Tuesday 13 September 2011

வைட்டமின்கள் மீது ஏனிந்த மோகம்?

எழுதியவர் shanmugavel 

சீரான உடல் வளர்ச்சிக்கும்,சில நோய்களைத் தடுக்கவும் அவசியமானது வைட்டமின்கள்.பள்ளி பாடப் புத்தகங்களில் படித்திருப்பார்கள்.அதை வைத்தே இது உடலுக்கு ரொம்ப நல்லது என்று நினைப்பார்கள் போல் தெரிகிறது.தேவையில்லாமல் இம்மாத்திரைகளை கடைகளில் வாங்கி விழுங்கும் மோகம் அதிகரித்து வருகிறது.



உயிர்ச்சத்து மாத்திரைகள் அதன் தேவையை தாண்டி அதிக அளவில் விற்பனையாகிறது.மல்டி விட்டமின் பற்றிய  கம்பெனிகளின் விளம்பரமும் ஒரு காரணம்.வைட்டமின் இ பாலுணர்வை அதிகரிக்கும் என்ற மனோபாவம் பெரும்பாலான இளைஞர்களிடம் இருப்பதாக விற்பனை பிரதிநிதிகள் கூறுகிறார்கள்.இளமையை தக்கவைக்கும் என்ற எண்ணமும் இருக்கிறது.இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

      அன்றாடம் நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் வைட்டமின்கள் போதுமானது என்பதே சரி.சில நாள்பட்ட வியாதிகளுக்கு (நீரிழிவு,இரத்த அழுத்தம் போன்றவை) மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.கிராமப்புற மருத்துவமனைகளில் இந்த மாத்திரைகள் அதிகம் பரிந்துரைக்கப்படுவதுண்டு.ஏழைகளுக்கு சத்துக்குறைவு சகஜம்.ஆனால் நகர்ப்புறத்தில் கடைகளில் கேட்டு வாங்கி உண்பவர்கள் வசதியானவர்கள்.



   அளவுக்கு அதிகமான உயிர்ச்சத்து மாத்திரைகள் பெரிய அளவு உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் .அதிக அளவு ஏ உயிர்ச்சத்து கல்லீரலை பாதிப்படையச்செய்கிறது.இது போன்ற சத்துக்கள் தோலில் சேமிக்கப்படுகின்றன.பல உயிர்ச்சத்துக்களின் அதிக அளவு உடலில் சேரும்போது தோல் புற்று நோய்க்கான வாய்ப்புகள் அதிகம் என்கின்றன ஆய்வுகள்.

        வைட்டமின்களில் நீரில் கரைபவை,கொழுப்பில் கரைபவை என்று உண்டு.பி,சி போன்றவை நீரில் கரையும்.இவை அதிகமானால் சிறுநீர் மூலம் வெளியேறிவிடும்.இம்மாத்திரை சாப்பிட்ட பின் மஞ்சளாக வெளியேறுவது அதனால்தான்.கொழுப்பில் கரையும்வைட்டமின்கள்(ஏ,டி,இ,கே) அதிகமானால்தான் பிரச்சினை.நீரில் கரைபவற்றால் இல்லை என்று சொல்லி வந்தார்கள்.



   நீரில் கரையும் உயிர்ச்சத்துக்களும் சிறுநீரக்க் கல்லை உருவாக்கும் என்கிறார்கள்.எனக்கு ஒரு முறை தோலில் ஏற்பட்ட ஒரு பிரச்சினைக்கு 500 மிகி வைட்டமின் சி மாத்திரை தரப்பட்ட்து.இப்போது கிடைப்பதில்லை.தடை செய்யப்பட்டுவிட்ட்து.ஒரு நாளைக்கு இந்த அளவு மிக அதிகம்.இதன் அதிக அளவு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொந்தரவுகளை உருவாக்கும்.ஒரு நாளுக்கு 45 மிகி போதுமானது.

   விளம்பரங்களை நம்பி நாமாக முடிவெடுப்பது தவறான போக்கு.இயற்கைக்கு மிஞ்சியது எதுவுமில்லை என்பதை உணரவேண்டும்.நமது உணவில் போதுமான அளவு பச்சைக்காய்கறிகள்,பழங்களை சேர்த்தாலே தேவையானது கிடைத்துவிடும்.


எழுதியவர் shanmugavel

No comments:

Post a Comment