Tuesday 13 September 2011

அவமானம்.... சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவை உலுக்கிய டாப் 10 ஊழல்கள்...!



நன்றி கவிதா வீதி 

எலிக்குப் பயந்து ஓடி புலியிடம் சிக்கிய கதையாகி விட்டது இந்தியர்களின் நிலைமை. வெள்ளையர்களிடமிருந்து கஷ்டப்பட்டு சுதந்திரம் அடைந்துவிட்டது நமது நாடு. ஆனால் இன்னும் ஊழல் கொள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் கிடைக்கவில்லை.

1947க்குப் பிறகு சுதந்திர இந்தியாவை அதிகம் ஆட்டிப் படைத்த 10 பயங்கரமான ஊழல்கள் குறித்த ஒரு பார்வை...

1. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்

ஊழல்களுக்கெல்லாம் தாய் என்று போற்றுதலைப் பெற்றுள்ளது இந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்.

இந்த ஊழல் இதுவரை 2 மத்திய அமைச்சர்களின் பதவிகளைப் பறித்துள்ளது. நாட்டின் விவிஐபிக்களை சிறையில் தள்ளியுள்ளது.



முன்னாள் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா தனது பதவிக் காலத்தில் 2ஜி உரிமத்தை விதிமுறைகளை மீறி அடிமாட்டு விலைக்கு வழங்கினார், இதனால் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியது சிஏஜி எனப்படும் மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அலுவலகம். அதன் பிறகு நடந்தேறிய சம்பங்கள் உலகம் அறிந்தது.

நாட்டையே உலுக்கிய இந்த ஊழல் வழக்கு விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தால் பதவி விலகிய ஆ.ராசா, அவரது உதவியாளர் சண்டோலியா, தொலைதொடர்புத் துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ஸ்வான் டெலிகாம் நிறுவனர் பால்வா, கனிமொழி எம்.பி. உள்ளிட்ட பலர் தற்போது திஹார் சிறையில் உள்ளனர்.

லேட்டஸ்டாக தயாநிதி மாறனின் பதவியையும் இந்த 2ஜி ஊழல் பறித்ததது.

2. போலி முத்திரைத்தாள் மோசடி




அப்துல் கரீம் தெல்கி என்பவர் நாசிக்கில் பணம் மற்றும் முத்திரைத்தாள் அடிக்கும் இடத்தில் உள்ள ஊழியர்களை கையில் வைத்துக் கொண்டு போலியாக முத்திரைத்தாள் தயாரித்து அதை அரசு நிறுவனங்களுக்கே விற்பனையும் செய்து நாட்டையே அதிர வைத்தார்.

சுமார் 12 மாநிலங்களில் ரூ. 43,000 கோடிக்கு முத்திரைத்தாள் விற்கப்பட்ட தகவல் வெளியாகி அனைவரையும் அயர வைத்தார் தெல்கி.

இந்த வழக்கில் தெல்கிக்கு ரூ. 100 கோடி அபராதமும், 10 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

3. டெல்லி காமன்வெல்த் போட்டி ஊழல்



2010ம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்பு நிலவிய மெகா மற்றும் மகா குழப்பங்களை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. உலக அளவில் நம்மைப் பார்த்து பலரும் நக்கலடிக்கும் அளவுக்கு போட்டிக்கான ஏற்பாடுகளை முடிப்பதில் பெரும் காலதாமதம் செய்தனர்.

புத்தம் புதிதாக கட்டிய பாலம் உடைந்தது. சர்வேதச வீரர்களுக்காக கட்டிய குடியிருப்புகள் தங்கும் நிலையில் இல்லாமல் போனது. அறைகளுக்குள் பாம்பு வந்தது. உணவு சரியில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து இந்தியர்களை தலை குனிய வைத்து விட்டது.

பின்னர் நடந்த காமன்வெல்த் போட்டிகள் சிறப்பாக நடந்தேறின என்றாலும், சுரேஷ் கல்மாடியும், அவரது குழுவினரும் செய்த மிகப் பெரிய ஊழல்கள் குறித்த தகவல்கள் வெளியாகி அனைவரையும் அதிர வைத்தது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் டெல்லியில் கடந்த அக்டோபர் மாதம் 3-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடந்தது.

காமன்வெல்த் ஜோதி ஓட்டம், விளையாட்டு சாதனங்கள் வாங்கியது, கட்டுமானப் பணி என பல்வேறு பணிகளில் பெருமளவில் பல நூறு கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்தது தெரிய வந்து நாடே அதிர்ந்தது. இதில் ரூ. 6,000 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஊழலால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு இதைவிட 10 பத்து மடங்கு அதிகம் என்கிறார்கள்.

இந்த போட்டிகளை நடத்தியதால் உலக அரங்கில் இந்தியாவிற்கு அவப்பெயர் கிடைத்தது தான் மிச்சம்.

4. சத்யம் மோசடி




சத்யம் நிறுவன மோசடி தான் கார்ப்பரேட் உலகில் நடந்துள்ள மிகப் பெரிய மோசடியாகும். சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜு ரூ. 14,000 கோடியை சுருட்டி விட்டு, அதை ஹாயாக ஒப்புக் கொள்ளவும் செய்தார்.

தனது நிறுவனத்தில் 40 ஆயிரம் ஊழியர்களை வைத்துக் கொண்டு 53 ஆயிரம் பேர் பணி புரிவதாக பொய்க் கணக்கு காண்பித்தார். நிறுவனத்தின் வருவாயையும் பொய்யாகவே காண்பித்து வந்தார்.

சத்யம் நிறுவனமும் இப்போது மகிந்திரா நிறுவனத்திடம் போய் விட்டது. டெக் மகிந்திராவாக புது அவதாரத்துடன் அது நடை போட்டு வருகிறது.

5. பெல்லாரி சுரங்க மோசடி

கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டம் சுரங்கப் பணிகளுக்கு பெயர் போனது. தற்போது அது சட்டவிரோத சுரங்கத் தொழிலுக்கு முன் உதாரணமாக மாறியுள்ளது.

பெல்லாரியில் ரெட்டி சகோதரர்களால் நடத்தப்பட்ட சட்ட விரோதா சுரங்கத் தொழிலால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 16,000 கோடி அளவுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கர்நாடக லோக் ஆயுக்தா அறிக்கை தெரிவித்துள்ளது.



இந்த ஊழலில் கர்நாடக முதல்வர் எதியூரப்பாவும் சிக்கினார். அவரது குடும்பமே சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வருவதாக லோக் ஆயுக்தா குற்றம் சாட்டியது. அவர் தவிர குமாரசாமி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோருக்கு இந்த சட்டவிரோத தொழிலில் உள்ள தொடர்புகளை லோக் ஆயுக்தா புட்டுப் புட்டு
வைத்துள்ளது.

கர்நாடக அரசியலில் பெரும் புயலையும், பாஜகவில் பெரும் ஓட்டையையும் போட்டு விட்ட இந்த ஊழல் புகாரில் சிக்கிய எதியூரப்பா பெரும் போராட்டத்திற்குப் பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

6. மாட்டுத்தீவன ஊழல்

ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் பீகார் மாநில முதல்வராக இருந்த போது மாட்டுத்தீவனம் வாங்கியதில் ரூ. 900 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. இதையடுத்து அவர் பதவி விலகி தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கினார்.

7. ஆதர்ஷ் ஊழல்

மும்பையில் கார்கில் போரில் நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களின் குடும்பத்திற்காக கட்டப்பட்ட குடியிருப்பு ஆதர்ஷ். 6 அடுக்கு மாடியாக கட்டத் திட்டமிட்டு இறுதியில் 31 மாடி கட்டிடமானது. இதில் விந்தை என்னவென்றால் இந்த குடியிருப்பில் 40 சதவீத வீடுகள் ராணுவ வீரர் அல்லாதவர்களுக்கு ஒதுக்கப்பட்டது தான்.

ஏற்கனவே விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதுமில்லாமல், பாதுகாப்பு அமைச்சகத்தின் நிலத்தை ஆக்கிரமித்து அதில் கட்டிடத்தை எழுப்பியுள்ளனர். இந்த ஊழல் விவகாரத்தில் சிக்கி அப்போதைய மகாராஷ்டிரா முதல்வர் அஷோக் சவான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த ஊழலால் அரசுக்கு ரூ. 95 கோடி நஷ்டம் ஏற்பட்டது.

8. போபர்ஸ் ஊழல்


இந்திய ராணுவத்துக்கு போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பீரங்கி வாங்கப்பட்டதில் ரூ.1,500 கோடி அளவில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 1989-ம் ஆண்டில் வெளிச்சத்துக்கு வந்த இந்த ஊழல் விவகாரத்தால் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி பதவி இழந்து, புதிய பிரதமராக வி.பி.சிங் பதவி ஏற்றார்.



இந்த விவகாரத்தில் இடைத் தரகராக செயல்பட்ட வின்சத்தாவும், இத்தாலிய தொழில் அதிபர் ஒட்டாவா குவாத்ரோச்சியும் ஏறத்தாழ ரூ.64 கோடி ரூபாய் கமிஷன் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. தொழில் அதிபர் குவாத்ரோச்சி ராஜீவ் காந்தி குடும்பத்திற்கு நெருக்கமானவர். இநத நிமிடம் வரை குவாத்ரோச்சியின் நிழலைக் கூட தொட முடியவில்லை சிபிஐயால். கடைசியில் குவாத்ரோச்சியை வழக்கிலிருந்தே விடுவிக்கும் நிலைக்கு சிபிஐ தள்ளப்பட்டு விட்டது.

9. யூடிஐ மோசடி

யூடிஐ மோசடியில் முன்னாள் யூடிஐ சேர்மன் பி.எஸ். சுப்பிரமணியம் மற்றும் 2 செயற்குழு தலைவர்கள் எம்.எம். கபூர், எஸ்.கே. பாசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

யூடிஐ கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ம் தேதியில் இருந்து சிறிது காலத்திற்கு சைபர்ஸ்பேஸின் 40 ஆயிரம் பங்குகளை ரூ. 3.33 கோடி கொடுத்து ராகேஷ் மேத்தாவிடம் இருந்து வாங்கியது. அந்த பங்குகளுக்கு கிராக்கி இல்லாத பொழுது வேண்டும் என்றே அதிக விலை கொடுத்து வாங்கியது. இதனால் பங்குகளின் விலை உயர்ந்தது.

அந்த 4 பேரின் சதியால் ரூ. 32 கோடி நஷ்டம் ஏற்பட்டது என்று சிபிஐ தெரிவித்தது. சைபர்ஸ்பேஸ் பங்குள் விற்பனையை ஊக்குவிக்க அதிகாரிகளுக்கு ரூ. 50 லட்சம் லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சைபர்ஸ்பேஸ் இன்போசிஸ் விளம்பரதாரரான அரவிந்த் ஜோஹாரி கைது செய்யப்பட்டார். இந்த மோசடி செய்ததற்காக அவருக்கு நிறுவனத்திடம் இருந்து ரூ. 1.18 கோடி கிடைத்துள்ளது.

10. ஹர்ஷத் மேத்தா



இந்திய பங்குச்சந்தை தரகர் ஹர்ஷத் மேத்தா. அவர் கடந்த 1992-ம் ஆண்டு மும்பை பங்குச் சந்தையில் பங்குகளின் விலை திடீர் என்று உயரக் காரணமானவர். அவர் வங்கித் திட்டங்களில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி பல வங்கிகளில் கடன் வாங்கி பல்வேறு பிரிவுகளின் பங்குகளை வாங்கிக் குவித்து அவற்றின் விலையேற்றத்தி்ற்கு காரணமானார்.

அடிப்படையே இல்லாதப் பங்குகளை அதிக அளவில் வாங்கி, விலையேற்றி, முதலீட்டாளர்களைக் கவர்ந்தார். அவரது சதித் தி்ட்டம் கண்டுபிடிக்கப்பட்டபோது வங்கிகள் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டன. இதனால் பங்குச் சந்தை நிலைகுலைந்தது. அவர் மீது 72 குற்றங்கள் சுமத்தப்பட்டு, 600-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டது. (நன்றி தட்ஸ்தமிழ்)

இந்நிலையில் மேத்தா கடந்த 2002-ம் ஆண்டு மாரடைப்பால் இறந்தார். அவருக்கு எதிரான பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

"முத்திரை ஊழல்"


இந்த பத்து ஊழல்களெல்லாம் நாட்டின் பல்வேறு சமுதாயத்தினர் செய்த ஊழல்கள். ஆனால் இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் ஒரு சம்பவம் நடந்ததை நாட்டு மக்கள் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. அது நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்குச் சாதகமாக வாக்களிக்க எம்.பிக்களுக்கு கோடி கோடியாக கொடுக்கப்பட்ட பணம்தான்.



2008ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு லோக்சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. அப்போது திடீரென பாஜக எம்.பி அசோக் அர்கால் உள்ளிட்ட மூன்று எம்.பிக்கள் பெரிய பெரிய பைகளில் பணத்தைக் கொண்டு வந்து சபாநாயகர் இருக்கை முன்பு கொட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.

அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க தங்களுக்கு பெருமளவில் பணம் கொடுக்கப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியதைப் பார்த்து நாடே அதிர்ந்தது. பெருமை மிகுந்த லோக்சபாவில் கோடி கோடியாக பணத்தைக் கொட்டிய எம்.பிக்களால் நாடே அன்று வெட்கித் தலை குணிந்தது.

மற்ற ஊழல்களுக்கு சற்றும் குறையாதது இந்த எம்.பிக்களுக்குப் பணம் கொடுத்த விவகாரம் என்பதில் சந்தேகமில்லை.

படிப்பதற்க்கே தலைசுற்றுகிறதே இவ்வளவும் தெரிந்துக்கொண்டு நாம் சும்மாதான் இருக்கிறோம். ஒரு சில தரம் கெட்ட அரசியல்வாதிகலால் நம் இந்திய மானம் கப்பலேறுகிறது. இந்த ஊழல் ஒழிந்து நாடு என்று நல்ல நிலைக்கு நிறும்பும் என்ற ஏக்கத்தோடே கொண்டாட வேண்டியிருக்கிறது சுதந்தரத்தையும்..... 



நன்றி கவிதா வீதி

No comments:

Post a Comment