது முதல் உணவில், சரியான அளவில் கால்சியம், இரும்பு, துணை கனிமங்கள் சேர்ந்த ஆரோக்கிய உணவுகள் அன்றாடம் சேர்ப்பது தான் மூட்டுப் பாதுகாப்பில் பிள்ளையார் சுழி.

1 முதல் ஒன்றரை வயது வரை கட்டாயமாகத் தாய்ப்பால், அதன் பின் 6-8 வயது வரை கண்டிப்பாய்த் தினசரி நவதானியக் கஞ்சி, கீரை சாதம், அடிக்கடி தேங்காய்ப்பால் சேர்த்த காலை உணவு, மோர், பீன்ஸ், அவரை, டபுள் பீன்ஸ், வெண்டைக்காய், கேரட் என காய்கறி கலந்த மதிய உணவு மிக மிக அவசியம். எனக்கு ஆசை தான்..சாப்பிடவே மாட்டேங்கிறான்..அவனோட மல்லாட எங்க எனக்கு நேரம்! லேட்டா போனா மானேஜர் முறைக்கிறார் என்ற சாக்கு போக்கு சொல்லாமல், என்ன வித்தை செய்தாவது சாப்பிட வையுங்கள். நாளைய உங்கள் சுமையையும் சேர்த்து சுமக்க, புன்னகையுடன் உங்கள் குழந்தை தயாராகும். கண்டிப்பாய்த் தினசரி 2 மணி நேரம் வியர்க்க விளையாட விடுங்கள். கம்ப்யூட்டரில் விளையாடும் ”ஸபாக் கேம்” அல்ல; கில்லியோ, கிரிக்கட்டோ நல்லா ஓடி வியர்க்க விளையாடும் விளையாட்டை ஊக்குவியுங்கள்; ”கால் வலித்தால் பைரன்னர்; தாக மெடுத்தால் கூல் டிரிங்கஸ்,” என மொக்கையாக இருக்கும் சொகுசு கிரிக்கட்டைக் காட்டிலும், வியர்க்க வியர்க்க ஓடி ஒடி விளையாடும் எந்த விளையாட்டும் உடலையும் உள்ளத்தையும் உறுதியாக்கும். குறிப்பாய் மூட்டுக்களை உறுதிப்படுத்தும்.

அதை விடுத்து பிள்ளையார் குளோனிங்காய் உடம்பை வளர்த்து, ”நான் வருவேன் பின்னே; என் செல்லத் தொப்பை வரும் முன்னே,” என பருத்த உடலுடன் பிள்ளை இருக்கின்றான் என்றால், “ அதல்லாம் வளர்ர பிள்ளை; நீங்களே கண்ணு வைக்காதீங்க,” என எவராவது சொன்னால் அதை நம்பி ஏமாந்து விடாமல், அவன் சரியான் எடையில் இருக்கிறானா? ஊளை சதை உள்ளதா என்பதை உங்கள் குடும்ப மருத்துவரிடம் உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், அதிக உடல் எடை தான் பெரும்பாலான மூட்டுவலிக்கு முக்கியக் காரணம். ஓடி ஆடி வள்ர்வது தான், ஆரோகியத்திற்கு குழந்தை போடும் முதல் மூலதனம்.

“புளி துவர் விஞ்சின் வாதம்”, என்கிறது சித்த மருத்துவம். அதிக புளிப்பு, மூட்டுகளுக்கு நல்லதல்ல. புளி அதிகம் சேர்க்கப்படும் புளிக்குழம்பு, காரக்குழம்பு, புளியோதரை இவற்றை மூட்டு முனங்கும் நபர்கள் விலக்குவது நல்லது. ”வாயுவெலாது வாதம் வராது” என்றும் சித்த மருத்துவப் பாடல்கள் கூறும். ”மண் பரவு கிழங்குகளில் கருணையின்றி பிற புசியோம்” என்று வாயுவை விலக்கி நோய் அணுகாது இருக்கவும் வழி சொல்கிறது சித்த மருத்துவம். ஆதலால் ஃப்ரென்ச் ஃப்ரை, உருளைக்கிழங்கு பொடிமாஸ், வாழைக்காய் பொரியல் என கேஸ் மெனுக்களை மூட்டுவலிக்கார்ர்கள், உடல் எடை குறைய விரும்புபவர்கள் விலக்குவது முக்கியம்.




வலி நிவாரணிகள் பக்கம் அதிகம் போகாமல் இருப்பது மிக மிக முக்கியம். ”நேரே மருந்துகடைக்கு போய் ரொம்ப வலிக்கிறது எனக் கூறி ஸ்ட்ராங்கா ஒரு மாத்திரை தாப்பா” என மிரட்டி, தினசரி வலிக்கு விடுதலை தேடுவது மோசமான பழக்கம். பல வலி நிவாரணிகள் கண்டபடி நெடுநாள் பயன்படுத்தினால் நிச்சயம் சிறுநீரகத்தைப் பாதிக்கும்.
வலி நீங்க சித்தமருத்துவத் தைலங்களை உங்கள் அருகமையில் உள்ள சித்தமருத்துவமனைகளில் பெற்று பயன்படுத்துவது நல்லது.

எண்ணைய் மசாஜ் எனும் பிழிச்சல் சிகிச்சை மூட்டுவலிகளுக்கு மிகச் சிறந்த ஒன்று. வலிஉள்ள மூட்டு தசைப்பகுதியில் நிறைந்து இருக்கும் நிண நீரை (lymphatic drainage) வெளியேற்ற அந்த சிகிச்சை சிறந்த ஒன்று. முக்கியமான விஷயம் சரியான திறமையான சிகிச்சை அளிப்பவரைத் தேர்ந்து எடுப்பது. 

”ஸ்பாண்டிலோசிஸ்” எனும் கழுத்து-முதுகு பக்க முதுகுதண்டுவட எலும்பின் மூட்டுக்கிடையிலான தட்டுகள் விலகலோ(disc prolapse), நகர்வோ இருப்பின் சரியான நோய்க் கணிப்பும், சிகிச்சையுடன் கூடிய உடற்பயிற்சி, இயன்முறை மருத்துவம் (physiotherapy), பிழிச்சல் சிகிச்சையும்(medicated oil massage) மிக அவசியம். அலட்சியமாய்.. ”ஏ..ராசா..கொஞ்சம் முதுகில் மிதிச்சு விடு,” என பேரனை மிதிக்க சொல்வது தட்டுக்களை(disc) தடாலடியாக விலக்க வைத்து நிரந்தரமாய் படுக்க வைத்தும் விடக் கூடும்.


தினசரி 40 நிமிட நடை.பின் 15 நிமிட ஓய்வு. அதைத் தொடர்ந்து 30 நிமிடம் மூச்சுப்பயிற்சியுடன் கூடிய சூரியவணக்கத்துடன் முதலான 4-5 யோகாசன்ங்கள், கால்சியம்-கீரை நிறைந்த, புளி வாயுப் பொருட்கள் குறைந்த உணவு இவற்றுடன் கண்டிப்பாய் ஒரு குவளை மோர், ஒரு கிண்ணம் பழத்துண்டுகள், 30-45 நிமிட மாலை நடை அல்லது விளையாட்டு இருக்குமா உங்களிடம்..மூட்டுவலி அதிகம் உங்களை அணுகாது.

No comments:

Post a Comment