Tuesday 13 September 2011

எப்போது திருந்தும் ஏர்டெல்?



எழுதியவர் -சக்திவேல்

என்னதான் தொழில்நுட்பத்திலும், சேவையிலும் முதலிடத்தில் இருந்தாலும் வாடிக்கை யாளர்கள் கிட்ட சரியான அணுகுமுறை இல்லேன்னா அந்த நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம்தான். ஆனால் ஒரு மொபைல்சேவை தரும் நிறுவனத்துக்கு அவங்க எதிர்பார்த்ததுக்கும் அதிகமாக வாடிக்கையாளர்கள் வந்துவிட்டால்  அந்த நிறுவனத்தோட அடாவடிச் செயல்களுக்கும் அளவே இல்லாமப் போய்விடுகிறது. ஏர்டெல் நிறுவனத்தோட சமீபகால நடவடிக்கைகள் இப்படித்தான் இருக்கு.

இந்தியாவை பொருத்தவரைக்கும் செல்போன் துறையில ஏர்டெல், ஏர்செல், வோடபோன், டாடா இண்டிகாம், ரிலையன்ஸ், ஐடியா, டோகோமோ, எம்.டி.எஸ், வெர்ஜின், யுனிநார், எம்,டி.என்.எல், பி.எஸ்.என்.எல், வீடியோகான் உள்ளிட்ட பல நிறுவனங்கள் நாட்டின் பல மாநிலங்களில் செல்போன் சேவையை அளித்து வருகின்றன.

இதில் ஏர்டெல் நிறுவனம் தான் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவதாக நாம் அடிக்கடி செய்தித்தாள்களில் படிப்பதுண்டு. அதேபோல் மாதம்தோறும் புதியபுதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொள்வதிலும் ஏர்டெல் நிறுவனம் தான் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவதாக அந்த செய்திகள் நமக்கு சொல்கின்றன.

இதனாலோ என்னவோ ஏர்டெல் நிறுவனத்துக்கு செல்போன் சேவையில் அசைக்க முடியாத ‘நம்பர் ஒன்’ இடம் கிடைத்துள்ளது. ஆரம்பித்த புதுதில் மொபைல் சேவையை சிறப்பாக கொடுத்து வந்த ஏர்டெல் நிறுவனத்துக்கு அளவுக்கு அதிகமா பெருத்துப் போன வாடிக்கையாளர்களால் சமீபகாலமாக அது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை செய்வதில் சுணக்கம் கொண்டுள்ளது. அதைவிட  அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்கும் விதத்திலும், அவர்களை அணுகும் முறையிலும் பெருத்த மாற்றங்களை கொண்டுள்ளது. ‘விருப்பம் இருந்தா இரு இல்லேன்னா வெளியே போ…’ என்பது மாதிரி தான் தான் அதன் சமீபகால நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் அது ‘சிறப்பு சலுகைகள்’ என்ற பெயரில் தரும் எல்லா சலுகைகளும் அதன் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் விதத்தில் இருப்பதாக உள்ளது.

உதாரணம் -1 : முன்பெல்லாம் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டால் உடனே இணைப்பு கிடைத்து விடும், சேவையில் நமக்கு என்ன சந்தேகம் இருந்தாலும் எதிர் முனையில் இருப்பவர் எந்தவித சங்கடமும் இல்லாமல் நமக்கு பொறுமையாக பதில்கள் சொல்வார்கள். ஆனால் சமீபகாலமாக வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டால் ஒரு இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் பதிவு செய்யப்பட்ட செய்திகள் முழுவதையும் கேட்டு விட்டுத்தான் கஸ்டமர் கேர் அதிகாரியை நேரடியாக  தொடர்பு கொள்ள முடிகிறது. அவ்வாறு நாம் அவர்களை தொடர்பு கொள்ள கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் ஆகிவிடுகிறது.

அதே போல்,சேவையில் நமக்கு எந்த சந்தேகம் எழுந்தாலும் முழுமையாக பதில்களை சொல்வதில்லை. மாறாக சொல்லாமல், கொள்ளாமல் இணைப்பை துண்டித்து விடுகிறார்கள். குறிப்பாக டாக்டைம்  குறைபாடு, வேலிடிட்டி பிரச்சனை, நம்மிடமிருந்து முன் கூட்டியே பணத்தை எடுத்துக்கொள்ளும் VAS என்று சொல்லப்படுகின்ற மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளில் உள்ள பிரச்சனை போன்றவற்றில் நாம் ஏதேனும் சந்தேகம் கேட்டால் லைனில் இருக்கச் சொல்லிவிட்டு சில நொடிகள் கழித்து இணைப்பை தானாக துண்டித்து விடுவது அதிகமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒருநாளைக்கு அதிகபட்சம் மூன்று முறைக்கு மேல் வாடிக்கையாளர் சேவையை நீகள் தொடர்பு கொண்டு சந்தேகம் கேட்டால் அதன் பிறகு நீங்கள் வாடிக்கையாளர் சேவையில் அவர்களுடன் பேச முடியாதபடிக்கு செய்து விடுகிறார்கள்.

அதன்பிறகு மீண்டும் நீங்கள் வாடிக்கையாளர் சேவையில் இணைப்பை ஏற்படுத்த வேண்டுமென்றால் அதே ஏர்டெல் சேவை வைத்திருக்கும் வேறொருவரின் மொபைலி லிருந்தோ, அல்லது லேண்ட்-லைனில் இருந்தோ நீங்கள் கோரிக்கை வைக்க வேண்டும்.

உதாரணம் – 2 : முன்பெல்லாம் தினம் ஒரு குறுஞ்செய்தி, தினம் ஒரு பிக்சர்மெசெஜ் இவையெல்லாம் நாம் உபயோகப்படுத்த நமது மொபைலுக்கு தினமும் குறைந்தது ஐந்து முறையாவது அந்த லிங்கை அனுப்பி தொல்லை கொடுப்பார்கள். அதை நாம் தேர்ந்தேடுத்தால் மட்டுமே அதற்கு மாதக்கட்டணம் முப்பது ரூபாயை பிடித்து விட்டு அந்த சேவையை வழங்குவார்கள்.

ஆனால் சமீபகாலமாக நாம் தேர்ந்தேடுக்காமலேயே அவர்களாகவே ‘நீங்கள் இந்த சேவையை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி. இதற்குரிய மாதக்கட்டணத்தை நாங்கள் பிடித்தம் செய்துள்ளோம்’ என்று குறுஞ்செய்தி அனுப்பி இம்சிக்கிறார்கள்.

உடனே நாம் அந்த சேவையை துண்டிக்க சொல்லி வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட தேதியை சொல்லி அதற்குள் அதை நிறுத்தி விடுகிறோம் என்று சொல்லி வைத்து விடுகிறார்கள். ஆனால் பிடித்தம் செய்த முப்பது ரூபாய் ‘அவ்ளோ’ தான்.

உதாரணம் 3 : ‘சிறப்புசலுகை’ என்ற பெயரில் ஏர்டெல் நிறுவனம் அடிக்கும் கொள்ளைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. 70ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 85 ரூபாய் டாக் டைம்’ என்று சலுகை தருவார்கள். உடனே, அட… கட்டும் தொகையை விட கூடுதலாக பேசும் நேரத்தை தருகிறார்களே? என்று ரீசார்ஜ் செய்து விடக்கூடாது. ஏனென்றால் அந்த முழுத்தொகையையும் அவர்கள் சொல்லும் தேதிக்குள் நாம் பேசி முடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். இதைத்தான் புத்திசாலித்தனமாக ஏமாற்றுவது என்று நம்மூரில் சொல்வார்கள். நாம் கொடுக்கும் பணத்தின் மதிப்புக்கு பேச அவர்கள் காலக்கெடு விதிக்கிறார்கள். இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது?

அதேபோல் 120  ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 120 ரூபாய் முழு டாக்டைம் (full talk time) தருவார்கள். அந்த சலுகை ‘இன்று ஒருநாள் மட்டும்’ என்ற குறிப்புடன் நமக்கு குறுஞ்செய்தி வரும். அதனால் பணம் அதிகம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 120 ரூபாய்க்கு ஒரேநாளில் இரண்டு அல்லது மூன்று முறை ரீசார்ஜ் செய்து கொள்வார்கள். இதை கவனித்த ஏர்டெல் நிறுவனம் அதற்கும் ஆப்பு வைத்தது. ஆமாம், இப்பொழுதெல்லாம் முதல் ரீசார்ஜ்க்கு மட்டுமே முழு பேசும் மதிப்பு (full talk time)  தருகிறார்கள். அதுவும் கூட முழு டாக் டைமை உடனே தருவதில்லை. மீதி டாக்டைம் 48 மணி நேரத்துக்குள் உங்கள் அக்கௌண்ட்டில் கிரெடிட் செய்யப்படும் என்று சொல்வார்கள். நமக்கு இருக்கும் பிஸியான வேலைகளில் அவர்கள் மீதி டாக் டைமை கொடுத்தார்களா..? இல்லையா..? என்பதையே நாம் மறந்து விடுவோம். இதுதான் அவர்கள் நம்மை ஏமாற்றுவதற்கு வசதியாகிப் போய்விடுகிறது.

இப்படி ஏர்டெல் நிறுவனம் சமீபகாலமாக அதன் சேவையின் தரத்தை அதன் வாடிக்கை யாளர்களை முமுமையாக ஏமாற்றும் விதத்தில் மாற்றிக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் “நாம்தான் முதலிடத்தில் இருக்கிறோம் நாம்மை யாரும் அசைக்க முடியாது” என்ற அசட்டு தைரியம்தான்.

சேவையை தருவது மட்டுமே ஒரு நிறுவனத்தின் வெற்றியாகி விடாது அதில் ஒரு துளியாவது உண்மையும், நேர்மையும் கலந்திருக்க வேண்டும். அப்போது தான் ‘நம்பர் ஒன் இடம்’ நிலை யானதாக இருக்கும். சமீபத்தில் தமிழகத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை பார்த்த பிறகாவது ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய மனநிலையை மாற்றிக் கொள்ளும் என்று நம்புவோம். எப்போது திருந்தும் ஏர்டெல்?

இந்தக் கட்டுரையின் நோக்கம் : நாட்டில் மொபைல் சேவை தரும் எல்லா நிறுவனங்களின் செயல்பாடுகளிலும் குறைகள் இருக்கும்போது ஏர்டெல் நிறுவனத்தை மட்டும் குறிப்பிட்டு எழுத காரணம் என்ன?

நாட்டின் ‘NO1’ மொபைல் சேவை நிறுவனம் என்று சொல்லிக்கொள்ளும் ஏர்டெல் நிறுவனம் தான் மற்ற நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை பெற்று முதலிடத்தில் இருக்கும் ஏர்டெல் நிறுவனத்தைப் பற்றித்தான்  டிராய் அமைப்பிடம் அதிகமாக புகார்கள் சொல்லப்படுகிறதாம். கடந்த மூன்றாண்டுகளில், டிராயிடம் அளிக்கப்பட புகார்களில் 3571 புகார்கள் ஏர்டெல் நிறுவனத்தை பற்றியவை என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த தகவலை மக்களவையில் அமைச்சர் சச்சின் பைலட் தெரிவித்ததாக ‘தி எக்னாமிக் டைம்ஸ்’ நாளிதழ் கடந்த 2011-03-09 தேதி அன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இன்னொன்று, வாடிக்கையாளர்கள் என்றில்லாமல், கேள்வி எழுப்பும் யாருக்குமே ஏர்டெல் உரிய பதிலோ முறையான விளக்கங்களோ தர மறுப்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

இதை கவனத்தில் கொண்டு நாட்டில் முதலிடத்தில் இருக்கும் ஏர்டெல் நிறுவனம் மற்ற நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இந்தக் கட்டுரை.


எழுதியவர் -சக்திவேல்

No comments:

Post a Comment