Sunday 18 December 2011

குண்டான உடம்பிளைக்க என்ன செய்யலாம்?


”என்னது?..உன் பையன் அண்ணா மைதானத்தில் போய் ஜிம் விளையாடுறானா? ஏன் அங்கெல்லாம் அனுப்புறே! படிப்பு வரலைன்னாலும் பரவாயில்லே இந்த மாதிரி வேலையெல்லாம் இனி வேண்டாம்!” 25 வருடங்களுக்கு முன்பு கொஞ்சம் உடம்பை தேத்தலாம்னு பார் விளையாட மைதனத்திற்கு கிளம்பிய போது வீட்டில் கேட்ட வசனம் இன்னும் நினைவில் உள்ளது. காரணம் அந்தக் காலத்தில் ஜிம்-மிக்கு கதாநாயகர்கள் போவதில்லை. நம்பியாரும் அவர் கூடவே திரியும் ”பீட்டர், மொட்டை, கபாலி”-ன்னு ஒரு கண்ணில் கறுப்பு துணியெல்லாம் கட்டியிருக்கும் கூட்டம் மட்டும் தான் ஜிம்முக்கு போகும். விளைவு நல்ல தொப்பையும் தொந்தியுமா இருந்தாத்தான் சமத்து.! ஆனால் இன்றைய நிலைமை மாறியுள்ளது. ’போஷாக்கா இருக்கானே குழந்தே’, என கொஞ்சிய காலம் போய்..டாக்டர்! பையனோட பி.எம்.ஐ. கூடியிருக்குமோ என அக்கறையுடன் குழந்தையை தூக்கிவரும் பெற்றோர் அதிகரித்து உள்ளனர். தெருவிற்கு மூன்று ஜிம்னாசியம் தொடக்கப்பட்டு வருகின்றன.

காரணம்..கி.மு. கி.பி. என்ற நிலை மாறிப்போய், இந்திய அழகியல் வரலாற்றில் ஐ.மு .ஐ பி. என்ற நிலை உண்டாகி உள்ளது. அது என்ன ஐ.மு?.ஐ.பி என்கிறீர்களா? ஐஸ்வர்யாராய்க்கு முன் ஐஸ்வர்யா ராய்க்குப் பின் என்பதே அது. அழகு மீதான அக்கறை உலக அழகிப் பட்டம் அவர்கள் பெற்ற பின் பெருவாரியாக உயர்ந்திருப்பதைப் பல புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. சிக்ஸ் பேக் கற்பனையும் ஷாம்பு, கண்டிஷனர் வகையராக்களும் முன்பு எப்போதயும் விட பலமடங்கு கூடியுள்ளது. பல வீட்டில் துணி காயப்போடவாவது டிரட் மில் (அதுதாங்க..வீட்லயே நடக்கிற/ஓடுற மெஷின்) ஓரமாய் உடகார்ந்திருப்பதை பார்க்கலாம். 

12-13 வய்திலேயே ஆணும் பெண்ணும் மெல்லிடைக்கும் சிக்ஸ் பேக்கிற்கும் மெனக்கிடத் துவங்கியுள்ளது ஒரு ஆரோக்கிய வளர்ச்சியே.! அழகும் ஆரோக்கியமும் ஒன்றையொன்று சார்ந்திருப்பது. ஆரோக்கியமில்லாத அழகு அஸ்திவாரமில்லாத அரண்மணை மாதிரி. அழகும் ஆரோகியமும் இரண்டுமே சம்பந்தப்பட்ட முக்கிய பிரச்சினை உடல் பருமன். பல நாட்பட்ட நோய்களை அழைத்துவரும் விஷயம் அதிக உடல் எடை. சர்க்கரை நோய், இரத்தக்கொதிப்பு, மாரடைப்பு,மூட்டுவலி, நரம்பு தளர்ச்சி என தொடரும், இந்த பட்டியலால் தான் மருத்துவ வீட்டுச் செலவும் நாட்டுச் செலவும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 


உடல் எடை என்பது தடாலடியாக அதிகரிப்பதில்லை. கொழுப்பு பற்றிய அறிவு ஒவ்வொருவருக்கும் கொஞ்சம் அவசியம். கொழுப்பு என்பது உடலுக்கு ஆற்றல் தேவைப்படும் போது எடுத்துக் கொள்ள வைத்திருக்கும் தேக்கம். பெண்ணுக்கு 20-25%ம், ஆணுக்கு 12-15%மும் உடல் கொழுப்பு இருக்கும். ஆணைக் காட்டிலும் பெண்களுக்குக் கொழுப்பு அதிகம் என்று சொன்னால் உடனே சண்டைகட்ட வேண்டாம். உடலுக்குத் தேவையான கொழுப்பு(essential fat) பெண்களுக்கு அவர்களது மகப்பேறு பணிக்குத் துணையாக மார்பகம், கூபகம், தொடைப் பகுதியில் 12% கூடுதலாக உள்ளது. இந்த கூடுதல் கொழுப்புச் சத்து குழந்தைப்பேறு பணியை திறப்பட செய்ய உதவுகிறது. ஆண்களுக்கு இது 3% மட்டுமே. உடல் எடை அதிகரிப்பு பிரச்னை இது இல்லாத தேக்கிவைத்துள்ள கொழுப்பு அதிகரிப்பதால் மட்டுமே. உடல் மற்றும் தோலுக்கு அடியில் சேமித்து வைக்கப் பட்டிருக்கும் இந்த கொழுப்பு தான் கூடுதல் தீனி, குறைந்த உடலுழைப்பு, சில நேரங்களில் பாரம்பரியம் மற்றும் ஹார்மோன் குறைவு/அதிகம் காரணங்களால் அதிகப்பட்டு உடற்பருமன் நோயை உருவாக்குகிறது. உடல் முற்றும் ஒட்டுமொத்தமாய் பருத்து இருப்பதை Ovoid அமைப்பு என்றும், பருத்த தொப்பையுடன் இருப்பதை ஆப்பிள் அமைப்பு என்றும், தொடை அடிவயிறு பிட்டம் மட்டும் பருத்து இருப்பதை(அதிகம் பெண்களுக்கு ஏற்படும்) gynoid அமைப்பு என்றும் என குண்டுகளை மருத்துவ அறிவியல் வகைப்படுத்தி பட்டியலிடுகிறது. இந்த வகையில் நீங்கள் எந்த பிரிவு எனபதைப் பொறுத்து உங்கள் சிகிச்சையும், உணவுக்கட்டுப்பாடும், உடல் பயிற்சியும் மாறுபடும்.

“நான் எப்படி குண்டு? ஏன் குண்டு என்பதல்லாம் நல்லா தெரியும் எதனாச்சும் மருந்து சாப்பாடு கொடுத்து உடம்பைக் குறைக்க வழி இருந்தா சொல்லுங்க”- என்கிறீர்களா? நாம் நினைப்பது போல குண்டானவர்கள் அதிகம் சாப்பிடுவதில்லை. ஒல்லிப்பிச்சானும் உடம்பு வளார்த்தவ்ரும் ஒரே அளவில் தான் இப்போது சாப்பிடுவார்கள். ஆனால், குண்டாவதற்கு முன்னால் வெளுத்துக் கட்டியதும், ஊட்டி வளர்த்ததும் தான் இந்த வித்தியாசத்திற்குக் காரணம்.

உடலைக் குறைக்க பட்டினி வழியில்லை. முதலில் அளவான சாப்பாடு. குறைந்த கலோரியில் நிறைந்த நார் பொருள் கொண்ட உணவு மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். கல்யாண வீட்டிற்கு போனால், மணமக்களை வாழ்த்திவிட்டு நைசாக நகர்ந்துவிட வேண்டும். ”அவங்க கோவிச்சுப்பாங்க”- ன்னு சொல்லி பாதாம் கீரில் இருந்து பாயாசம் வரைக்கு சப்புகொட்டி சாப்பிட்டு வருவது சரியல்ல. நம் நாக்கிற்கு ஒரு அலாதி குணம் உண்டு என்கிறது அறிவியல். ஒரு சுவையான உணவு சாப்பிடத் துவங்கியவுடன் அதன் பிரியம் அடங்குமாம். உடனே அடுத்த மெனுவிற்கு நா அலையுமாம். அதனால் விருந்து, பஃபே எல்லாம் உடல் இளைக்க விரும்புவர்கள் கண்டிப்பாய்த் தவிர்க்க வேண்டும்.வீட்டிலும் சாம்பார் ரசம் மோர் மீண்டும் ரிவர்ஸ் கியரில் கொஞ்சமாய் புளிக்குழம்பு ஊற்றி ஒரு வாய் சாப்பிடுவது எல்லாம் நிறுத்த வேண்டும். ஒரு கப் சாதத்தை மூணு பங்காக பிரித்து கீரை காயுடன் பிசைந்து ஒரு பங்கு (அப்படி செய்வதால் அரிசியின் ஹை கிளைசிமிக் தன்மை குறைந்து லோ கிளைசிமிக் தன்மை ஆகும்-அதாவது அரிசியின் சர்க்கரைசத்து இரத்ததில் மெதுவாய்ச் சேரும்). அடுத்த பங்கு ரசம். கடைசிக் கவளம் மட்டும் மோர் என பிரித்து சாப்பிடுவது நல்லது. ரொம்ப முக்கியமான விஷயம் ஒரு கப் என்பது 150கிராம்தான். அடுக்கு டிபன் கேரியரின் கடைசி கப் என நினைக்க வேண்டாம்.

சில உணவுகள் உங்கள் உடல் எடைகுறைப்பு முயற்சியை ஊக்குவிக்கும். பூண்டு, வெந்தயம், இலவங்கப் பட்டை, நாருள்ள கீரை, லோகிளைசிமிக் உணவுகள் தினமும் உணவில் வேண்டும். சர்க்கரை, எண்ணெயில் பொரித்தவை முழுமையாக் தவிர்க்கவும். அரிசிக்கு பதில் வாரம் 4 நாட்கள் சிறு தானியங்களான கம்பு, தினை, சிறுசோளம் சாப்பிடவும். கார்சீனியா எனும் குடம் புளி உடல் எடையை குறைப்பதை பல அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. கோக்கம் புளி என்றும் கூறப்படும் இந்த மலபார் புளியில் சமைக்கலாம். இதன் சத்து இப்போது மருந்துகளாகவும் கிடைக்கிறது.
’இளைத்தவனுக்கு எள்ளு கொடு;கொழுத்தவ்னுக்கு கொள்ளு கொடு’ என்று பழமொழி உண்டு. உடல்எடை கூடியவர்கள் கொள்ளுரசம்-கொள்ளு சுண்டல் அடிக்கடி சாப்பிடலாம்.

முப்பது நாளில் இந்தி கற்பது சாத்தியம். முப்பது மாத்திரையில் உடல் மெலிவதோ இடுப்புச்சதையில் எண்ணெய் பூசி மெலிவதோ பெரும்பாலும் சாத்தியம் கிடையாது. ஆதலால் அக்கறையுடன் தொடர்ச்சியான உடற்பயிற்சி மற்றும் யோகா, ஆரோக்கியமான உணவு, என நெறிப்படுத்தி வாழ்வதே உடல் எடையை குறைக்க ஒரே வழி!

No comments:

Post a Comment